Wednesday, April 19, 2017

சிறந்த வழிகாட்டி - ஸ்ரீ குருகோவிந்தவிட்டல தாசர்

சிறந்த வழிகாட்டி
குரு கோவிந்த விட்டல தாசர்
1894-1983

ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயாவின் 13ம் ஆண்டு நிறைவில் வெளியிட்ட புத்தகம்.
கன்னட மூலம்: ஹரதி பிரகலாத்
தமிழில்: T.V.சத்ய நாராயணன் மற்றும் திருமதி. சவிதா ராவ்.

***


குருகோவிந்தவிட்டல தாசர்

சிஷ்யர்: குருவே, பக்திக் கதை ஒன்று சொல்லுங்களேன்.

குரு: இறைவனின் பக்தர்கள் அனைவரின் சரித்திரமும், பக்திக் கதையே. அதில் உனக்கு யாரின் சரித்திரம் வேண்டும் என்று சொல்.

சிஷ்யர்: யாராவது யதிகளின் அல்லது ஹரிதாசர்களின் சரித்திரத்தை சொல்லுங்கள்.

குரு: நீ தேவராயனதுர்கா மலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?

சிஷ்யர்: ஆம். அங்கு போயிருக்கிறேன்கூட.

குரு: அங்கே போனபோது என்ன பார்த்தாய்?

சிஷ்யர்: கீழே உள்ள நரசிம்மர் கோயில்,  மற்றும் மலையின் மேல் உள்ள நரசிம்மர் கோயிலைப் பார்த்திருக்கிறேன்.

குரு: அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பார்த்தாயா?

சிஷ்யர்: இல்லை. அவ்வளவுதான் பார்த்தேன்.

குரு: கீழே மலையின் பக்கத்தில், ‘தாச கூட’ என்னும் ஒரு அறிவிப்புப் பலகை உள்ளது. பார்த்தாயா?

சிஷ்யர்: இல்லை குருவே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

குரு: இந்த ‘தாசகூட’ என்னும் அமைப்பை, ‘பரமப்ரிய’ என்னும் பட்டத்தை வாங்கிய தந்தே முத்துமோகன விட்டல தாசர் சுமார் 1900ம் ஆண்டு துவக்கினார்.

சிஷ்யர்: இந்த அமைப்பைப் பற்றிய மேலதிக விவரங்களை சற்று விவரமாகச் சொல்லவும்.

குரு: இவர் விஜயதாசரின் வம்சத்தை சேர்ந்தவர். அவர் பரம்பரையில் வந்தவர். தாச தீட்சை பெற்றபிறகு, ஞான பக்தி வைராக்கியத்தை தழுவி, அபரோக்‌ஷ கிருதராக வாழ்ந்து வந்தார். ஹரிகதாம்ருதசாரத்தை தொடர்ந்து பாராயணம் செய்தவாறு இருந்தார்.  இவர் விஜய ப்ரபுவின் பரம்பரையில் வந்தவர்.

சிஷ்யர்: விஜயதாசரின் பரம்பரையைப் பற்றி கொஞ்சம் மேலும் சொல்லுங்கள் குருவே .

குரு: ஸ்ரீவியாசராயர், புரந்தரதாசருக்கு அங்கிதமும், கனகதாசருக்கு தாசதீட்சையும் கொடுத்தார். இந்த தாச பரம்பரை பல ஆண்டுகளுக்கு அப்படியே தொடர்ந்தது. அந்த பரம்பரைக்கு புத்துயிர் கொடுக்கவேண்டி ஸ்ரீஹரியின் அவதாரமாகிய ஸ்ரீவேதவியாசர், வியாசகாசியில் புரந்தரதாசர் மூலமாக சிக்கலபரவி தாசருக்கு (இவரே விஜயதாசர்) அவர் கனவில் காசி விஸ்வநாதர் சன்னிதியில் அங்கிதம் (அதாவது, தாசதீட்சை) அளிக்கச் செய்தார். விஜயவிட்டலா என்று உபதேசம் செய்தார். கனவில் அங்கிதம் பெற்று எழுந்தவுடன், காலை முதல் தாசரின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது.

வாழ்க்கை  வெறுத்துப் போய், கங்கையில் விழுந்து விடவேண்டுமென்று நினைத்துக் கொண்டு தூங்கியவரின் கதை இது. தூக்கத்திலிருந்து எழுந்தவர், ஹரிஸ்மரணை, கங்கா ஸ்நானம் செய்து, ருத்ரதேவர் தரிசனம் செய்துவிட்டு - கைலாச வாசா, கௌரீச ஈசா, தைல தாரேயந்தே மனசு கொண்டு ஹரியல்லி, சம்போ என்று பாடி பிரார்த்தனை செய்தார்.

சிஷ்யர்: ஆமாம், குரு உபதேசம் கொடுத்தவுடன், எப்படி ஸ்தோத்திரங்களை இயற்றினார்?

குரு: அதுதான் குருவின் அனுக்கிரகம். நீ அவரின் பரம்பரை பற்றி கேட்டாய் அல்லவா?

சிஷ்யர்: ஆமாம். தயவு செய்து சொல்லவும்.

குரு: கனவில் அங்கிதம் வாங்கிய விஜயதாசருக்கும், அவரின் பரம்பரையை வளர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே, அவரும் பலருக்கு அங்கிதம் வழங்கினார்.

சிஷ்யர்: யார் யாருக்கு கொடுத்தார்?

குரு: விஜய ப்ரபு அவர்கள் முதலில்

1. கோபால தாசருக்கு - கோபால விட்டல
2. வேணுகோபாலவிட்டல தாசருக்கு - வேணுகோபால விட்டல
3. மோகனவிட்டல தாசருக்கு - மோகன விட்டல
4. ஹயவதனவிட்டல தாசருக்கு - ஹயவதன விட்டல

இப்படி பலருக்கும் விஜயதாசர் அங்கிதம் வழங்கினார்.

சிஷ்யர்: அங்கிதம் என்றால் என்ன?

குரு: அங்கிதம் என்றால் பத-நாமம். அனைவரின் இதயத்திலும் ஸ்ரீஹரி இருக்கிறான். அந்த ஸ்ரீஹரிக்கு, அவர் பெயர் ஒன்றை வைத்து குறிப்பிட்டுக் கூப்பிடுவதே அங்கிதம் எனப்படும்.

சிஷ்யர்: அங்கிதம் கொடுப்பது எப்படி?

குரு: அங்கிதம் வாங்குவதற்கு 4 வழிகள் உள்ளன.

1. பரம்பரையில் உள்ள ஒரு குருவின் வழியாக வாங்கலாம். உதாரணம்: பரமப்ரிய குருகோவிந்தவிட்டல தாசர்.
2. கனவில் ஒரு குருவின் மூலம் வாங்கலாம். உதாரணம்: விஜயதாசர் பீம அவ்வா.
3. தனக்குத் தானே பிடித்த ஒரு பெயரை (அங்கிதம்) வைத்துக் கொண்டு, பாடல்களை இயற்றுவது. உதாரணம்: சங்கீத வாசுதேவாச்சார் & தியாகராஜர்.
4. அந்த ஸ்ரீஹரியே கனவில் வந்து கொடுப்பது அல்லது வேறொரு குறியீடு மூலமாக கொடுப்பது நான்காவது வகையாகும். உதாரணம்: ஜகன்னாத தாசருக்கு, நீரில் இருக்கும் ஸ்ரீஹரி, ஒரு பலகை மூலமாக அங்கிதம் கொடுத்தார்.

மேற்கூறியவையே அங்கிதம் வழங்கும் நான்கு வகைகளாகும்.

சிஷ்யர்: நீங்கள் இன்னும் குரு பரம்பரையையே கூறவில்லை.

குரு: அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

1. விஜயதாசர்
2. வேணுகோபாலவிட்டல தாசர்
3. வியாசவிட்டல தாசர்
4. ரகுபதிவிட்டல தாசர்
5. பூவராக ரகுபதிவிட்டல தாசர்
6. ஸ்ரீநிதிவிட்டல தாசர்
7. ஸ்ரீபதிவிட்டல தாசர்
8. தந்தே ஸ்ரீபதிவிட்டல தாசர்
9. ஸ்ரீவரவிட்டல தாசர்
10. ஸ்ரீமுத்துமோகனவிட்டல தாசர்
11. ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டல தாசர். இவரே சுப்பராய தாசர் மற்றும் பரமப்ரிய என்னும் பட்டத்தை வாங்கியவர்.

சிஷ்யர்: இவருக்குப் பிறகு அந்த பரம்பரை வளர்ந்ததா இல்லையா? தயவு செய்து அதையும் கூறவும்.

குரு: சுப்பராய தாசர், மொத்தம் 1165 பேருக்கு அங்கிதம் வழங்கினார்.

சிஷ்யர்: இந்த 1165 பேரில், முதலாமவர் யார்? கடைசியில் அங்கிதம் வாங்கியவர் யார்?

குரு: முதலாமவரே, ஸ்ரீபிராணபதிவிட்டல தாசர் அல்லது பாகேபள்ளி சேஷதாசர் என்றும் அழைப்பார்கள். கடைசியாக அங்கிதம் வாங்கியர் மைசூரின் குருகோவிந்தவிட்டல தாசர்.

சிஷ்யர்: குருவே, கடைசியில் அங்கிதம் வாங்கியவர் பற்றி சற்று விவரமாக கூறவும். அவரைப் பற்றி தெரிந்து கொன்டால் எல்லோரையும்  தெரிந்து கொண்டது போலாகும் அல்லவா?

குரு: எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன். கேள். இவர் முதலில் ஒரு அரசு வேலையில் சப்-ஓவர்சியராக (sub-overseer) இருந்தார். அதனால், பல இடங்களுக்கு பணி மாறுதலின் பேரில் போய் வேலை பார்த்து வந்தார். இப்படியே சித்ரதுர்காவில் இருந்தபோது, அங்கிருந்த ஸ்ரீனிவாச ராவ் மற்றும் ராமசந்திர ராவ் ஆகியோரின் நட்பின் மூலம், தேவராயனதுர்காவில் இருந்த சுப்பராய தாசர் அறிமுகமாக, அவரிடம் தாமும் தாசதீட்சை பெற வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. சுமார் 1940ம் ஆண்டில், குருகோவிந்தவிட்டல தாசர் என்று அங்கிதமும் அவரிடம் ஆசிர்வாதமும் வாங்கி வந்தார். அதுவே இவர்கள் இருவரின் முதல் மற்றும் இறுதி சந்திப்பு ஆகும். சுப்பராய தாசர், ஸ்ரீராமநவமியன்று இறைவனடி சேர்ந்தார்.

இப்படியாக, குருகோவிந்தவிட்டல தாசர் (இயற்பெயர் M.R.கோவிந்தராவ்) அங்கிதம் வாங்கிக்கொண்டு ஹரிதாசராக வாழத் துவங்கினார். தினந்தோறும் தேவரபூஜை, ஸ்நான சந்தியாவந்தனம், ஜபதபாதிகள், பஜனை செய்வதோடு, தன் தாய் மற்றும் குழந்தைகளை துளசி செடியின் முன்  உட்கார வைத்து - புராணக் கதைகள் மற்றும் பாகவதம் சொல்லி வந்தார்.

ஸ்ரீஹரி இவரது பக்தியை பார்த்து மெச்சி கொடுத்த வரத்தினால், இவர் சின்ன சின்ன தெவரு நாமங்களை (தாசர் பாடல்களை)  இயற்றி வந்தார். இவர் இயற்றிய பாடல்களை, 30 வருடங்களுக்குப் பிறகு புத்தகமாக  அச்சிட்டு வெளியிட்டனர் .

சிஷ்யர்: இவர் மொத்தம் எத்தனை பாடல்களை இயற்றியுள்ளார்?

குரு: குருகோவிந்தவிட்டல தாசர், சுமார் 700 மேலான பாடல்களை எழுதியுள்ளார். அனைத்துப் பாடல்களையும் த்வைத சித்தாந்தத்தை தழுவிய தாரதம்ய முறையை வெளிப்படுத்துமாறே எழுதியுள்ளார்.

சிஷ்யர்: தாரதம்யம் என்றால் என்ன?

குரு: தாரதம்யம் என்றால் மேலிருந்து கீழ் வரிசைக்கிரமம். ஸ்ரீஹரியை வணங்குபவர்கள், ஸ்ரீஹரியை மட்டும் வணங்காமல் அவருடன் இதர தேவர்கள், தேவதைகளை வணங்கும்போது - அதாவது ரமாதேவி, பிரம்ம, வாயு, கருட, சேஷர், துளசி, சௌபர்ணி, வாருணி, இந்திரன் முதலாதவர்களை வணங்கும்போது - எந்த வரிசையில் வணங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த தேவர்கள் எந்தெந்த வரிசையில் (கக்ஷே - வகுப்பில்) வருகிறார்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.  இப்படி தேவர்கள் மற்றும் தேவதைகளை வரிசைபடுத்தி பாடல்களை இயற்றி உள்ளார்

சிஷ்யர்: குருகோவிந்தவிட்டல தாசரும் தம் குருவைப் போலவே பிறருக்கு அங்கிதம் கொடுத்திருக்கிறாரா?

குரு: ஆம். இவரும் சுமார் 265 பேருக்கு அங்கிதம் கொடுத்திருக்கிறார். அங்கிதம் கொடுக்கும்போது இயற்றிய 265 பாடல்களைத் தவிர, இவர்  தேவதாகளின் தாரதம்யம், யதிகளின் தாரதம்யம் மற்றும் தாசர்களின் தாரதம்யம் இவைகளை ஒட்டி 700க்கும் மேலான பாடல்களை இயற்றியிருக்கிறார்.

சிஷ்யர்: இதைத் தவிர வேறு ஏதேனும் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் செய்திருக்கிறாரா?

குரு: 1 . இவர் மூன்று முறை பத்ரி யாத்திரை செய்திருக்கிறார். முதல் முறை சென்றபோது சுமார் 500 - 600 கிமீ பாத யாத்திரையாகவே சென்றிருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய சாதனைதானே?

2 . தசோபநிஷத்களை (10 உபநிஷதங்கள்) கன்னட மொழியில் விளக்கி எழுதியுள்ளார்.

3 . பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று, அந்த இடங்களின் சிறப்பை விளக்கி, பல சிறிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

4 . அகில பாரத ஹரிதாஸ சம்மேளனம் மூலமாக பல இடங்களில் புரந்தரதாசர் ஆராதனையை நடத்தியுள்ளார்.

5 . ப்ருஹதி சஹஸ்ர என்னும் யாகத்தை நடத்தியுள்ளார்.

6 . மத்வரின் கிரந்தங்களில் மிகுந்த பக்தி கொண்டவர். மூன்று முறை சுதா மங்களம் செய்திருக்கிறார்.

7 . மைசூர் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் இருந்த தன் வீட்டில், பண்டரிபுரத்தில் இருக்கும் விட்டலனை பிரதிஷ்டை செய்து, ஒரு மினி பண்டரிபுரமாக மாற்றிவிட்டார்.

8 . சம்ஸ்கிருத மொழியில் இருந்த சுந்தரகாண்டம், இராமாயண ,மானுஸ்ம்ருதி (ஐஜி சுவாமிகளின் புத்தகம்) என்னும் காவியத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

9 . தீர்த்தபிரபந்தம் காவியத்தைப் போன்று, தீர்த்தக்ஷேத்ர மாலா என்னும் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

10. தம் 89ம் வயதில், 1983ம் ஆண்டு, மார்கசிர கிருஷ்ண துவாதசி அன்று, அனந்தபுரத்தில் கதரீசனின் திருவடிகளில் உயிர் நீத்தார்.

சிஷ்யர்: தாங்கள் இவரை எப்படி எப்பொழுது பார்த்தீர்கள்? அதை பற்றி சற்று கூறுங்களேன்?

குரு: நான் அவரை சந்தித்தது அவரது முதுமையான வயதில் & என்னுடைய இளைய வயதில். எங்கள் இருவரையும் அந்த ஸ்ரீஹரியே சேர்த்துவைத்தான் என்று சொல்ல வேண்டும். அவரும் நம்மைப் போல் சாமான்யராகவே இருந்தார். ஆனால் மிகப் பெரிய ஞானி. அவரிடம் வந்து தம் பிரச்னையை கூறிக்கொள்பவர்களுக்கு, ஸ்ரீஹரிவாயு குருவிடனத்தில் முறையிட்டு, அவர்களுக்கு தக்கவாறு, பாராயணம், பஜனை, சேவை ஆகியவற்றை செய்யுமாறு ஒரு தீர்வைச் சொல்லுவார். அனைவரின் பிரச்னையும் தீர்ந்து வந்தபடியால், இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை வந்தது. தாச பரம்பரையின்மேல் மக்களுக்கு நம்பிக்கை வரச்செய்தவர் இவர். பரமப்ரியரின் காலம் தாச பரம்பரையில் 5ம் கட்டம் என்று சொன்னால், குருகோவிந்தவிட்டலரின் காலம் 6ம் கட்டம் என்று சொல்லலாம்.

தெய்வபக்தி அதிகம் உள்ளவர். ஒரு உதாரணம். அவரது இல்லத்தில் ஒரு கிணறு வெட்டினார். ஆனால் அதில் நீரே வரவில்லை. வெறும் சுண்ணாம்புக் கற்களாக வந்தது. வேலை செய்பவர்களும் இதற்கு மேல் நீர் வராது என்று வேலையை நிறுத்திவிட்டனர். அவர் உடனடியாக ஸ்ரீஹரியை வேண்ட, ‘மாதனூர் விஷ்ணு தீர்த்தர்’ ஆசி வழங்கினார். இந்த கிணற்றிற்கு அவர் பெயரே வைக்கிறேன் என்று சொல்லிய குருகோவிந்தவிட்டலர், மறுபடி பூமி பூஜை செய்து, மேலும் தோண்டச் சொல்ல, அடுத்த 4-5 அடிகளில் நீர் வரத் துவங்கிவிட்டது. அந்த கிணற்றிற்கு விஷ்ணு தீர்த்தம் என்று பெயரிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிணற்றின் நீரையே தேவர பூஜைக்கு பயன்படுத்திவருகின்றனர்.  

இவரை அபரோக்ஷ ஞானி என்று சொல்ல முடியாவிட்டாலும், மிகப்பெரிய ஞானி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பகவத் சாதனை எப்படிச் செய்ய வேண்டுமென்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். பல மகா மந்திரங்களை ஜபித்து வந்தார். இவர் ஒரு உத்தம வழிகாட்டி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

சிஷ்யர்: குருகோவிந்தவிட்டல தாசர், எவ்வளவு கிரந்தங்களை எழுதியுள்ளார்?

குரு: குருகோவிந்தவிட்டலதாசர் செய்த கிரந்தங்களின் கன்னட மொழிபெயர்ப்பு அனைத்தும் அவர் இயற்றிய கிரந்தங்கள் என்று சொல்லலாம். கன்னடத்தில் எழுதிய தசோபநிஷத் விளக்கம் (ஷட்பதியில் எழுதியது) மற்றும் பல புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார். இவரது நூல்கள் 'குருக்ருபா கிரந்த மாலா' என்ற தலைப்பில் அச்சாகி வெளிவந்துள்ளது.

சிஷ்யர்: இப்படி பிரசுரிக்கப்படட புத்தகங்கள் எவ்வளவு இருக்கும்?

குரு:சுமார் 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை அச்சாகி வெளிவந்துள்ளன.

சிஷ்யர்: குருவே, உங்கள் இருவருக்குமான தொடர்பு எப்படி இருந்தது?

குரு: முன்பே சொன்னதுபோல், எங்கள் இருவரையும் சந்திக்க வைத்தது அந்த ஸ்ரீஹரியே எனலாம். 1974-75ம் ஆண்டு, குருகோவிந்தவிட்டலரின் புத்தகங்களை மாண்டியாவின் அனந்தய்யா என்பவர் என் தந்தையிடம் கொண்டு வந்து கொடுத்தார். நானும் அப்போது அவரது தேவரநாமா புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவரது இல்லத்தை தேடிச் சென்றேன். அவரது இல்லம் கிடைக்கவேயில்லை. என் நண்பர் H.P.பிரஹலாத் மற்றும் இன்னொரு நண்பருடன் அன்றிரவு ஒரு ஹோட்டலில் தங்கி, அடுத்த நாள் காலையில் தேடினோம். அப்பொழுதும் அவரது வீடு கிடைக்கவேயில்லை. மிகவும் வருத்தமாயிற்று.

ஸ்ரீஹரியிடம் வேண்டியவாறு நின்றிருந்தபோது, ஸ்மார்த்த ப்ராமணர் ஒருவர் - மிகவும் வயதானவர் - விபூதி தரித்து - வெள்ளை ஜிப்பா வேட்டி அணிந்திருந்தார் - ஒரு சிறு பெண் குழந்தையுடம் வந்துகொண்டிருந்தார். பள்ளால் என்ற உணவகம் அருகில் வந்து கொண்டிருந்தவரை பார்த்தவுடன், எனக்கு, அந்த ருத்ரதேவரே நேரில் வந்ததாகத் தோன்றியது. இவரிடம் முகவரி கேட்போம். தெரிந்தால் சரி, தெரியாவிட்டால் அங்கிருந்து திருமுக்கூடல் சென்றுவிடலாம் என்று நினைத்தேன். அவரிடம் முகவரியை கேட்டேன்.

வீட்டைக் காட்டுகிறேன் என்று சொன்னவருடன், ஒரு ஆட்டோ பிடித்து, அவருடன் சென்றோம். ஆட்டோவிற்கு பணம் கொடுத்து திரும்புவதற்குள், அவரும் அந்தக் குழந்தையும் எங்கு சென்று மறைந்தார்களோ தெரியவில்லை. சரி என்று குரு கோவிந்தவிட்டலரின் வீட்டிற்குள் சென்று அவரை சந்தித்தேன். மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இப்படியான எங்கள் முதல் சந்திப்பு 1974 ஆஷாட சுக்ல த்விதியை அன்று நடந்தது.

சிஷ்யர்: இவரிடம் உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?

குரு: இவரது பாடல்களை நான் ஏற்கனவே படித்து ஆனந்தப்பட்டிருந்தாலும், அவரை சந்திக்க என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கவில்லை. இப்படியே 4-5 ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிறகு ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டல பூஜை செய்து, எனக்கு ஸ்ரீகிருஷ்ண மந்திரம் உபதேசம் செய்தார். அன்றிலிருந்து அவர் மேல் எனக்கிருந்த மரியாதை இன்னும் அதிகரித்தது.

சிஷ்யர்:அவரது உபதேசம் கிடைப்பதற்கு முன் & கிடைத்தற்கு பிறகான வித்தியாசம் ஏதாவது கண்டீர்களா?

குரு: குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. ஆனால், சில மாற்றங்கள் ஏற்பட்டன என்பது மட்டும் நிச்சயம்.

சிஷ்யர்: இந்த வித்யாலயாவை இவர் அல்லது வேறு யாராவது சொல்லி துவக்கினீர்களா?

குரு: இந்த கேள்வியை இப்பொழுது என் கேட்கிறாய்?

சிஷ்யர்: இல்லை, இந்த வழியில் செல்ல வேண்டுமென தோன்றியது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் கேட்டேன்.

குரு: இந்த வித்யாலயாவை தொடங்குவதற்கு முதல் காரணம் என் தாய் தந்தையரே. அடுத்தது குருகோவிந்தவிட்டல தாசரே. எப்படியென்றால், சுமார் 1980ம் ஆண்டு, இவரைப் பார்ப்பதற்கு என் தந்தையின் அனுமதியுடன் மைசூர் சென்றேன். அங்கு சென்று சேர்ந்தபோது மாலை 5 மணி இருக்கும். நடக்க வேண்டாமென்று ஒரு ஆட்டோவில் ஒரு வீட்டுக்குச் சென்றோம். அது Dr.வரதராஜ ராவ் அவர்களின் வீடு. கூடத்தில் எனக்கு படுக்கை விரித்து, அதில் ஓய்வு எடுக்குமாறு சொன்னார். என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 7.30மணி சுமாருக்கு வெளியே வந்தோம். இன்னொரு ஆட்டோ பிடித்து KMபுரம் சென்றுகொண்டிருந்தபோது, அவர் யார் என்ன வேலையில் இருக்கிறார் என்று கேட்டேன். அவர் மைசூர் பல்கலைக்கழகத்தில், ஹரிதாச சாஹித்ய பிரிவில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் என்று தெரிந்தது.  ஹரிதாச சாஹித்யத்தில் டாக்டரேட் வாங்கியிருக்கிறார் என்றும் சொன்னார்.

இந்த ஹரிதாச சாஹித்யத்தில் டாக்டரேட் வாங்குவதற்கு என்ன இருக்கிறது என்ற நினைப்பு எனக்கு வந்தது. அதைப் படிக்கவேண்டும் என்றும் தோன்றியது.

இந்த வித்யாலயாவை துவக்குவதற்கு அடித்தளமாக, என் தந்தை கொடுத்த கொஞ்சம் பலத்தால், நானும் படித்து, மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டுமென்று யோசித்து, அதற்கான விடையாக 1996 ஜனவரியில் தாசசாஹித்ய பள்ளி துவக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்குள்ளாகவே, என் தந்தை, தாய், வரதராஜராவ் மற்றும் குருகோவிந்தவிட்டலர் அனைவரும் இறைவனடி சேர்ந்துவிட்டிருந்தனர். இப்படி யாருமே கூட இல்லையென்றாலும், தைரியத்துடன் இந்த வேலையைத் துவக்கி, இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன. இதெல்லாமும் கூட மேற்சொன்ன அனைவரின் அனுக்கிரத்தின் காரணமே என்று நம்புகிறேன்.

சிஷ்யர்: வித்யாலயாவை திறந்தபிறகு உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

குரு: வித்யாலயாவை திறந்தபிறகு பல தடைகள் வந்தன. கேள்வித்தாள் தயார் செய்வது, தேர்வுகளை நடத்துவது இதற்கான நேரம் ஒதுக்குவது, பிறகு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவது இவற்றில் பிரச்னைகளை சந்தித்தேன். அவற்றிற்குப் பிறகு, தற்போது இவை யாவும் ஓரளவுக்கு சரியாக நடந்துவருகின்றன.

சிஷ்யர்: கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். உங்களுக்குப் பிறகு இந்த வித்யாலயா எப்படி நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

குரு: பரவாயில்லை. கேட்டதில் தவறில்லை. ஜாதஸ்ய மரணம் த்ருவம் (பிறந்தவர் அனைவருக்கும் மரணம் நிச்சயம்). ஆனால், இந்தக் கேள்வியை இதுவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை. நான் உயிரோடிருக்கும் கடைசி நொடி வரை, இந்த வித்யாலயா வளர்வதற்கு மற்றும் இங்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக வாழ்ந்து, அவர்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரித்துத் தர கூடுமானவரை முயல்வேன். அதற்குப் பிறகு, ராயர் & ராஜர் இவர்களின் கையில்.

சிஷ்யர்: குரு கோவிந்த விட்டல தாசரைப் பற்றிய தங்கள் அபிப்ராயம் என்ன?

குரு: அவரைப் பற்றித்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் தற்போது நம்மிடையே இல்லாவிட்டாலும், இந்த வித்யாலயாவை அவரே வழிகாட்டியாக இருந்து நடத்திக் கொண்டிருப்பதாக நம்புகிறேன்.

சிஷ்யர்: மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. தாசரைப் பற்றி கேட்கப் போய், தங்களை பற்றிய கேள்விகளும் கேட்டுவிட்டேன்.

குரு: பரவாயில்லை. நடைமுறையில் இருப்பதைத்தானே கேட்டாய். நானும் விடையளித்தேன். இதற்கு மன்னிப்பு எதற்கு?

சிஷ்யர்: இப்படியாக அனுக்கிரகம் செய்வதற்கு இவர் இவ்வளவு பெரியவரா / தகுந்தவரா என்று கேள்வி வருகிறதே?

குரு: உன் இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஒன்று செய். இவரது பெயரை தினமும் 108 முறை ஜபம் செய்தால், இவரது மகிமை பற்றி உனக்கே தெரியவரும்.

சிஷ்யர்: சரி குருவே. நீங்கள் கூறியதை போலவே செய்கிறேன். ஆமாம், இவருக்கு அவ்வளவு தகுதி எப்படி வந்தது?

குரு: உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால், அவர் மேல் மரியாதை இருந்தால் - நான் சொல்வதைக் கேள். இவர் வாதிராஜரின் பரம பக்தர். வாதிராஜர், இவரை முன்வைத்து, தன் வேலைகளை நடத்திக் கொண்டு, இவருக்கு புகழ் வருமாறு அனுக்கிரகம் செய்திருக்கிறார். ஆகவே இவருக்கு அவ்வளவு தகுதி வந்தது. ஆகவே சொல்கிறேன், நீயும் இவர் பெயரை ஜபம் செய்து, இவரிடத்தில் பக்தி செய். உனக்கும் நல்லதே நடக்கும்.

சிஷ்யர்: அவரை நான் கண்டதில்லை. நீங்களே எனக்கு சரியான வழி காட்டுங்கள்.

குரு: அதுதான் சொன்னேனே, தினந்தோறும் காயத்ரி மந்திரம் ஜெபித்தபிறகு, இவர் பெயரை ஜெபம் செய். இவர் மூலமாக ராஜர் உனக்கு அனுக்கிரஹம் செய்வார்.

சிஷ்யர்: ஆகட்டும் குருவே. தாங்கள் சொன்ன மாதிரியே, இன்றிலிருந்து பிரார்த்தனை செய்யத் துவங்குகிறேன். இவ்வளவு கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றபின், எனக்கும் அங்கிதம் பெற வேண்டும் என்று தோன்றுகிறது.

குரு: அப்படியா. அவரை பிரார்த்தனை செய். அவரே கனவில் வந்து அனுக்ரஹிப்பார்.

சிஷ்யர்: இல்லை குருவே. நீங்களே அங்கிதம் தரவேண்டும்.

குரு: எனக்கு அந்த தகுதி இல்லை. யாராவது தகுதி உள்ளவர்களை தேடிக்கொள்.

சிஷ்யர்: இல்லை குருவே. நீங்களே வழி காட்டுங்கள்.

குரு: அவரையே நம்பி நட.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து


**

Q&A

1. குருகோவிந்த தாசர் பரம்பரையின் மூலகுரு யார்? அவர் பரம்பரையின் பெயர் என்ன? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?
விடை: கோடப்ளே கோவிந்த தாசர். காதுகளில் கோடப்ளே வடிவில் தங்கத்தினால் ஆன கடுக்கண் அணிந்திருப்பார்.

2. குருகோவிந்த தாசரின் பெற்றோர் பெயர் என்ன?
விடை: ரகுநாதராவ் & லட்சுமிபாய்

3. குருகோவிந்த தாசரின் பிறந்த நாள் எப்போது?
விடை: ச்ராவண பகுள த்வாதசி செவ்வாய்கிழமை தேதி 28 ஆகஸ்ட் 1894

4. குருகோவிந்த விட்டல தாசர் தன் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது, அவரை ஆசிர்வதித்தவர் யார்? அதற்கு என்ன ஆதாரம்?
விடை: இபராமபுரத்தின் அப்பவரு. தாசரின் ’ஆநமிபே மாதா பிதர்கே’ பாடலே ஆதாரம்.

5. கோவிந்த ராயர் தம் தாயுடன் வசித்து வந்த தாயின் ஒரகத்தி வீட்டிலிருந்து ஏன் வெளியே வந்தார்?
விடை: கோவிந்த ராயர் ஒரு முறை பழைய சாதம் சாப்பிட வேண்டாம் , இன்று சமைத்த சாதம் பொடுங்கள் என்று அவர்  பெரியம்மாவிடம்  கேட்டார். அதற்கு அவரது பெரியம்மா, புது சாதம் வேண்டும் என்றால் வேறு வீட்டிற்கு போ என்று கடிந்து கொண்டார்.

6. கோவிந்த ராயருக்கும் அவரது தாயாருக்கும் யார் அடைக்கலம் கொடுத்தார்? அவர் வீட்டு சூழல் எப்படி இருந்தது?
விடை: நவரத்தின ராவ் ராயரு. அவர் வீட்டில் தினமும் பஐனை, பாராயணம், உபன்யாசம் முதலான நல்ல தர்ம காரியங்கள் நடந்து வந்தன.

7. கோவிந்த ராயர் பள்ளியில் படிக்கும் போது, எந்த நாடகங்களில் மற்றும் எந்த வேடங்களில் நடித்தார்?
விடை: வேணி ஸம்ஹாரம், அஷ்வத்தாம, மெர்சண்ட் ஆஃப் வெனிஸ், பெல்லார்.

8. கோவிந்த ராயர் எந்த வேலையை ஏற்றுக் கொண்டார் ? அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன?  அதனை அவர் எவ்வாறு பயன்படுத்தினார்?
விடை: பொதுஐன சேவை பிரிவில் சப்ஓவர்சியர். எப்பொழுதும் வெவ்வேறு ஊர்களுக்கு மாறுதல் செய்வர் .அவ்வாறு வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் போது அங்குள்ள தீர்த்த ஷேத்ரங்களை போய் தரிசனம் செய்வார்.

9. கோவிந்த ராயர் யாரை மணமுடித்தார் ? அவருக்கு எத்தனை பெண் மற்றம் ஆண் பிள்ளைகள்?
விடை: துளசம்மா, கிருஷ்ணவேணி என்று இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண் பிள்ளைகள்.

10. கோவிந்த ராயருக்கு அங்கிதம் தந்தவர் யார் அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?
விடை: தந்தே முத்து மோஹன விட்டல தாசர். அவர் விஐயதாசர் சிஷ்யராகிய வேணுகோபால விட்டல தாசரின் பரம்பரையை சேர்ந்தவர்.

11. குருகோவிந்தவிட்டலதாசரின் தாய் மற்றும் மனைவியின் அங்கிதங்கள் என்ன? அவற்றை வழங்கியது யார்?
விடை: தாய் - பாரதீஷப்ரிய விட்டல
மனைவி - லட்சுமீஷ விட்டல
வழங்கியவர் - உரகாத்ரிவாச விட்டல தாசர்

12. பேளூரு கேஷவ தாசர் வெளிட்டிருக்கும் “கர்நாடக பக்த விஐயம்” என்னும் நூலை போல குருகோவிந்தவிட்டலதாசர் ஒரு புத்தகம் வெளிட்டார் . அதன் பெயர் என்ன?
விடை: ஹரி பக்த விஜயா. 7  பாகங்கள் (ஏழு புத்தகங்கள்).

***


Tuesday, April 18, 2017

பகவானின் அனுபவம்

பகவானின் அனுபவம்

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம்: திருமதி. மமதா
தமிழில்: திருமதி. சுமதி ராவ்

***

"சத்திய ஜககிது பஞ்ச பேதவு நித்ய ஶ்ரீகோவிந்தன" என்பது போல இந்த உலகம் முழுவதும் உண்மை மற்றும் எல்லா உயிருள்ள மற்றும் ஐடப்பொருட்களிலிருந்து வேறுபட்டவன் பரமாத்மா. இந்த உலகத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் பரமாத்மா லக்ஷ்மியுடன் கூடி செய்கிறான். அத்தனை ஜீவராசிகளுக்கும் அவரவர் யோக்யதைக்கேற்ற நிலையை தருவதற்காகவே இந்த படைத்தல் முதலான காரியத்தை செய்கிறான். அப்படியென்றால் பரமாத்மாவுக்கு இதனால் என்ன லாபம் ? இது பரமாத்மாவின் லீலை மற்றும் அவன் கருணையே. வேதங்கள் புகழுகிற பரமாத்மாவுக்கு சோர்வு , லாப நஷ்டங்கள், சுக துக்கங்கள் கிடையாது.

"மளல மனெகள மாடி மக்களு
கெலவு காலதலாடி மோததி
துளிது கெடிசுவ தெரதி
லக்ஷ்மி ரமண லோககள"

குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடி பிறகு அதை மிதித்து உடைப்பது போல் பரமாத்மா லோகத்தை படைத்து அழிக்கிறான் . அப்படியென்றால் இந்த பரமாத்மா எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை அறிந்துக்கொள்வதுதான் எப்படி? என்றால் அவன் இல்லாத இடமே இல்லை. இவனை சொல்லாத வார்த்தைகளே இல்லை, அணுவில் அணுவாக, பிரம்மாண்டத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறான் . எல்லா விதத்திலும் முழுமையானவனாக இருக்கிறான் . அவனை பகவத் அனுபவத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.

லவண மிஷ்ரித ஜலவு தோர்புது
லவனதொபாதியலி ஜிஹ்வெகெ
விவரகைஸலு ஷக்யவாகுவுதேனோ
நோள்பரிகே

உப்பு கலந்த நீரை ருசித்தால் மட்டும்தான் அதில் உப்பு இருப்பது தெரியும். பார்ப்பதால் மட்டும் வெறும் நீரா அல்லது உப்பு கலந்த நீரா என்று தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறே பரமாத்மாவை அனுபவத்தில்தான் அறிந்துக்கொள்ள முடியும்.

கரும்பை கடித்து சுவைத்தால்தான் அதன் இனிமை தெரியுமே தவிர அது பார்ப்பதற்கு வெறும் கட்டையைப் போலத்தான் இருக்கும். அப்படியென்றால் பகவத் அனுபவத்தை அடையும் வழியென்ன? அதனால் ஜீவனுக்கு என்ன லாபம்?

பரமாத்மாவை வேதங்களின், உபநிஷத்தின் மூலமாக , புராண புண்ய கதைகளை கேட்பதன் மூலமாக, ஹரிதாஸ கீர்த்தனைகளை பாடி புகழ்வதன் மூலமாக, ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குருகளின், பெரியவர்களின் சேவையின் மூலமாக அடையலாம். அனைத்து வார்த்தையின் பொருள் அவனே என்று அறிந்தவன் பேசும் பேச்சே அவன் மந்திரமாகும். பரமாத்மாவை நினைத்த கணமே பண்டிகையாகும். அவனின் சேவை என்று நினைத்து செய்யும் எல்லா வேலையும் பூஜைதான். அவனை நினைத்த இடமே புண்ணிய க்‌ஷேத்திரம். இவ்வாறு எந்த ஜீவன் தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் பரமாத்மாவை அனுசந்தானம் செய்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு ஆயிரமாயிரம் ஜன்மங்களின் சாதனைக்கு பிறகு கருணா சாகரனான பரமாத்மா அபரோக்ஷ ஞானத்தை வழங்கி இந்த பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் என்னும் ஆனந்தத்தை அளிக்கிறான்.

கலியுகத்தில் சிறு சாதனைக்கு கூட மகத்தான புண்ணியம் கிட்டும். "மானவ ஐன்ம தொட்டது" என்று சொன்னதைப்போல் எல்லோரும் நல்வழியில் நடந்து, பக்தியால் பகவத் சாதனை செய்து, பரமாத்மாவின் அருளை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Haridasa Sahitya Mahavidyalaya and Research Center தங்களின் 20வது ஆண்டு விழாவை 3.7.2016 அன்று கொண்டாடுகிறார்கள் . எல்லா மாணவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என வேண்டுகிறேன்.

***

Sunday, April 9, 2017

தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்

தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்

ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம் : ஸ்மிதா
தமிழில் : திருமதி. சுமதி ராவ்

***

தாஸ சாகித்யம், மத்வ சித்தாந்தத்தின் தத்துவங்கள் மற்றும் அதன் ஆன்மிக ரகசியங்களை சரளமான கன்னடத்தில் சொல்கிறது. ஹரிதாஸர்களின் சேவை மிக மேன்மையானது. அனைவரையும் பக்தி பாதைக்கு அழைத்துச்சென்றது இதன் சிறப்பு. தாஸ சாகித்யம் சர்வ மூல க்ரந்தங்களின் சாரம். இது பக்தியை சொல்லும் இலக்கியம்.

ஶ்ரீமத்வாச்சார்யார் உண்மையில் எல்லோருக்கும் ஜகத்குருதான். ஆனால் சாதாரண மனிதர்களால் சமஸ்கிருத்த்தையும் வேதங்களையும் படித்து புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவற்றை முதல்முறையாக கன்னடத்தில் எழுதி பிரசாரம் செய்தவர் ஶ்ரீ நரஹரி தீர்த்தர். அதன்பின்னர், ஶ்ரீபாதராஜர், ஶ்ரீபுரந்தரதாஸர், ஶ்ரீகனகதாஸர் போன்ற தாஸ ச்ரேஷ்டர்கள் தங்கள் அரிதான படைப்புகளால் பக்தி இலக்கியத்திற்கு மகத்தான தொண்டாற்றி அதை பேணி வளர்த்து இன்றளவும் நாம் அதை படித்து மகிழ வழி வகுத்திருக்கின்றனர்.

பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையில் உள்ள வாழ்க்கையில் நாம் எவ்வாறு பக்தி சாதனை செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் தங்கள் கீர்த்தனைகள் மூலம் எடுத்துச்செல்லி நம்மை இறைபக்தி என்னும் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு பக்தி வரவேண்டும் என்றால் அந்த படைப்புகளின் மீது ஈடுபாடு இருக்க வேண்டும். ஈடுபாடு வந்தால் நம்பிக்கை வரும், நம்பிக்கை வந்தால் ஆர்வம் வரும், ஆர்வம் வந்தால் பக்தி வரும். பக்தி வந்தால் இறை சாதனை வழியில் சென்று முக்தி அடையலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும். இவ்வாறு தாஸ சாகித்யம் பக்தி மற்றும் முக்திக்கு படிக்கட்டுகளாக திகழ்கின்றது.

எதற்காக தாஸ சாகித்யத்தை படிக்க வேண்டும்? அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், அதில் என்ன இல்லை என்றுதான் கேட்க வேண்டும். இதை ருசித்தவருக்குத்தான் இதன் இனிமை தெரியும். ஹரிதாஸர்கள் வர்ணிக்காத விஷயமே இல்லை. எல்லாம் அம்பைப்போல் நேராக மனதைத் தொடும்படி உள்ளன. மற்றும் என்றும் அழியாத வண்ணம் உள்ளன. பகவானை அறிந்துக்கொள்ளவும், தாஸ ச்ரேஷ்டர்கள் படைத்த காவியங்கள் சிறப்பானவை. ஆகையால், தாஸ சாகித்யத்தில் என்ன உள்ளது என்று கேட்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்தான்.

கலியுகத்தில் பகவத் நாம ஸ்மரணைக்கு அதிக சிறப்பு. ஆகையால், பகவான் அனைத்துக்கும் ஊக்கமாக, அனைவருக்குள் நின்று அனைத்து செயல்களைச் செய்பவனாகவும், அச்செயல்களின் பலன்களை பெற்றுத் தருபவனாகவும், ஸ்ரீஹரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் நம் இதயத்தில் நின்று நம்மை நல்வழியில் நடத்திச் செல்லுமாறு பிரார்த்திப்போம். தாஸர்கள் கடைபிடித்த பாதையை நாமும் கடைபிடித்து புண்ணியம் பெறலாம். தாஸ சாகித்யத்தில் உள்ள அமுதத்தை அனைவரும் ருசித்து ஆனந்தம் அடையட்டும் என பகவானை பிரார்த்திக்கிறேன்.

ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் இந்த இருபதாவது ஆண்டு விழா நன்னாளில் அனைத்து மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

***