Monday, September 11, 2017

Part 2 - சங்கீதத்தின் சிறப்பு & மேன்மை

Part 2 - சங்கீதத்தின் சிறப்பு & மேன்மை

2010ம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.
இது இரண்டாம் பகுதி. முதல் பகுதி அடுத்து வரும்.
கன்னடத்தில்: ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில் : T.V. சத்ய நாராயணன்.

***



வாக்யேயகாரர்கள்

கர்னாடக சங்கீதத்தில் வாக்யேயகாரர்களின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். சங்கீத சாஸ்திரத்தின் பரம்பரையை எந்தவித தடங்கல்களும் இல்லாமல் வளர்த்து வருபவர்களே வாக்யேயகாரர்கள். பாடல்களை இயற்றுபவர்களை வாக்யேயகாரர்கள் என்று அழைப்பார்கள். வாசங்கேயம் ச குருதே யஸ்ய ஸ: வாக்யேகாரக: என்று சங்கீத ரத்னாகர கிரந்தத்தில் ஷார்ங்கதேவர் தெரிவிக்கிறார். யாரொருவர் பாடல்களை இயற்றி, அதற்கான மெட்டுகளையும் இடுகிறாரோ, அவரே வாக்யேயகாரர். உத்தம வாக்யேகாரர்களிடத்தில் இந்த திறமை மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய வாக்யேயகார்கள், கர்னாடக சாஸ்திரிய சங்கீதத்திற்கு முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். வசன சாகித்யத்தை இயற்றி சமுதாயத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களில் சிலரின் வாழ்க்கைக் கதையையும், சங்கீதத்திற்கு அவர்களின் பங்கையும் சுருக்கமாக பார்க்கலாம். 

ஸ்ரீ புரந்தரதாசர் (1484 - 1564)


கர்னாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் ஸ்ரீபுரந்தரதாசர், கர்னாடக சங்கீதத்திற்கு வலிமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர். சங்கீதத்தைக் கற்க பாடும் துவக்கப் பாடங்களை நெறிமுறைப்படுத்தியதற்கான புகழ் இவரையே சேரும். இன்றைக்கும் ஒவ்வொரு மாணவரும், துவக்கப் பாடங்களின்போது பாடும் ஸ்வராவளிகள் மற்றும் பாடல்கள் தாசருடையதே ஆகும். தாசர் இயற்றிய பாடல்கள், உகாபோகங்கள் ஆகியவற்றை அனைவரும் பாடுவதை இன்றும் கேட்கலாம். தம் பாடல்களால் மக்களை நல்வழிப்படுத்தி, நல்ல தத்துவங்களை உபதேசித்து, மக்களை ஆன்மிகத்தின் பாதையில் திருப்பினார். ஸ்ரீஹரியின் பக்தராகி, நவகோடி நாராயணன் என்னும் பெயரில் நல்ல செல்வந்தராக இருந்தார். கர்னாடக சங்கீத உலகத்தின் மூலபுருஷர் இவரே.

புரந்தரகட் என்னும் ஊரில் வரதப்ப நாயக் மற்றும் லட்சுமக்கா தம்பதிகளுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஸ்ரீநிவாச நாயக் என்று பெயரிட்டனர். சிறு வயதிலேயே சாகித்யம், சங்கீதம், சமஸ்கிருதம், வேதம், பாராயணம், உபநிஷத்கள், அலங்கார சாஸ்திரம் ஆகிய எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தார் ஸ்ரீநிவாச நாயக். பின்னர் தந்தையின் வைர வியாபாரத்தைக் கவனித்தார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நற்குணவதியான சரஸ்வதி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீஹரியால் நடத்தப்பட்ட மூக்குத்தி நாடகத்தினால், தன்னிடம் இருந்த ஒன்பது கோடி மதிப்பிலான செல்வத்தையும் தானம் செய்து, ஸ்ரீவியாசராஜரின் சிஷ்யர் ஆனார். புரந்தரவிட்டலனின் பக்தனாகி, புரந்தரதாசர் என்று அழைக்கப்பட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணப்பட்டு, தான் இயற்றிய பாடல்களைப் பாடி, மக்களின் இதயங்களை வென்றார். 

கர்னாடக சங்கீதத்திற்கு தாசரின் பங்கு அளப்பரியது. புரந்தரவிட்டலா என்ற அங்கிதத்துடன் பாடல்கள், உகாபோகங்கள், சுளாதிகள், விருத்தநாமா, கத்யம், கண்டகாவ்யா (பெரிய பாடல்கள்) ஆகியவற்றை இயற்றினார். துவக்கப் பாடல்களின் பயிற்சிக்குத் தேவையான ஸ்வராவளிகளை சிந்தித்து, மாயாமாளவகொள என்னும் ராகத்தில் பாடல்களை இயற்றினார். இந்தப் பாடல்களை இன்றும் புதிதாக பாடல்களைக் கற்றுக் கொள்பவர்கள் பாடுகின்றனர். அதிகமான பாடல்களை கன்னடத்திலும், சில பாடல்களை சமஸ்கிருதத்திலும் பாடியுள்ளார். அவர் காலத்தில் வழக்கத்தில் இருந்த ராகம், தாளங்களில் பாடல்கள் பாடினார். சுமார் ஐந்து லட்சம் பாடல்கள் பாடினார் என்று விஜயதாசர் தமது ஒரு பாடலில் தெரிவிக்கிறார். குருவான வியாசராஜர் இவரது பாடல்களின் தொகுப்பை ‘புரந்தரோபநிஷத்’ என்று பெயரிட்டு கௌரவித்தார். நாரதரின் அம்சம் உடையவர் என்று அழைக்கப்பட்ட புரந்தரதாசர், புஷ்ய மாதம் அமாவாசையன்று ஸ்ரீமன்நாராயணின் திருவடிகளைச் சேர்ந்தார். உலகம் முழுவதும் இவரது ஆராதனையை இந்த நாளில் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். 

கனகதாசர் (1458 - 1510)



ஸ்ரீவியாசராஜரின் சிஷ்யர் - புரந்தரதாசரின் சமகாலத்தவர் கனகதாசர். ஆன்மிக தத்துவங்களை தன் பாடல்களில் சாதாரண மொழியில் பாடி, மக்களிடம் சேர்ப்பித்துள்ளார். தியானத்தின் மூலம் ஸ்ரீஹரியை வணங்கி, அவனை அடையலாம் என்னும் விஷயத்தை செய்து காட்டியவர். அந்தக் காலத்தில் சமூகத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள், இன்னபிற பிரச்னைகளை தன் பாடல்களில் பாடி, சமூகத்தை திருத்த ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே முயன்றார். 

தார்வாட் ஜில்லாவில் பாட (Baada) என்னும் கிராமத்தில் பேரே கௌடா மற்றும் பச்சம்மா என்னும் தம்பதிகளுக்குப் பிறந்தார் கனகதாசர். குருப என்னும் இனத்தைச் சேர்ந்தவர். திருப்பதி திம்மப்பனின் பக்தர்கள் ஆதலால், இவருக்கு திம்மப்பா என்று பெயரிட்டனர். அவர் தந்தையைப் போலவே இவரும் கிராமத் தலைவர் ஆனார். ஒரு முறை காகிநெலெ என்னும் கிராமத்தில் இருந்தபோது, இவருக்கு நிறைய செல்வம் (கனக) கிடைத்தது. அந்த செல்வத்தை அந்தக் கிராமத்தில் இருந்த கேசவன் கோயிலை புதுப்பிக்கக் கொடுத்து விட்டார். இந்த செல்வம் கிடைத்ததால், இவரை அனைவரும் கனகன் என்று அழைக்கலாயினர். இவரே பின்னர் கனகதாசரும் ஆனார். வியாசராஜரிடமிருந்து தாச தீட்சை பெற்றார். 

ஆதிகேசவ, பாடதாதிகேசவ, நெலெயாதி என்னும் அங்கிதங்களில் பல பாடல்களை இயற்றினார். முண்டிகே வகைப் பாடல்களையும் (ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளை சொல்லக்கூடிய பாடல்கள்) இயற்றினார். சிறந்த காவியங்களையும் இயற்றியுள்ளார். ஹரிபக்திசாரம், மோகன தரங்கிணி, ராமதான்ய சரிதே, நளசரித்ரே ஆகிய காவியங்களை ஷட்பதி என்னும் செய்யுளில் இயற்றியுள்ளார். வெங்கடேச கல்யாணம், கேசவ நாமா ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். 

சமூகத்தில் இருந்த பிற்போக்கு கருத்துகளை நீக்கி மக்களை முன்னேற்றும் வகையில் பாடல்களை இயற்றியுள்ளார். தம் பாடல்கள் மூலம் நல்ல தத்துவக் கருத்துக்களைச் சொல்லி அனைவரையும் இறைவனின் பக்தர்களாக மாற்ற முயன்றுள்ளார். இன்று வரை இவரது பாடல்கள் அனைவரது வீட்டிலும் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

ஸ்ரீதியாகராஜர் (1767 - 1847)



கர்னாடக சங்கீதத்தின் சரித்திரத்தில் வாக்யேகாரர்களின் அரசர் என்று அழைக்கப்படும் தியாகராஜர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.

தன் ஐந்தாவது வயதிலேயே, வால்மிகி ராமாயணத்தின் 24,000 ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து மிக்வும் அழகாக பாடிக்கொண்டிருந்தார். அவர் தந்தை ராமப்ரம்மரின் ராமாயண உபன்யாசத்தில் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருந்தார். 96 கோடி ராம நாம ஜபம் செய்து ஸ்ரீராமரின் அத்யந்த பக்தராகி, பலமுறை அவரின் தரிசனத்தைப் பெற்றவர். அவரின் பரம்பரையில் கர்னாடக சங்கீதம் வளர்ந்து மக்களின் மனம் கவர்ந்தது. அவரின் பாடல்களில் இறைத் தத்துவங்கள், நீதிகள், புராணங்களின் சாரங்கள் என அனைத்தும் இருந்தன. 

திருவாரூரில் ராமபிரம்ம மற்றும் சீதம்மா என்னும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே சாகித்யம், சங்கீதம், வேதம், பாராயணம், உபநிஷத்கள், அலங்கார சாஸ்திரம் ஆகிய எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். தன் எட்டாம் வயதில் வெங்கடரமண பாகவதரின் சிஷ்யராகி, அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே சங்கீதத்தில் விற்பன்னர் ஆனார். ‘தொரகுனா இதுவண்டி சிஷ்யடு’ என்று சபையினர் முன்னிலையில், இத்தகையை சிஷ்யனை பெற்றேனே என்று தியாகராஜரை இவரது குரு பாராட்டினார். ராமகிருஷ்ணர் என்னும் யதிகளிடமிருந்து தாரக நாமம் உபதேசம் பெற்றார். ஸ்ரீராமசந்திரனே அவருக்கு எல்லாமும் ஆனான். சாந்தம்மா என்பவருடன் திருமணம் நடந்தது - சீதம்மா என்னும் பெண்ணும் பிறந்தாள். பல சிஷ்யர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்து, தன் பாடல்களை பரம்பரையாக பாடும்படி வைத்தார். தம் எண்பதாவது வயதில், புஷ்ய சுக்ல பஞ்சமியன்று ஸ்ரீராமசந்திரனின் திருவடிகளை சேர்ந்தார். இன்றும் தியாகராஜரின் ஆராதனையை திருவையாறில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். நாட்டின் பற்பல இடங்களிலும் இவரது ஆராதனையை கொண்டாடுகின்றனர். 

தியாகராஜ என்னும் அங்கிதத்துடன், தன் பத்தாவது வயதிலிருந்தே தெலுங்கு மொழியில் பற்பல பாடல்களை இயற்றினார். பாடல்களுக்கு சங்கதிகளை வைத்து ஒழுங்குமுறைப்படுத்திய பெருமை தியாகராஜரையே சேரும். சமஸ்கிருதத்திலும் பாடல்களை இயற்றியுள்ளார். ஸ்ரீராமனின் தரிசனத்தைப் பெற்று, அந்த ஆனந்தத்தை தன் பாடல்கள் மூலமாக நம்மிடம் பகிர்ந்துள்ளார். பல புதிய ராகங்களை படைத்துள்ளார். நௌகா சரித்திரம், பிரகலாத பக்தி விஜயம், சீதா ராம விஜயம் ஆகியவை இவரது இசை-நாடகங்கள் (கேய நாடகம்) ஆகும். இவரது பற்பல பாடல்களில் பஞ்சரத்ன பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். உத்சவ சம்பிரதாயத்திலும் பஜனை சம்பிரதாயத்திலும் பல பாடல்கள் இயற்றியுள்ளார். தம் பாடல்கள் மூலமாக தியாகராஜர் எப்போதும் நம்முடனேயே இருந்து, சங்கீதத்தைப் பரப்பும் வேலைகளில் நமக்கு உதவி செய்கிறார் என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் (1775 - 1835)



திருவாரூரில் பிறந்த முத்துஸ்வாமி தீட்சிதர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். சங்கீத விற்பன்னர் மற்றும் வாக்யேகாரரான ராமஸ்வாமி தீட்சிதர் மற்றும் சுப்பம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தந்தையிடமிருந்தே சங்கீதத்தைக் கற்றார். வீணை வாசித்தல், வாய்ப்பாட்டு, சமஸ்கிருதம், மந்திர சாஸ்திரம், ஜோதிடம், அலங்கார சாஸ்திரம் ஆகியவற்றில் விற்பன்னராகத் திகழ்ந்தார். சிதம்பரநாதர் என்பவரிடம் மந்திரோபதேசம் பெற்றார். குருவுடன் காசிக்குப் போய் அங்கு ஐந்து ஆண்டுகள் மந்திரஜபம் செய்தார். கங்கை நதியில் நின்று ஜபம் செய்து முடித்தவுடன், அவர் கையில் ஒரு வீணை கிடைத்தது. காசியில் இருந்தபோது கர்னாடக சங்கீதத்துடன், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் கற்றார். சிறுவயதிலிருந்தே இவருக்கு மேற்கத்திய இசை மீது ஆர்வம் இருந்தது. தந்தையின் நண்பரான ஒரு கிருஸ்துவ தேவாலயத்தின் பாதிரியார் மூலமாக மேற்கத்திய இசையும் கற்றிருந்தார். இப்படியாக மூன்று வித முக்கியமான சங்கீதங்களையும் கற்றிருந்தார்.

காசியிலிருந்து திருவாரூருக்கு திரும்ப வரும்போது, திருத்தணியில் சுப்ரமணியர் பிரத்யட்சம் ஆகி, வாக்யேகாரர் ஆகுமாறு வரம் அளித்தார். தம் 16ம் வயதில், குருகுஹ என்னும் அங்கிதத்தில் பாடல்களை இயற்றத் துவங்கினார். மத்யம கால சங்கீத முறையை இவரது பாடல்களில் காணலாம். 

கர்னாடக சங்கீதத்தில் வயலின் இசையை சேர்த்தது தீட்சிதரே ஆகும். நாகஸ்வரத்திற்கான வழிமுறையை வடிவமைத்தவரும் இவரே. வர்ணம், பாடல்கள், ராகமாலிகை ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் இயற்றியுள்ளார். பல அரிதான ராகங்களை தன் பாடல்களில் பயன்படுத்தி அவற்றை மறுபடி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்களை இயற்றினார்.  நவக்கிரகப் பாடல்கள், பஞ்சலிங்க ஸ்தலப் பாடல்கள், நவாவரணப் பாடல்கள் ஆகியவற்றை இயற்றினார். மேற்கத்திய இசையின் மெட்டுகளுக்கு பாடல்களை இயற்றினார். சூளாதிகளின் சப்த தாளத்தை தன் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். ஸ்வரங்களுடன் தன் பாடல்களை எழுதி வைத்து, தன் பின் வரும் பரம்பரைக்கு பயன்படுமாறு விட்டு வைத்துள்ளார். 

ஷ்யாமா சாஸ்திரிகள் (1762 - 1827)



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகள், காமாட்சி தேவியின் உபாசனையை செய்து, தேவியின் தரிசனத்தைப் பெற்றவர். தம் பாடல்களில் காமாட்சி தேவியை பல்வேறு விதங்களில் புகழ்ந்து பாடியுள்ளார். தேவியை தாய் என்று வர்ணித்து பல பாடல்களில் பாடியுள்ளார். 

திருவாரூரில் பிறந்த மற்றொரு வாக்யேகாரர் - ஷ்யாமா சாஸ்திரிகள். இவர் தந்தை விஸ்வநாத ஐயர், இவருக்கு வெங்கட சுப்ரமண்யன் என்று பெயரிட்டு, செல்லமாக ஷ்யாமகிருஷ்ண என்று அழைத்து வந்தனர். பின்னர் ஷ்யாமா சாஸ்திரி என்னும் பெயரே பிரபலமடைந்தது. ஷ்யாமகிருஷ்ணனும் வேத அத்யயனம், வியாகரணம், சாகித்யம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். தன் தாய்மாமனிடம் சங்கீதத்தைக் கற்றார்.

பரம யோகியான சங்கீத ஸ்வாமிகள் அவ்வப்போது விஸ்வநாத ஐயரைப் பார்க்க வந்துகொண்டிருந்தார். அறிவாளியான சிறுவனைப் பார்த்து மகிழ்ந்து, அவனுக்கு சங்கீதத்தைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். ஸ்ரீவித்யா மந்திரத்தையும் சிறுவனுக்கு உபதேசித்தார். ஷ்யாமா சாஸ்திரிகள், குருவின் ஆசிரமத்தில் சங்கீதத்தைக் கற்றார். ராக ஆலாபனை, ராக தாள பல்லவிகளைப்  பாடுவதில் திறமை பெற்றார். ஷ்யாமகிருஷ்ண என்ற அங்கிதத்தில் பல ஸ்வரஜதி, வர்ணம், பாடல்களை இயற்றினார். பெரும்பாலும் தெலுங்கு மொழியில் பாடல்களை இயற்றினாலும், சமஸ்கிருதம் மற்றும் தமிழிலும் சில பாடல்களை இயற்றியுள்ளார். அந்தப் பாடல்களுக்கு தாள விவரங்களை எழுதி வைத்து, பிற்கால சந்ததியினருக்கு கொடுத்துள்ளார். தாளங்களில் மிகுந்த திறமை பெற்றவராக, 108 தாளங்களில் பாடல்களை இயற்றிய பெருமை இவருக்கு உண்டு. ஷரபநந்தன என்னும் புதிய தாளத்தை உருவாக்கினார். சாபுதாளத்தில், அனுலோம மற்றும் விலோம பாடல்களை இயற்றியுள்ளார். பல புதிய ராகங்களையும் உருவாக்கினார். சிந்தாமணி, கல்கட ஆகிய ராகங்கள் அவற்றில் முக்கியமானவை. இவரின் பாடல்கள், ராக பாவத்துடன் இருப்பதுடன், பக்தியையும் கொடுப்பதாகவும் உள்ளன. சில பாடல்களில், ஸ்வர சாகித்யத்தில் சிட்ட ஸ்வரங்களும் காணப்படுகின்றன. 

டாக்டர். முத்தையா பாகவதர் (1877 - 1945)



20ம் நூற்றாண்டில் கர்னாடக சங்கீதத்தை ஆராய்ந்து அதில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் ஸ்ரீ முத்தையா பாகவதர். மதராஸ், திருவாங்கூரில் சங்கீதப் பள்ளிகளை நிறுவி, அப்பள்ளிகளில் முதல்வராக பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. ஸ்வாதி திருநாள் அவரின் பாடல்களை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்த்தவர் இவர். மைசூர் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்து சாமுண்டீஸ்வரியின் மேல் 108 பாடல்களை இயற்றி மைசூர் மகாராஜாவின் மரியாதைக்குப் பாத்திரமானார். இப்படி பல அரசர்களிடமிருந்தும் பரிசுகளைப் பெற்றார். சங்கீத சம்மேளனங்களைக் கூட்டுவதற்கு அவர்களிடமிருந்து பல உதவிகளைப் பெற்றார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சங்கீத சம்மேளனத்தில் உற்சாகமாக பங்கு பெற்றார். பல இடங்களில் கதாகாலட்சேபங்களை நடத்தி புகழடைந்தார். 

திருநெல்வேலி அருகேயுள்ள ஹரிகேசநல்லூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை லிங்கம் ஐயர், இவரது சிறுவயதில் சமஸ்கிருத சாகித்யங்களை கற்றுவித்தார். சங்கீத வித்வான் சாம்பசிவ ஐயரிடமிருந்து சங்கீதங்களைக் கற்றுத் தேர்ந்தார் பாகவதர். மைசூர், திருவாங்கூர் சமஸ்தானங்களில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். கர்னாடக சங்கீதத்தில் பல தேர்வுகளை நடத்துவதற்கு காரணகர்த்தராக இருந்தார். தேர்வுக் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். 

வாங்யேயகாரராக பாகவதர், தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல்களை இயற்றினார். பல புதிய ராகங்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், பல அபூர்வமான ராகங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். ஹரிகேஷ என்னும் அங்கிதத்தைப் பயன்படுத்தினார். 

பல சமஸ்தானங்களிலிருந்தும், அரசர்களிடமிருந்தும் பல விருதுகளை / பட்டங்களை பெற்றிருந்தார். சங்கீத சிகாமணி, சங்கீத கலாநிதி விருதுகளைப் பெற்றார். சங்கீத கல்பத்ரும என்னும் சங்கீதப் புத்தகத்தை, மலையாள மொழியில் மொழிபெயர்த்தார். சமஸ்கிருத மொழியில் தியாகராஜ காவியம் என்னும் நூலை இயற்றினார். பெளகவாடி வரதராஜ அய்யங்கார் மற்றும் வைத்யலிங்கம் ஆகியோர் இவரது சிஷ்யர்களில் முக்கியமானவர்கள். 

அக்கமகாதேவி (1130-1160)


சமூக சீர்திருத்தங்களில் பெண்களின் பங்கு சற்று குறைவானதாகவே இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமூக சீர்த்திருத்தங்களில் பங்கு பெறலாம் என்று சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னரே செய்து காட்டிய முதல் பெண்மணி என்றால் அது கர்னாடகத்தின் அக்கமகாதேவி எனலாம். 12ம் நூற்றாண்டிலேயே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இல்வாழ்க்கையைத் துறந்து, சென்னமல்லிகார்ஜுனனே தன் கணவன் என்று நம்பினார். மிகுந்த வைராக்கியத்துடன், ஆண்களை எதிர்த்து, சமூக சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர போராடியவர் இவர். தம் சிந்தனைகளை தெளிவான கன்னடத்தில் எழுதித் தெரிவித்தார். ஆண் பெண் பேதமில்லாமல், ஜாதிமத பேதமில்லாமல் அனைவரும் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளும் வகையில் தம் கருத்துக்களை தெரிவித்தார்.

உடுதடி கிராமத்தில், நிர்மல் மற்றும் சுமதி தம்பதியினரின் மகளாகப் பிறந்தார். சிவபக்தர் ஆனார். ஸ்ரீசைலத்தின் சென்னமல்லிகார்ஜுனனே இவரது வணங்குதற்குரிய தெய்வம். திருமணம் செய்து கொள்ளவேண்டுமெனில் தமக்கு சில நிபந்தனைகள் உண்டு என அறிவித்து, அவற்றை ஏற்றுக்கொண்ட கௌசிக அரசரை மணந்தார். பின்னர் அந்த நிபந்தனைகளை அரசர் மறக்கவும், இல்வாழ்க்கையையே துறந்து துறவியானார். அனைவருக்கும் அக்கா ஆகி, அக்கா மகாதேவி என்று அழைக்கப்படலானார். சிவபக்தரான பசவண்ணா, அல்லண பிரபு, சித்தராமண்ண ஆகியோர் இவரது சமகாலத்தவர் ஆவர்.

சென்னமல்லிகார்ஜுனனையே கணவனாக வரித்துக் கொண்டு, சென்னமல்லிகார்ஜுன என்ற அங்கிதத்துடன் பல பாடல்களை, வசன சாகித்யங்களை இயற்றினார். இந்தப் பாடல்களுக்கு ராக தாளங்களை நிறுவாமல், தம் இஷ்டத்திற்குப் பாடலானார். சிறந்த தத்துவங்களை தெளிவான கன்னடத்தில் எழுதி அனைவருக்கும் தெரியப்படுத்தினார். தம் கருத்துகளால் அன்றைய சமூகத்தில் மதிக்கப்படலானார். 

பசவண்ணா (1130-1162)



சிறந்த தெய்வ பக்தரான பசவண்ணா அவர்கள், சமூக சீர்த்திருத்தவாதியும்கூட. வீரசைவ மடத்தை நிறுவியவர். 12ம் நூற்றாண்டில் சமூக மேம்பாடுக்காக கன்னடத்தில் வசன சாகித்யங்களை இயற்றியவர். கர்நாடக மக்களுக்கு இது மிகவும் பெருமை கொள்ளக்கூடிய விஷயமாகும். 

பாகேவாடியில், மாதரஸ மற்றும் மாதலாம்பிகே என்னும் தம்பதிகளுக்குப் பிறந்தார் பசவண்ணா. பிஜ்ஜளனின் அதிகாரியாகி அரசு வேலை பார்த்து வந்தார். கூடவே சிவபக்தராகி, தர்மபிரசாரமும் செய்து வந்தார். கூடல் சங்கமேஸ்வரரின் பக்தராகி - கூடல சங்கமதேவ - என்னும் அங்கிதத்துடன் பற்பல வசன சாகித்யங்களை கன்னடத்தில் இயற்றினார். இவற்றிற்கு ராகம், தாளம் மற்றும் வாத்தியங்களின் விஷயங்களையும் தெரியப்படுத்தியுள்ளார். சமூக முன்னேற்றத்தில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இத்தகைய சிவபக்தர்களின் சரித்திரத்தை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். 

இத்தகைய கதைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம், படிப்பவர்களும் சமூக முன்னேற்றத்தில் தம் பங்கினை செலுத்த முன்வரக்கூடும். சங்கீதத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவரது பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. மிகவும் சிறிய வயதிலேயே இவர் இறந்துவிட்டாலும், தம் பாடல்களால் சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பசவண்ணா அவர்கள். 

பலருக்கு சங்கீத சாஸ்திரங்களின் விஷயங்களைப் புரிந்துகொள்வதில் கஷ்டமாக இருந்தாலும், சங்கீதம் படிப்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஹரிதாசர்களை, வாக்யேயகாரர்களைப் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். 

பாடகர்கள், புரந்தரதாசர், தியாகராஜர் பாடல்களுடன், வசன சாகித்யமும் பாடும் வழக்கம் உண்டு. இப்படியாக வசன சாகித்யமும் சாஸ்த்ரிய சம்பிரதாயப்படி பாடும் வழக்கத்தையும் சில பாடகர்கள் கொண்டிருந்தார்கள். 

ஓர்வாய் லட்சுமிதேவம்மா (1865 - 1950)


பெல்லாரி மாவட்டத்தில் கொப்பர நரசிம்ம க்‌ஷேத்ரம் மிகவும் புகழ் பெற்றது. இந்த மாவட்டத்தில் சொண்டூர், மாங்கனீஸ் மற்றும் மைக்கா தாதுப் பொருட்களுக்கு பெருமை வாய்ந்தது. பக்திக்கும் பெயர் பெற்ற ஊர் இது. ஹரப்பனஹல்லி அவ்வா, ஹெளவனகட்டே கிரியம்மா இவர்களுடன் முக்கவிகள் என்று பெயர் பெற்ற ஓர்வாய் லட்சுமிதேவம்மா இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார். 

சொண்டூர் ஒரு சிறிய சமஸ்தானமாக இருந்தது. அன்றைய காலத்து அரசர்களும் மிகவும் பக்திமான்களாக இருந்தனர். அங்கு லட்சுமணராயர் என்பவர் திவானாக இருந்தார். இவரது மனைவி கோதாவரிபாய். இந்த தம்பதியினரின் பெண்ணே லட்சுமி தேவம்மா - 1865ல் பிறந்தார். சிறு குழந்தை தன் பால்ய லீலைகளின் மூலம் பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஐந்தாம் வயதை அடைந்த குழந்தை, பள்ளிக்குச் செல்லும் வயதை அடைந்தது. ஆனால், அந்த கால வழக்கப்படி கோதாவரிபாய் தன் தம்பியான ஓர்வாய் மத்வராயர் என்பவருக்கு பால்ய விவாகம் செய்து வைத்தார். 

இவரின் திருமணம் ஆனபிறகு, அந்தக் காலத்தைப் போலவே பிறந்த வீட்டிலேயே இருந்து வந்தார். அந்தக் காலத்தில் பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இல்லாததால், வீட்டில் தந்தையே கன்னடம், சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். தேவம்மா பக்திப் பாடல்கள், தினப்படி கர்மானுஷ்டாங்கள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ஹரப்பனஹல்லி அவ்வா’வும் அதே காலகட்டத்தில் வாழ்ந்து வந்தபடியால், அவருடன் நட்பு பூண்டார். அவரின் பாடல்களை எந்நேரமும் பாடியவாறு இருந்தார். மேலும், தானே சொந்தமாக எழுதிய பாடல்களையும் பாடிவந்தார். 

இது சனிக்கிழமை பாடவேண்டிய பாடல்; இது வெள்ளிக்கிழமையின் பாடல்; இது சிராவண மாசத்தின் சனிக்கிழமையின் பாடல் என்று சம்பிரதாயப்படி பாடல்களை வீடுகளில் பாடுவதை இன்றும் காணலாம். அதே போல் அன்றும் பாடிக்கொண்டிருந்தனர். 

இவர் சிறுமியாக இருந்தபோதே தந்தையிடமிருந்து கன்னடம், சமஸ்கிருதம், கூடவே மணிமஞ்சரி, சுமத்வவிஜயம் ஆகியவற்றை படித்திருந்தார். ஸ்ரீசத்யத்யான தீர்த்தருக்கு அறிமுகம் ஆகியிருந்தார். ஸ்ரீராகவேந்திரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மத்வராயர் தன் பாடங்களை முடித்து, குத்தி (Gutti) வந்து அங்கு தன் வழக்கறிஞர் தொழிலை நடத்தலானார். ஒரு நல்ல நாளில், லட்சுமிதேவம்மா தன் கணவன் வீட்டுக்கு வந்தார். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. வம்சத்தை வளர்க்க ஒருவன் பிறந்ததைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். முந்தைய பிறவிப்பயனோ என்னவோ, சில நாட்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. மிகவும் வருத்தப்பட்ட தம்பதிகள், ஸ்ரீஹரியின் சேவை செய்யத் தொடங்கினர். பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வந்ததால், புகுந்த ஊரின் பெயரே இவரின் பெயரோடு சேர்ந்துகொண்டது.

ஓர்வாய் வம்சத்தில் ஒரே ஒரு குழந்தை பிறந்து அதன் மூலமே வம்சம் வளர்வது வழக்கமாக இருந்தது. தமக்கு பிறந்த ஒரு குழந்தையும் இறந்ததால், இனிமேல் இன்னொரு குழந்தை பிறக்காது என்று தீர்மானித்து, வேறொரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வதென்று முடிவு செய்தனர். 

மத்வராயரின் தங்கை பாகம்மா மற்றும் ராகவேந்திரராயர் தம்பதிகளின் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டனர். குத்தி’யில் இருந்ததால் லட்சுமிதேவம்மாவை குத்தவ்வா என்றும் அழைக்கலாயினர். 

மத்வராயர் குத்தியில் நல்ல வக்கீல் என்று பெயர் பெற்றார். பின்னர் ஆதோனிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு பழமை வாய்ந்த ஆஞ்சனேயர் கோயில் ஒன்று உள்ளது. அவரை மங்கராயர் என்றும் அழைக்கின்றனர். அந்த மங்கராயரின் ஆராதனையை மத்வராயர் மிகவும் விமரிசையாக நடத்தினார். லட்சுமிதேவம்மாவுக்கும் மிகுந்த பக்தி இருந்தது. மாலை வேளைகளில் பஜனை, உபன்யாசம் என்று நடத்திக்கொண்டு காலத்தை கழித்து வந்தார். ஹோலி பௌர்ணமியன்று மிகவும் சிறப்பான பூஜைகளைச் செய்து, பாடியோர் பங்குபெற்றோர் அனைவருக்கும் தக்க சன்மானம் கொடுத்து வந்தார். நாடகங்களையும் நடத்தி, அதில் நடித்தும் வந்தார். 

லட்சுமிதேவம்மா அழகான வடிவானவராக இருந்தார். முகத்தில் மஞ்சள் குங்குமம், நல்ல ஆடை அணிகலன்கள் உடன் கச்சை அணிந்து வந்தால், சாட்சாத் மகாலட்சுமியே இவ்வுலகில் வந்தாற்போல் இருக்கும் என்று அன்று அவரை நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள். 

அத்தம்பதிகள் ஒரு அபூர்வமான ஜோடி. பலரை ஆதரித்து வந்தனர். பலவித கலைகளில் தேவம்மா தேர்ச்சி பெற்றிருந்தார். அலங்காரங்கள் செய்வது, மண்ணில் பொம்மைகள் செய்வது, பலப்பத்திலிருந்து சிற்பங்கள் செய்வது, திருமணங்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் செய்வது, வரனுக்கு கொடுக்கும் அலங்காரப் பொருள்களில் இறைவனின் உருவங்களை வரைவது என்று பல கலைகளில் சிறந்தவராக விளங்கினார். 

ரங்க ஒலித தாசர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஜகன்னாததாசரின் அருளுக்கு பாத்திரமாகியிருந்தார். பலவிதமான கோலங்களை, தேவதா ரூபங்களை கோலங்களில் வரைந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார். கோலம் வரைய இவர் பயன்படுத்திய பொருட்களை மைசூர் மானஸ கங்கோத்ரியில் இன்றும் பார்க்கலாம். 

சமையல் கலையிலும் லட்சுமிதேவம்மா நிபுணராகியிருந்தார். தம்மை பார்க்க வரும் முதியவர்கள், குழந்தைகளுக்கு வரும் சாதாரண ஜுரம், வாயு ஆகியவற்றிற்கு இவர் தயாரித்துக் கொடுத்த மருந்துகள் சஞ்சீவினியாக இருந்து, அந்த பிரச்னைகளை தீர்த்து வைத்தன. அவர் வீட்டில் பூஜை, புனஸ்காரங்களுக்கு என்றும் குறைவிருந்ததில்லை. குடும்ப வழக்கப்படி ‘வரமகாலட்சுமி பூஜை’ செய்யப்பட்டு வந்தாலும், சில காரணங்களால் அந்த பூஜை தடைபட்டிருந்தது. 

மேலும் அவர் வீட்டில் கலச ஸ்தாபனை செய்யும் வழக்கம் இருக்கவில்லை. அப்படி பூஜை செய்தால் ஏதேனும் பிரச்னை வரும் என்பது இவர் மூதாதையரின் யோசனையாக இருந்தது. ஆனால், தேவம்மா, இது ஸ்ரீரமணனின் மனைவியின் பூஜை. இந்த உலகத்தையே கட்டிக் காக்கும் மகாலட்சுமி நம்மை ஏன் கைவிடப் போகிறாள் என்று எண்ணி, வரலட்சுமி பூஜை செய்ய தீர்மானித்தார். கணவரின் சம்மதம் & உதவியும் கிடைத்தது. வெகு விமரிசையாக பூஜை மற்றும் பிராமண சுமங்கலியரின் போஜனமும் நடைபெற்றது.

உணவிற்குப் பின் ஓய்வெடுக்கப் போனபோது ஏதோ சத்தம் வந்ததே என்று பார்த்தார். பூஜையறையிலிருந்து - நகை அலங்காரத்துடன் ஒரு பெண் வீட்டிற்கு வெளியே போவதைக் கண்ட தேவம்மா, உடனே, கதவுக்கு நடுவில் கை வைத்து அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார். 

அவ்வா: ஏன் அம்மா, இப்போது நீ புறப்பட்டுப் போகிறாய்?

மகாலட்சுமி: பூஜைதான் விமரிசையாக முடிந்துவிட்டதே? அப்புறம் என்ன? நான் போய் வருகிறேன்.

அவ்வா: இல்லை. நீ எப்போதும் நம் மனதில், நம் வீட்டில் இருக்க வேண்டும். எங்களுக்கு அனுக்கிரகம் செய்யவேண்டும். உன் கிருபை எப்போதும் என் மேல் விழுந்திருக்க வேண்டும். அதை வேண்டியே நான் உன்னை பூஜை செய்தேன். ஆகவே, தயவு செய்து இங்கேயே இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் - என்று மிகுந்த பக்தியுடன் மகாலட்சுமியை அவ்வா வேண்டிக்கொண்டார். 

மகாலட்சுமி: அப்படியே ஆகட்டும் என்றவாறு பூஜையறைக்குள் சென்று மறைந்து போனார். அவ்வா, மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். 

எத்தகைய அற்புதமான பக்தி. மகாலட்சுமியின் தரிசனம், அவருடன் உரையாடல் செய்வது சாதாரணமான விஷயமா? கேட்டாலே புல்லரிக்கிறது அல்லவா? மகாலட்சுமியின் பூரணமான அனுக்கிரகத்தை அவ்வா பெற்றிருக்கிறார் என்று தெரிகிறதல்லவா?

தன் தத்துப்பிள்ளையின் மூலமாக அனந்தபத்பனாப விரதம் செய்ய விருப்பம் கொண்டார். அதன்படியே பூஜையை நிரந்தரமாக செய்தும் வந்தார். நாமும் நம் வீட்டில் இருக்கும் விரதங்களை விடாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும் என்று அவ்வா’வின் வரலாறின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அவ்வா பல தீர்த்த க்‌ஷேத்திரங்களுக்கு பயணம் செய்து, அங்கிருக்கும் ஸ்தல தெய்வங்களைக் குறித்து பல பாடல்களை இயற்றினார். திருப்பதி, மங்களகிரி, சிம்மாசலம், ஸ்ரீசைலத்தில் இருக்கும் நரசிம்மர், உடுப்பி கிருஷ்ணன், பாவிசமீர ஸ்ரீ வாதிராஜரின் சொண்டா - ஆகிய க்‌ஷேத்திரங்களுக்கு சென்று வந்தார் என தெரிய வருகிறது.

இவரது அங்கிதம் ‘நரசிம்ம விட்டலா’. இவரது இடமான வித்யாக்‌ஷேத்திரத்தில், தினமும் பல்வேறு பக்தர்கள் வருகை புரிந்துவந்தனராம். பலருக்கும் இவர் பல்வேறு உதவிகள் செய்து வந்தார் என தெரிய வருகிறது. அங்கிதம் எப்படி கொடுத்தார்? இவரே கொடுத்தாரா? அல்லது கனவில் யாராவது கொடுத்து வந்தார்களா? தெரியவில்லை. 

முன்னர் சொன்னது போல், அவ்வா, ராயரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஸ்ரீ சுஷீலேந்திரர் மற்றும் ஸ்ரீ சுயதீந்திரர் இவர்களுக்கு அறிமுகமாகி, அவர்களின் அனுக்கிரகத்திற்கு பாத்திரமாகியிருந்தார். அவ்வப்போது, மாஞ்சாலையில் ராயர் பிருந்தாவன தரிசனம், அங்கு சேவைகள் செய்வது என்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். பல ஹரிதாசர்கள் அவ்வா அவர்களின் வீட்டில் அவ்வப்போது கூடி பஜனைப் பாடல்களைப் பாடி வந்தனர். கன்னட மொழி ஞானமும் இருந்ததால், பற்பல பாடல்களை அவ்வா இயற்றினார். வாதிராஜர் பக்தை ஆதலால், அப்போதிருந்த பீடாதிபதியின் அறிமுகம் மற்றும் அனுக்கிரகத்தைப் பெற்றிருந்தார். 

ஒரு சமயம், ராயர் ஆராதனை சந்தர்ப்பத்தில், சமையலறைப் பக்கம் சென்றபோது, அங்கிருந்த காய்கறிகளைப் பார்த்து ஆனந்தமடைந்து, அவைகளைப் பற்றியே ஒரு பாடல் அமைத்து, அதை ஸ்ரீஸ்ரீகளிடம் சமர்ப்பித்தாராம்.

முன்வினைப் பயன் என்பது யாரையும் விடாது என்பதைப்போல் அவ்வா அவர்களும் அதற்கு தப்பவில்லை. தனது 52ம் வயதில் கணவரை இழந்து கைம்பெண் ஆனார். ஸ்ரீபாதராஜரின் - இட்டாங்கே இருவேனு ஹரியே நன்ன தொரெயே - என்னும் வாக்கின்படி, மனதை திடப்படுத்திக்கொண்டார். மனம் மற்றும் உடல் இரண்டையும் ஸ்ரீஹரியிடம் இன்னும் அதிகமாக செலுத்தி பக்தி செய்தார். இத்தகைய துன்பங்கள் தனக்கு மீண்டும் நேரக்கூடாது என்று ஸ்ரீஹரியிடன் முறையிட்டார். 

பெல்லாரியில் தனது உபாசனா மூர்த்தியான நரசிம்மரை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதற்கான காசாபுரத்தில் இருக்கும் ஸ்ரீராமர் மற்றும் முக்யபிராணரிடத்தில் சேவை செய்தார். அந்த சமயத்தில், மந்திராலயத்தில் காலரா நோய் பரவிக்கொண்டிருந்தது. அனைவரும் ஊரை காலி செய்து வெளியேறிபோது, அவ்வா அங்கேயே இருந்து தன் சேவையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவரது கனவில் ராயர் வந்து - நான் இருக்கிறேன். பயப்படாமல், நீ உன் சேவையை தொடர்ந்து செய் - என்று அருளினார். 

ராயர் கனவில் வந்து சொன்னதை நினைத்து மகிழ்ந்தாலும், மந்திராட்சதை கிடைக்கவில்லையே என்று நினைத்தார். அங்கிருந்து புறப்பட்டு மாட்டு வண்டியில் வந்துகொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஓடிவந்து இவரிடம் ஒரு காகித உறையைக் கொடுத்தான். அதில் இவரது பெயர் எழுதியிருந்தது. அதைத் திறந்து பார்த்தார். மந்திராட்சதை. நம் திட்டத்திற்கு ராயரின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று நினைத்து, ஆனந்தக்கண்ணீர் வடித்தார். ஊருக்கு வந்தபின், நரசிம்மரின் சிலை செய்யும் வேலையைத் துவக்கினார். 

சில நாட்களில் நரசிம்மரின் சிலையும் தயாரானது. கட்டடம் தயாராகி, சிலைக்கு ஜலவாசம், தான்யவாசம் ஆகியவை நடைபெற்றது. ஒரு சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை நிச்சயம் செய்திருந்தபோதும், அவ்வா அவர்கள் மனதில் ஒரு கவலை இருந்து வந்தது. அது என்னவென்றால், இவரது குலதெய்வம் - நீரா நரசிம்மர். ஆனால் இவருக்கு அகோபல நரசிம்மரைப் பார்க்கவேண்டுமென்று ஆவல் இருந்தது. அது நிறைவேறவில்லை. திரும்பத்திரும்ப வேண்டினாலும், நீ அங்கே போகவேண்டாம் என்று கனவு வந்தது. ஏன் என்னை அங்கே போகவேண்டாம் என்று ஸ்ரீஹரி சொன்னாரோ என்று கவலைப்பட்டவாறே, பிரதிஷ்டாபனைக்கான வேலைகளையும் செய்து வந்தார் அவ்வா. 

சிலை பிரதிஷ்டைக்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்களே இருந்தபோது, அந்த இடத்தில் உக்கிரமான தீப்பிழம்புகள் தோன்றியதாம். தம்மால் ஏதேனும் அபசாரம் ஆகிவிட்டதோ என்று கவலைப்பட்ட அவ்வா, சான்றோர்களிடம் இதுபற்றி விசாரித்தார். அவர்களும் இது அக்னி தேவனின் தரிசனம். இதனால் இடம் சுத்தம் ஆயிற்று என்றும், பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ற இடமாக ஆயிற்று என்றும் கூறினர். ஆயினும் அவ்வா அவர்கள் சமாதானம் ஆகவில்லை. மேலும் அடுத்த நாளும் அதே போல் தீப்பிழம்புகள் தோன்றின. அவ்வா அவர்கள் ஸ்ரீஹரியிடன் - நீ இப்படி உக்கிரமாக இருந்தால், இப்போதும் பிறகும் என் வம்சத்தவர்கள் எப்படி வழிபட முடியும்? நான் ராயரின் சேவை செய்தபோது, சுப பலன்கள் தோன்றினவே, மந்திராட்சதை கிடைத்ததே? ஆகவேதானே நான் இந்த வேலையை செய்ய முற்பட்டேன், ஆனாலும் இந்த உக்கிர ரூபம் இப்போது ஏன் தோன்றுகிறது? - என்று மன்றாடி வேண்டினார். 

அன்றிரவு, ஸ்ரீஹரி அவ்வாவின் கனவில் வந்து - நீ அகோபில நரசிம்மரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். ஆகவே நீ இருக்கும் இடத்திற்கே வந்து நான் தரிசனம் கொடுத்தேன். இனிமேல் சாந்த ரூபத்தில் உனக்கு தரிசனம் கொடுப்பேன் என்று அருளினார். பின்னர் அடுத்த நாள் காலையில் கோயிலில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. 1905ம் ஆண்டு அந்தக் கோயிலை பிரதிஷ்டை செய்தார் அவ்வா.

அப்போது அவர் இயற்றிய பாடல்:

நாரசிம்ம நின்ன பஜிசுவேனு
ஸ்ரீ மாரஜனகனே சூரிகளரஸ
பள்ளாரிஸி மெரெவந்தா 
நாரசிம்ம நின்ன பஜிசுவேனு (நாரசிம்ம)

சூரபன சூரிமாடித சூரிகளபய கோரபிடிசித
க்ரூர தைத்யன கொரளாத ஹரித சிரி (நாரசிம்ம)

ஸ்ரீஷ நின்னய தாசதனக ஆஷிபனு நன்ன போஷிசனன்னு
தோஷதூரனே தூரனே நரசிம்மவிட்டல ஸ்ரீ (நாரசிம்ம)

என்ன பின்னபவன்னு மன்னிஸி இன்னு இபுரகின்னு சாரிதே
கன்ன மஹிமே ஸ்ரீ நரசிம்மவிட்டலனே (நாரசிம்ம)

ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மரின் பிரதிஷ்டை ஆனபிறகு பிராணதேவர், மந்திராலய பிரபுகளின் பிருந்தாவன பிரதிஷ்டையும் நடந்தது. பிறகு ஸ்ரீ சத்யத்யானரின் மிருத்திகா பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும் விரும்பினர். அவரின் ஆராதனைக்கு சிஷ்யர்களுடன் பண்டரிபுரம் சென்றார். அங்கிருந்த ஸ்ரீ சத்யப்ரஞ்னரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு சம்மதித்த சத்யபிரஞ்னர், மிருத்திகையைக் கொடுக்க, ஸ்ரீ நரசிம்ம க்‌ஷேத்ரத்தில், சத்யத்யானரின் இரண்டாவது பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அவ்வா’வின் இந்த காரியத்தால், அந்த இடம் புண்ணியபூமி ஆயிற்று. மனம் மற்றும் கோயில் இரண்டும் புனிதமாயிற்று. புழக்கத்தில் இருந்த இடங்கள் புண்ய க்‌ஷேத்ரம் ஆயிற்று. கோயிலின் சன்னிதியில் வர்த்தி, பூ கோர்த்துக் கொண்டிருந்த பெண்கள் பெற்ற ஆனந்தம் / அனுபவம் மிகவும் அதிகம். இத்தகைய காரியங்களை செய்த அவ்வா’வை தரிசித்த அந்த காலத்து மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.

லக்‌ஷ்மிபாய் அவர்களின் சில பாடல்கள்

ஸ்ரீகிருஷ்ணனை தமக்குத் தோன்றினாற்போல் ஹரிதாசர்கள் வர்ணிப்பர். அவர்களின் ஞானத்திற்கேற்ப இந்த வர்ணனை இருக்கும். கோகுலத்தில் இருந்த கோபிகா பெண் ஒருவர் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பதற்கு புறப்பட்டபோது - அவர் செய்துகொண்ட அலங்காரத்தை லக்‌ஷ்மிபாய் அவர்கள் இப்படி வர்ணிக்கிறார். 

சிருங்காரவாதளு நாரி; கொல்லதி சுந்தரி

சிருங்காரவாதளு மங்கள முகியே அங்கனேதானே ஜடெகள பிகிய
சந்ததி ஜடெ பங்காரகண்ணிணெயெ முங்குருளுகளல்லி
சந்திர சூர்யரு ஹொளயே அங்கனெ ரங்கனமுங்கை கிணியே (சிருங்காரவாதளு)

வாலிபுகுடி வாரிஜாக்‌ஷியு இட்டு தோரமுத்தின மூகுதியிட்டு
சாருகம்புக பிகிபிகி தொட்டு ஹார பதகவு கொரளொளகிட்டு
பாரிபாரிகே பொகளுவுதெஷ்டு (சிருங்காரவாதளு)

வஜ்ரத ஹஸ்த கடகவனிட்டு பர்ஜரி பீதாம்பரவனுட்டு
கெஜ்ஜெ அந்திகே பாததொளகிட்டு ஹெஜ்ஜெ ஹெஜ்ஜெகே ஆ ஷப்தகளிட்டு
சஜ்ஜனப்ரிய நம்ம நரசிம்ம விட்டலன கொடுவே தவரிததி எம்புவ குட்டு (சிருங்காரவாதளு)

கோபிகைப் பெண்கள் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்க்கப் போகும்போது எப்படிச் சென்றார்கள் என்பதை லட்சுமிதேவம்மா இப்படி பாடுகின்றார்.

நோடித்யா சகி கூடி ஆடுவா வனகளா
ரூடிகள கின்னேடுயில்லா நோடோ ஸ்தளகளு (நோடித்யா)

ப்ருங்ககிளி சாரங்க மாதங்க நோடிதேவிஹங்க
கோரங்க ஷிங்ககள நோடித்யா

ஷிஸ்திலி ஆடுவா கஸ்தூரி ம்ருககளு ஜத்திலி ஸ்வரவெத்தி கூகுவோ கிளிகளு
தளதளிசுவா மயூரி பிககளு ஜளபிஸி ஹாடுவா கோகில ஸ்வரகளு
கேதகி க்யாதிகெ கமல குசும நோடித்யா ! நூதனவாகித்த பாரிஜாதவ நோடித்யா

மருக ஜாஜிமல்லிகே இருவந்திகெதவனா சுரகி சம்பகியிந்த
தோர்வதீவனா

ப்ரமர கீதகளிந்த மனவு ப்ராந்திகொள்ளுது 
அமர வந்திதனிந்த கூடி ஆட்வ ஸ்தளவிது
பரம புருஷ நரசிம்ம விட்டலராயன பாததூளிகளிந்த
ஷோபிதவாகிதீவன 

பல்லவியிலிருந்து அனைத்து சரணங்களிலும், தன் உபாசனா மூர்த்தியான விட்டலனை இப்படியாக வர்ணிக்கிறார். 

கண்டே கண்டே பண்டரீசனா ஸ்ரீ பாண்டுரங்கனா

புண்டரீகவரத ஸ்ரீ பாண்டுரங்கனா (கண்டே)

பீமதீரதி ஸ்வாமி நிந்திஹ நேமதிந்த
ப்ரேமதோருவ காமிதவரத நிஸ்ஸீம
கட்டி கல்லனு கொட்டு பகுதர ஸ்ரேஷ்ட பதவியோள
இட்ட ஆ மஹிமன திட்ட ஸ்ரீ நரசிம்ம விட்டலன (கண்டே)

மேலும், அடுத்த சரணத்தில் கிருஷ்ணனின் பால லீலைகளை இப்படியாக வர்ணிக்கிறார். 

அம்பேகால் இக்குத்தா அங்களதொள் ஆடுத்தா சந்திரன்ன நோடி நுடியுத்தா
நலியுத்தலா கோபமங்கள முகவு தோருத்தா
மண்ணுமெல்லுவரேனோ சண்ண கிருஷ்ணனே நீனு
சின்னனே பாயி தெகெயெந்து தெகெது நோடிதளு
பாலன பாயி மஹிமெகளு ஹிரிய வதனதொளு
ஹதினால்கு லோகவ நோடி பயதிந்த கோபி நுடிதாளு
நுடிது தானோடிதளு பாலன பால மஹிமெகள

ஸ்ரீராகவேந்திரரை அனைத்து ஹரிதாசர்களும் கல்பவ்ருட்சம், காமதேனு என்றெல்லாம் புகழ்ந்து பாடியுள்ளனர். கலியுகத்தில் கலி கொடுக்கும் துன்பங்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றுபவர் இவர். பாரோ, பாபா, பாரம்மா என்றெல்லாம் கூப்பிட்டு ஸ்ரீராகவேந்திரரைப் பற்றி பாடியிருக்கின்றனர் ஹரிதாசர்கள். 

அதைப் போலவே தேவம்மாவும் ஸ்ரீராகவேந்திரரைப் பற்றி பாடியிருக்கிறார். ராகவேந்திரா என்னும் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் இவர் இப்படியாக விளக்கி பாடியிருக்கிறார். 

ராகவேந்திர ஸ்தோத்ரம்

ராகவேந்த்ர எந்து நுடிவவரிகே அனுராகதி சலஹுவரா
பாகவதப்ரிய யோகி ஜனனுத ஸ்ரீ ராகவேந்திர ராயா (ராகவேந்திர)

ராமத்யானவனு மாடுதலனுதின ஜயிஸிதி ராக்‌ஷசரா
ராகவனங்க்ரிகளனு அனுராகதி சேவிபுர ராமராயர வியாதிகளளிது
சேவிகொளுதிஹரா ரமா வல்லபனாஸ்ரய மாடி ராஜ்யவன்னாளிதரா (ராகவேந்திர)

காதுக தனுஜர காலவிது எந்து நீவெணிஸிதெ கலியுக
கன பராக்ரமதிந்த மெரெவிரி சுயதீந்த்ர நீ
கன ஜாட்யகள களெது ஜனரிகெ சுரிசித சுக மோக
காபரிந்தலி பந்து ஆதுரரிகெ களிதியோ நீ ஆக (ராகவேந்திர)

வேத சாஸ்திர பாராயண மாடுத விருந்தாவனதொளகிருவே
விருதெயிந்தலி பந்தாதுரரிகே அதி சுகவன்னு சுரிவே
வேதவியாசரு மொதமொதலாதவரொளு ஆதாரதொளிருவே
வேஷ தாளி நீ யதியாகி ஈ ஜகதொளு நீ மெரெவே (ராகவேந்திர)

பிரம தப்பிதந்தே பவதொளு பித்து பிடுவேனு ராகவேந்திரா
திராவிட படக மத்ஸ்ய மொதலாதவரொளு திராக்‌ஷபலதந்தே
மதுரவு தோரி சலஹோ குணசாந்திரா திராவிட படக மத்ஸ்ய
மொதலாத ஜன சேவிபரோ யதீந்த்ரா திரவ்யபதி 
ஸ்ரீ நரசிம்ம விட்டலன தோரொ ராகவேந்திரா (ராகவேந்திர)

ராகவேந்திர பாடல்

நோடித்யா நோடித்யா

நோடித்யா ஸ்ரீ குருகளன்னு ஈட்யாடி கொண்டாடித்யா
ஆஹா நோடி மனதல்லி கொண்டாடுத்தா குருகள
ரூடிவளகெல்லா ஈடில்லா யதிகள (நோடித்யா)

நிந்தரெயரல்லி முக்ய ப்ராண
ஜகதந்தரதொளகெல்லா அதிப்ராணி
அந்தரங்கதல்லி ஷாந்த மூர்த்திகளு
மந்திராயலதல்லி நிந்தித்த குருகளா (நோடித்யா)

ஹொத்த காவிஷாடியிந்தா ஸ்ரீமுத்ரே ஹச்சித தேகதிந்தா
மத்வாதி கேசரிகந்தா பலு முத்த சுரிவ நாமதிந்தா
தித்த அங்கார முத்ரெயொளகக்‌ஷதெ எத்து பருவந்தா முத்து குருகள (நோடித்யா)

முத்து பிருந்தாவனத மாட அல்லித்து ஜனர ஒரெநோட
பிரசித்த ராயர பூர்ணநோட நம்மல்லித்த பாபகளெல்ல ஓட
ஹத்துவாகன நரசிம்ம விட்டலா அல்லித்து வரவ கொடுவ கோபாலகிருஷ்னன்னா (நோடித்யா)

மங்களாரத்தி பாடல்

மங்களாரத்தி பெளகிரே ஸ்ரீரங்காமுரளிதராகே

இந்திர வரதகே சுந்தர ரூபகே நந்தானந்தன கோவிந்தகே
வாசுகி சயனகே தோஷதூரகே சாசிர முக சர்வேசகே
நரம்ருகரூபகே நரசிம்ம விட்டலனே சாசிர முக சர்வேசகே 

லாலி பாடல்

லாலி கஷ்யப கோத்ர பரம பாவித்ர
லாலி த்ரிகுணாகாத்ர லக்‌ஷ்மி களத்ரா (லாலி)

நீரு ஒளகே மனெயு மாடி ஓட்யாடி
கொரெயனே பூசெதுகடு பூமிகெ கடெதாடி
மொரெயனே முச்சே கைகாலு தொக்யாடி
கோர ரூபவ தரிசே பலிதானவனே பேடி (லாலி)

கொடலிய பிடிது மாதெய சிரவனெ ஓடிது
மடதிகோஸ்கர தசசிரன சிரவன்னு ஒடெது
துடுகுதனதி மொசரு கடிகெகளன்னு ஒடெது
மடதியர பிரதபங்க மாடிதியோ பீடிது (லாலி)

ஹயவ சேரித ஹரிய பஹு ஜனர பூரியே
செலுவ மூர்த்தி தொட்டியோள் முத்து சரியே
பரமபுருஷ சத்பக்தர சிரியே
பவனப்ரிய நரசிம்ம விட்டலா தொரெயே (லாலி)

லட்சுமிதேவம்மா அவர்கள் இறுதியாக இயற்றியது எனக் கூறப்படும் பாடல்

தப்பெணிசுவரெயே தாமரதளாக்‌ஷ
அப்பனே ஒப்பிதரே தப்பெல்லி இஹதே (தப்பெணிசுவரெயே)

அக்கரத அஜமிளன அக்கனா மகனேனோ
சிக்க த்ருவனா தாயி சிக்கம்மனேனோ
ரக்கசாசுத நினனே ரொக்க கொட்டனோ ஏனோ
இக்கெனே பவதொளகே ஹேகே நோடுவரேனோ (தப்பெணிசுவரெயே)

அந்த்யஜளெ கூடி அனந்த கர்மவு மாடி
(அந்த்யதலி) அந்ததலி நின்னொம்மெ நெனெவெனேனோ
அந்த ஷோபசன மகள காந்தனெந்தெனிசிதி
கந்துபிதனே நின்ன கருணவித்தரே சாகோ (தப்பெணிசுவரெயே)

நாமாடித அபராத நீ க்‌ஷமிசதித்தரே
யாரு பொரெவரோ என்ன வாரிஜாக்‌ஷ
தீர ஸ்ரீ நரசிம்மவிட்டலா நின்ன ஆதீனவாதெனோ
இன்னேனு மாடிதரு மண்டோ நீனு (தப்பெணிசுவரெயே)

அவ்வா’வின் சில பாடல்களே கிடைத்துள்ளன. அவரின் பேரர்களான M.பிரகலாத், பெல்லாரி இவர்களுக்கு கடிதம் எழுத முற்பட்டோம். அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவரது சம்மந்திகள் சொண்டூரில் இருக்கின்றனர் என்றும், பின்னர் அதொனியில் உள்ளனர் என்றும் தெரியவந்தது. அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கும் பதில் எதுவும் வரவில்லை. ஆகவே கிடைத்த தகவல்கள், பாடல்களை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம். 

ஹரபனஹல்லி பீமவ்வா மற்றும் ஹெளவனகட்டே கிரியம்மா இருவரையும் தன் ஆதர்சமாக நினைத்து, அவர்களின் பாடல்களை ஒரு உதாரணமாக வைத்துக்கொண்டு, லட்சுமிதேவம்மா, ஒரு சிறந்த ஹரிதாசியாகி பாடல்களை இயற்றியது மட்டுமல்லாமல், ஸ்ரீஹரியிடம் சிறந்த பக்தி செய்து, பக்திமானாக விளங்கினார். 

நிஜமான பக்தர்களின் இதயம், அந்த ஸ்ரீஹரி இருக்கும் கோயில் எனச் சொல்லலாம். அவர்கள் பேசும் பேச்சு ஒவ்வொன்றும் அவனைத் துதிக்கும் ஸ்தோத்திரம் ஆகும். இந்த ஜென்மம் எடுத்ததே நற்செயல்களைச் செய்வதற்குத்தான் என்று அறிந்த லட்சுமிதேவம்மா, அவரிடம் வந்தவர்களுக்கும் இந்த அறிவுரைகளைச் சொல்லி, அவர்களிடமிருந்தும் நற்செயல்களைச் செய்ய வைத்தார். இப்படியாக 85 ஆண்டுகளைக் கழித்த இவர், 1950ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், இப்பூவுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார். 

இவ்வுலகில் தர்மம் குறைந்து அதர்மம் வளர்ந்தபோது, தர்மம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மீண்டும் வளர்ப்பதற்கு - அந்த ஸ்ரீஹரியின் சேவகர்களாக வந்து, நல்வாழ்க்கை வந்து, மற்றவர்களுக்கும் தர்மத்தை போதித்து, பின்வரும் சந்ததியினருக்கு ஒரு நல்வழிகாட்டியாக இருந்து மறைந்த இத்தகைய ஹரிதாசிகளை எப்போதும் நினைப்போமாக.

***