Tuesday, March 28, 2017

Bagepalli Sesha Dasaru

கன்னட மூலம் : இணையத்தில் கிடைத்த புத்தகம்
தமிழாக்கம்: T.V. சத்ய நாராயணன்
Proof : திருமதி சவிதா ராவ் & திருமதி சுமதி ராவ்

***



ரமா சமுத்ரன குமாரி நின்ன சரி சமானர் யாரம்மா

கன்னட ஹரிதாசர்களின் பாடல்களை கேட்பவர்கள் மேற்கண்ட பாடலை கண்டிப்பாகக் கேட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று கேட்டால் பலர் தெரியாது என்றே சொல்வர். இந்தப் பாடலை இயற்றியவர் - பாகேபள்ளி சேஷதாசரு. 

தாசர் பிறந்த இடம் : துமகூர் மாவட்டத்தில் தேவராயனதுர்கா அருகில் இருக்கும் இரகசந்த்ரா ஆகும்.  சோசலே வியாஸராய மடத்தைச் சேர்ந்தவராகிய - நரசண்ணா மற்றும் மகாலட்சுமி (வெங்கம்மா என்றும் சொல்கிறார்கள்) தம்பதிகளுக்கு பிறந்த தாசருக்கு இயற்பெயர் சேஷகிரி. இவர் விச்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்தவர். 1865ம் ஆண்டு  பிறந்தார். அனைவரும் இவரை சேஷண்ணா என்று அழைத்து வந்தனர். துவக்கப் பள்ளியில் இவர் கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடங்களைக் கற்றவர் என்று தெரிய வருகிறது.

சுமார் 15-16 வயதில், சேஷண்ணர் தன் வீட்டைத் துறந்து, ஒரு துறவியைப் போல தனிமையில் தியானம் மற்றும் ஊர் ஊராகப் போய் ஹரிகதா உபன்யாசம், பஜனை முதலியவற்றில் ஈடுபட்டு வந்தார். அப்போது யாரிடமிருந்தோ, ஹரிதாஸ கீர்த்தனைகளை கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார். அப்போது ஒரு முறை, சுமார் 1890ம் வருடம், கோலார் மாவட்டத்தில் பாகேபள்ளி கிராமத்தில், வெங்கடாச்சார் மற்றும் காவேரியம்மா என்னும் கௌதம கோத்ரத்தைச் சேர்ந்த தம்பதியர் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்தார். இவரின் பக்தி மற்றும் நடவடிக்கைகளை பார்த்து பிடித்துப் போன அவர்கள், வெங்கம்மா என்னும் தங்கள் மகளை சேஷண்ணருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அன்றிலிருந்து, பாகேபள்ளி, சேஷண்ணரின் வசிப்பிடம் ஆயிற்று. ஆயினும், ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்வதை அவர் நிறுத்தவில்லை. போகுமிடங்களில் ஹரிகதை உபன்யாசங்கள் செய்து வந்தார். இவர் இயற்றிய பாடல்கள் சம்பிரதாய பாடல்களைப் போல் உள்ளதால், அவை உபன்யாசங்களில் பாடுவதற்காகவே இயற்றியுள்ளார் என்று ஊகிக்க முடிகிறது.

தாஸரின் முதல் அங்கிதம் ‘சேஷவிட்டல’ - இது அவர் தமக்குத் தாமே வைத்துக் கொண்ட அங்கிதம். அவரின் சமகாலத்திய கீர்த்தனாகாரர்களில், தாஸர் புகழ் பெற்றவராக இருந்தார். இப்படியாக, இரக்கசந்த்ர சேஷகிரி சேஷண்ண - பாகேபள்ளி சேஷதாசர் என்று அழைக்கப்படலானார்.

தாஸரின் குலதெய்வம் - தேவராயனதுர்காவின் ஸ்ரீபோக நரசிம்மஸ்வாமி. இவர் அவ்வப்போது திருப்பதி மற்றும் தேவராயனதுர்கா சென்று வந்தார். ஒன்றிரண்டு ஆண்டுகள் திருப்பதியில் வாழ்ந்தார் என்றும் தெரிய வருகிறது. தாஸரின்

சம்பந்தியாத குடிபண்டே வியாஸாச்சாரும் (மகன் ஸ்ரீகுருராஜாச்சார்யரின் மாமனார்) தாஸருடன் அவரது சஞ்சாரத்தில் பங்கு பெற்றிருந்தார்.

தேவராயனதுர்கா ஸ்ரீநரசிம்மரின் ரதோத்ஸவத்தில் ஆண்டுதோறும் தவறாது பங்கேற்றுவந்தார் தாஸர். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், தேவராயனதுர்காவின் முத்துமோகனதாஸரான - பரமப்ரிய சுப்பராய தாஸரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்களிடையே - அங்கிதோபதேச சந்தர்ப்பத்தில் - நடந்த உரையாடலை, 1965ம் ஆண்டு வெளிவந்த ‘பரமப்ரிய சுப்பராயதாஸர்’ என்ற புத்தகத்தில் ஸ்ரீகோவிந்தவிட்டலதாஸர் சுவாரசியமாக விவரித்துள்ளார்.

சக வருடம் 1824 ஸ்ரீப்லவ நாம சம்வத்ஸரம், (கிபி1902) மாக சுத்த தசமி தேதி 17-02-1902 அன்று, ஸ்ரீமுத்துமோகனதாஸர், சேஷதாஸரை தம் முதல் சிஷ்யராக தேர்ந்தெடுத்து, அவருக்கு உபதேசம் செய்து,  ‘பிராணநாத விட்டல’ என்ற அங்கிதத்தை வழங்கினார்.

அங்கிதம் வழங்கியபோது அவர் இயற்றிய பாடல் இதுவே:

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி

பிராணநாத விட்டலனே சலஹோ இவன
மானாபிமானக்கே ஒடெயனெந்தெனிஸி, ஸ்ரீ (பிராணநாத)

மாடபாரத கார்ய மாடி இத்தரு இவன
ரூடியொளு கைபிடதே சலஹபேகு
காடப்யாடுவனன்னு ஸ்ரீ நரஹரியே
ஜோடிஸி கரகளனு பேடிகொம்புவே நினகே (பிராணநாத)

ஹரிகுருகளல்லி சத்பக்தி ஹிரிதாகி இரலாகி
ஹரசபேகிவன நீ ஹருஷதிந்தா
சிரியரச ஈ கார்ய பரதிந்த மாடலு
கருணவாரிதி எம்ப நுடி சித்தவாகுவுதே (பிராணநாத)

ஹேகெந்து ப்ரார்த்திசுவே போகிசயனனே நினகே
பாகி கரகள முகிவே பாக்யபுருஷ
யோகிவந்தித தந்தே முத்துமோகனவிட்டலா
சாகுமாடதே இவன கருணிசோ ஸ்வாமி (பிராணநாத)

சேஷதாஸர் சுபாவத்தில் மிகவும் அமைதியானவர். அனைவரிடத்தும் மரியாதையோடு பழகுபவர். சிறுவர்களை அழைக்கும்போது பெயருடன் அன்னையா, அப்பையா, அம்மையா என்று சேர்த்து தனக்கு சரிசமமாக அன்போடு அழைப்பார் என்றால் பார்த்துக் கொள்ளவும்.

சேஷதாசருக்கு ஒரு மகன் - அவர் பெயர் குருராஜாசார்யார். இரு மகள்கள். அவர்களின் பெயர் லட்சுமம்மா மற்றும் கோதாவரம்மா. கோதாவரம்மா சிறுவயதிலேயே கைம்பெண் ஆகிவிட்டதால், அவருக்கு வாரிசு உண்டாகவில்லை.

மற்றவர்கள் மூலம் வாரிசுகள் உண்டாகி சேஷதாஸரின் குலம் வளர்ந்து வந்துள்ளது. சேஷதாஸரின் மகன் குருராஜாசார்யாருக்கும், ஸ்ரீசுப்பராய தாஸரின் மூலமாகவே, ஸ்ரீபிராணநாத மோஹன விட்டலா என்று அங்கிதம் கிடைத்தது.

சேஷதாசருக்கு பல சிஷ்யர்கள் இருந்துள்ளனர். அவற்றில் முக்கியமானவர் - நந்தகுடி ஷ்யாமதாஸர். இவரது அங்கிதம் ஸ்ரீநிதி மோஹன விட்டல. இன்னொரு சிஷ்யரின் பெயர் - ஸ்ரீவெங்கோப ராயர். இவரது அங்கிதம் தெரியவில்லை. மற்ற சிஷ்யர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சேஷதாஸர் இயற்றிய அங்கித பதங்கள் (அங்கிதம் கொடுக்கும்போது இயற்றப்பட்டும் பாடல்கள்) எதுவும் கிடைக்கவில்லை.

சேஷதாஸர் சிறுவயது முதலே மிகவும் வைராக்கியத்தோடு, ஒரு துறவியைப் போல வாழ்ந்து வந்தார். பாகேபள்ளியில் அவருக்கு தானமாகக் கிடைத்த ஒரு சிறிய வீடும், சிறிய அளவிலான நிலமும் இருந்தன. மிகவும் தேவையான பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். தாசருக்கு பலரும் வீடு, நிலம் ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வந்தபோது அவர் அவற்றை மறுத்து, மற்றவர்களுக்கு (தேவையானவர்களுக்கு) வழங்கச் செய்தார் என்று தெரியவருகிறது.

சேஷதாஸர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் மிக எளிமையானவை. சின்னச்சின்ன வாக்கியங்களில் மூன்று பத்திகளுக்குள் இருக்கின்றன. முன்பே சொன்னது போல், அவரின் பாடல்கள் உபன்யாசத்திற்காக எழுதி பாடி புகழ் பெற்றவை. இப்படி எழுதுவதற்கு அபார சாஹித்ய ஞானம் இருந்தாலே சாத்தியம் எனலாம்.

இந்த பாடல்கள் சுமார் 36 புத்தகங்களாக, அவரின் சிஷ்யரான ஸ்ரீவெங்கோபராயரிடத்தில் இருந்தன என்றும், அவருக்குப் பிறகு ஸ்ரீமூர்த்திராயர் என்பவர், தான் அச்சடித்துத் தருவதாக கொண்டு சென்றார் என்றும் தெரிய வருகிறது. ஆனால் அதற்குப் பிறகு, அந்தப் பாடல்களைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதுவரை கிடைத்த பாடல்கள் வெறும் 32 மட்டுமே. ஸ்ரீதாசருக்கு தன் பாடல்களின் மேல் இருந்த பற்றற்ற தன்மை மற்றும் மற்றவர்களின் முயற்சியின்மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகிறது. ஸ்ரீஹரியின் சித்தம் இதுவே என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தற்போது கிடைத்துள்ள பாடல்களில், பிரம்மண்ய தீர்த்தரைப் பற்றி பாடிய ஒரு பாடலைத் தவிர, தாசர்கள் - சன்யாசிகள் பற்றிய பாடல்கள் வேறெதுவும் கிடைக்கவில்லை. ஸ்ரீதாசர் அவர்களைப் பற்றி பாடவேயில்லை என்று நம்புவது கஷ்டமாக உள்ளது. ஸ்ரீஹரி மற்றும் இதர தெய்வங்களைப் பற்றி இவரது பாடல்கள் சிறிதேனும் நமக்கு கிடைத்துள்ளது என்பதே நமக்கு ஆனந்தமாக உள்ளது.

ஸ்ரீதாசர் அவரின் கையெழுத்து நமக்குக் கிடைக்கவில்லை. அவர் கைப்பட எழுதிய எந்த பாடலோ, வேறெந்த கடிதங்களோ இல்லை. அவரின் வீடு, நிலம் சம்மந்தப்பட்ட பத்திரங்கள் மட்டும் அவரது வம்சத்தவரிடம் தற்போது உள்ளன.

தாஸர் பயன்படுத்திய தாளகட்டை, தம்பூரா இவை அவரது வம்சத்தவரிடம் இருந்திருக்கவில்லை. அவற்றை தேடியபோது, அவை தாஸரின் சிஷ்யரான ஸ்ரீஷ்யாமதாஸரின் வம்சத்தவர்களிடம் - தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருப்பதாக தெரிய வந்தது. G.B.கோபிநாதராவ் அவர்களின் சீரிய முயற்சியில், அவை 10-1-2008 அன்று தாசரின் வம்சத்தினரிடம் பெரிய மனதுடன் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அவை பெங்களூரு கிரி நகரில் இருக்கும் தாஸரின் பேரன் B.G. நரசிம்மமூர்த்தி அவரின் வீட்டில் உள்ளன.

வருத்தப்படும்படியான விஷயம் என்னவென்றால், தாஸரது ஒரே ஒரு படம் - அவர் தாச அலங்காரத்துடன் இருக்கும்படியான படம் - மட்டுமே இதுவரை கிடைத்திருக்கிறது. அதுவே மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. தாசர் இயற்றிய பாடல்கள், சாஹித்யங்கள் பற்றிய அரிய விவரங்கள் யாரிடமேனும் இருந்தால், அவரது வம்சத்தவருக்கு தெரியப்படுத்தினால்,மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சேஷதாஸர் தன் இறுதிக்காலத்தை சிந்தாமணியில், அரசு வேலையிலிருந்த தன் மகன் குருராஜாச்சார் வீட்டில் கழித்தார். தன் அறுபதாம் வருடத்தில் சக 1847 ரக்தாக்ஷி ஆண்டு பாத்ரபத மாதம் வளர்பிறை சதுர்தசி வெள்ளிக்கிழமை அன்று (தேதி : 12-09-1924) தன் நண்பர் ஸ்ரீநிவாஸாச்சார் வீட்டில் அனந்தபத்பநாப பூஜை மற்றும் தீர்த்தபிரசாதம் முடித்து வந்திருந்தார். அன்றிரவு சுமார் 8 மணிக்கு ஸ்ரீபிராணநாத விட்டலனின் அடி சேர்ந்தார். அந்த நேரத்தில், பவுர்ணமி திதி வந்துவிட்டபடியால், சேஷதாஸரின் ஆராதனை பாத்ரபத பௌர்ணமி அன்று பின்பற்றப்பட்டு வருகிறது.


***


Sunday, March 12, 2017

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா

ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி. சௌபலா
தமிழில் : T.V.சத்ய நாராயணன்

கடந்த 20 ஆண்டுகளாக ஹரிதாச சாகித்யத்தை பரப்பிவரும் நம் குருவாகிய திரு ஹரதி பிரகலாத் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது இந்தப் பயணத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் அவரது மனைவியாகிய திருமதி. குஸுமா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு பிரகலாத் அவரின் தலைமையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் ஹரிதாச சாகித்ய வித்யாலயாவானது, இதுவரை சுமார் 1500 மாணவர்களுக்கு அவர்கள் ஹரிதாச சாகித்யத்தைப் பற்றி அறிய உதவியுள்ளது. நமக்குக் கற்றுக் கொடுப்பதில் நம் குரு காட்டும் உற்சாகம் மற்றும் நம்மைப் பாராட்டுவதில் அவர் காட்டும் முனைப்பு நமக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது.

தாச சாகித்யம் என்றால் சில பாடல்கள் தெரிந்து கொள்வது என்பது மட்டுமே என்றிருந்த நிலையில், அதற்கு தேர்வுகள் நடத்தி, மேன்மேலும் தெரிந்து கொள்ள வழிவகைகளைச் செய்தவர் நம் குரு அவர்கள். கடந்த 20 ஆண்டுகளாக இடைவிடாமல் பற்பல மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்து, அவர்களை பல்வேறு ஹரிதாசர்களைப் பற்றி தெரியவைத்த நம் குருவை நம் வாழ்நாள் முழுவதும் வணங்கினாலும் தகும்.

ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயா மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் துவக்கி, மாணவர்களை உருவாக்கி, தேர்வு எழுத வைத்து, அவர்களுக்கு சான்றிதழ்களைக் கொடுத்து, அனைவரின் வீட்டிலும் ஹரிதாச சாகித்யங்களை ஒலிக்கச் செய்வித்தவர் நம் குரு.

ஹரிதாச சாகித்யங்களை படிப்பதால், நாம் இஹ-பர சாதனைகளை அடைவதுடன், ஞான பக்தி வைராக்யத்தையும் அடையலாம்.

குருவின் மூலமே ஸ்ரீஹரியின் பிரசாதம் கிடைக்கும். பகவந்தனின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவதற்கு, குருவிடம் செலுத்தும் பக்தி மிகவும் முக்கிய காரணம் ஆகும். பகவந்தனின் மகிமை, அவரது கருணை ஆகியவற்றை நமக்கு அறிமுகம் செய்பவர் நம் குருவே ஆகும்.

கு - அஞ்ஞானம் என்னும் இருள்
ரு - ஒளி, ஞானம்
குரு - என்பவர், சிஷ்யரின் அக இருளைப் போக்கி, செய்யவேண்டிய நற்செயல்களை செய்யவைத்து,  தெரியவேண்டியவற்றை தெரியவைத்து அவரை முன்னேற்றுபவர்.

தகுதி வாய்ந்த ஒரு குருவின் மூலமே, ஸ்ரீஹரி தன் பக்தர்களை காப்பாற்றுகிறார். ஆகையால், முதலில் நம் குருவின் பாதம் பற்றி வணங்குவது முக்கியம். அவரிடம் பக்தி செய்வது நம் கடமையாகும்.

ஹரிதாச சாகித்யத்தில் என்ன இருக்கிறது என்பவர்கள் இதைப் படித்தால், இதில் என்ன இல்லை என்று கேட்கும் நிலை வரும். இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட, இதிலுள்ள ஸ்ரீவாதிராஜரின் மகிமைகள், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் (புரந்தரோபநிஷத்), நவவித பக்திகளை உள்ளடக்கிய கனகதாசரின் பாடல்கள், விஜயதாசரின் பாடல்கள், ஜகன்னாததாசர் அருளிய (ஸ்ரீமத்வரின் சர்வமூல கிரந்தங்களின் சாரமாகிய) ஹரிகதாம்ருதசாரம், சூளாதிகள், கோபாலதாசரி இயற்றிய கீர்த்தனைகள் இவற்றைப் படிக்க வேண்டும். ஞானம் பெறுவதற்கு இவையே வழிகாட்டியாகும். இவையே முக்திக்கு படிகளாகும்.

20ம் ஆண்டு விழாவில் நம் குருவான ஸ்ரீ பிரகலாத் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆயுர் ஆரோக்கியம் வழங்க வேண்டும் என்று நம் குருவர்ந்தர்யாமி ஸ்ரீபாவிசமீர வாதிராஜ அந்தர்யாமியான ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்கிக் வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் குருவின் சிஷ்யை
ஜி.சௌபலா


ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்

ஹரிதாஸ சாகித்யத்தால் ஏற்படட அனுபவம்

ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தமிழில் : T.V.சத்ய நாராயணன்

***

மிகவும் ஆசாரமான குடும்பத்தைச் சார்ந்தவளாகிய எனக்கு, சிறிய வயதிலேயே ஹரிதாஸ சாகித்யத்தில் பரிச்சயம் இருந்தது. காலையில் எழுந்ததுமே சுப்ரபாதம் கேட்பது, அதனைத் தொடர்ந்து திரௌபதி வஸ்திராபரண, கஜேந்திர மோக்ஷ, சுதாமா சரித்ரே, கேசவ நாம, விஜய கவச இவற்றையெல்லாம் கேட்டு / பாடிக்கொண்டே வேலைகளை செய்வது வழக்கமாக இருந்தது. வீட்டில் சாலிக்ராம பூஜை, வைச்வதேவம் ஆகியவை நடந்து கொண்டிருந்தன. தாரதம்ய பிரகாரம் ஹரி ஸ்தோத்திரங்கள், பஜனை செய்வது எனக்கு தெரிந்திருந்தது.

என் நண்பர் ஒருவர் ஹரிதாஸ சாகித்யத்தில் தேர்வுகள் எழுதினார் என்று கேள்விப்பட்டதும், மிகவும் சந்தோஷமடைந்து, நாமும் எழுதுவோம் என்று, உடனே நம் வித்யாலயாவுக்கு வந்து தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.

தேர்வுகளை தொடர்ந்து எழுத எழுத, ஹரிதாஸ சாகித்யத்தின் மகிமை, வீச்சு எனக்கு புலப்பட ஆரம்பித்தது. நம் குருவாகிய ஹரதி பிரகலாத் அவர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் / சந்தேகத்திற்கும் கொடுக்கும் விளக்கமானது / உதவியானது, நமக்கு ஒரு விடிவிளக்கைப் போல் மிகவும் பயனுள்ளது.

தேர்வுகள் எழுத ஆரம்பித்தபின், அதற்காக படிக்கத் துவங்கியபின், ஒவ்வொரு தேவரநாமாவிற்கும் பொருள் விளங்கத் துவங்கியது. சம்பிரதாயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்தது.

புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர், ஸ்ரீபாதராயர் என்று சில ஹரிதாசர்களின் பாடல்களையே பாடிக்கொண்டிருந்த எனக்கு, ஹரிதாஸ சாகித்யத்தின் பரம்பரையே தெரிய வந்தது. விஜயதாசருக்கு எப்படி மனக்கதவு திறந்து ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைத்ததோ, அதைப்போல எனக்கும் இந்த சன்மார்க்கத்தின் அறிமுகம் கிடைத்து, அதன்படி நடக்கவேண்டும் என்று தோன்றியது.

ஹரிதாச சாகித்யத்தின் அறிமுகம் கிடைத்தபின், ஒரு இருட்டறையிலிருந்து வெளியில் வந்து இந்த விசாலமான உலகத்தைப் பார்த்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. வியாசதத்வம் என்பது மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில், ஹரிதாசர்கள், வேதங்கள், உபநிஷத்துகள் இவற்றின் சாரத்தை எளிய பாடல்கள் மூலம் எழுதி, மக்களிடையில் பக்தி மார்க்கத்தை பரப்பினர்.

எந்த ஒரு கல்வியும் குரு இல்லாமல் கற்க முடியாது. தாசர் பாடல்கள் பற்றி தெரிந்திருந்தாலும், அவற்றின் பொருள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அவற்றைப் பற்றி மென்மேலும் படிப்பதால் மட்டுமே, ஹரிதாஸ சாகித்யத்தைப் பற்றி சிறிதேனும் புரிந்து கொள்ள முடியும். இந்த உதவியைத்தான் நம் குரு பிரகலாத் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறார்.

சிறப்பு மிக்க நம் வித்யாலயாவின் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு இந்த ஹரிதாஸ சாகித்யம் என்னும் பெருங்கடலை அறிமுகம் செய்துவைத்த நம் குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.

திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி
தாச சாகித்யம் 10th semester மாணவி
விவேகானந்த நகர், பெங்களூரு

***