Sunday, April 9, 2017

தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்

தாஸ சாகித்யமும் அதன் அமுதமும்

ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம் : ஸ்மிதா
தமிழில் : திருமதி. சுமதி ராவ்

***

தாஸ சாகித்யம், மத்வ சித்தாந்தத்தின் தத்துவங்கள் மற்றும் அதன் ஆன்மிக ரகசியங்களை சரளமான கன்னடத்தில் சொல்கிறது. ஹரிதாஸர்களின் சேவை மிக மேன்மையானது. அனைவரையும் பக்தி பாதைக்கு அழைத்துச்சென்றது இதன் சிறப்பு. தாஸ சாகித்யம் சர்வ மூல க்ரந்தங்களின் சாரம். இது பக்தியை சொல்லும் இலக்கியம்.

ஶ்ரீமத்வாச்சார்யார் உண்மையில் எல்லோருக்கும் ஜகத்குருதான். ஆனால் சாதாரண மனிதர்களால் சமஸ்கிருத்த்தையும் வேதங்களையும் படித்து புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவற்றை முதல்முறையாக கன்னடத்தில் எழுதி பிரசாரம் செய்தவர் ஶ்ரீ நரஹரி தீர்த்தர். அதன்பின்னர், ஶ்ரீபாதராஜர், ஶ்ரீபுரந்தரதாஸர், ஶ்ரீகனகதாஸர் போன்ற தாஸ ச்ரேஷ்டர்கள் தங்கள் அரிதான படைப்புகளால் பக்தி இலக்கியத்திற்கு மகத்தான தொண்டாற்றி அதை பேணி வளர்த்து இன்றளவும் நாம் அதை படித்து மகிழ வழி வகுத்திருக்கின்றனர்.

பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையில் உள்ள வாழ்க்கையில் நாம் எவ்வாறு பக்தி சாதனை செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் தங்கள் கீர்த்தனைகள் மூலம் எடுத்துச்செல்லி நம்மை இறைபக்தி என்னும் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு பக்தி வரவேண்டும் என்றால் அந்த படைப்புகளின் மீது ஈடுபாடு இருக்க வேண்டும். ஈடுபாடு வந்தால் நம்பிக்கை வரும், நம்பிக்கை வந்தால் ஆர்வம் வரும், ஆர்வம் வந்தால் பக்தி வரும். பக்தி வந்தால் இறை சாதனை வழியில் சென்று முக்தி அடையலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும். இவ்வாறு தாஸ சாகித்யம் பக்தி மற்றும் முக்திக்கு படிக்கட்டுகளாக திகழ்கின்றது.

எதற்காக தாஸ சாகித்யத்தை படிக்க வேண்டும்? அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், அதில் என்ன இல்லை என்றுதான் கேட்க வேண்டும். இதை ருசித்தவருக்குத்தான் இதன் இனிமை தெரியும். ஹரிதாஸர்கள் வர்ணிக்காத விஷயமே இல்லை. எல்லாம் அம்பைப்போல் நேராக மனதைத் தொடும்படி உள்ளன. மற்றும் என்றும் அழியாத வண்ணம் உள்ளன. பகவானை அறிந்துக்கொள்ளவும், தாஸ ச்ரேஷ்டர்கள் படைத்த காவியங்கள் சிறப்பானவை. ஆகையால், தாஸ சாகித்யத்தில் என்ன உள்ளது என்று கேட்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்தான்.

கலியுகத்தில் பகவத் நாம ஸ்மரணைக்கு அதிக சிறப்பு. ஆகையால், பகவான் அனைத்துக்கும் ஊக்கமாக, அனைவருக்குள் நின்று அனைத்து செயல்களைச் செய்பவனாகவும், அச்செயல்களின் பலன்களை பெற்றுத் தருபவனாகவும், ஸ்ரீஹரி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் நம் இதயத்தில் நின்று நம்மை நல்வழியில் நடத்திச் செல்லுமாறு பிரார்த்திப்போம். தாஸர்கள் கடைபிடித்த பாதையை நாமும் கடைபிடித்து புண்ணியம் பெறலாம். தாஸ சாகித்யத்தில் உள்ள அமுதத்தை அனைவரும் ருசித்து ஆனந்தம் அடையட்டும் என பகவானை பிரார்த்திக்கிறேன்.

ஹரிதாஸ சாகித்ய வித்யாலயாவின் இந்த இருபதாவது ஆண்டு விழா நன்னாளில் அனைத்து மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

***

No comments:

Post a Comment