Friday, March 16, 2018

12/12 ஐந்து பரிசுத்த தேவதைகள்


ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்




முன்னுரை

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள் என்னும் புத்தகம் வெளிவந்துவிட்டது. கேள்வி-பதில் வடிவத்தில் இருந்த அந்தப் புத்தகத்தை பலரும் பாராட்டினார்கள். ஆகவே, தாரதம்யத்தில் வரும் அனைத்து தேவதைகளைப் பற்றியும் அதே கேள்வி-பதில் வடிவத்தில் புத்தகம் வெளியிடவேண்டும் என்று விருப்பம் எனக்கு வந்தது. அதன் முயற்சியாக, இந்தப் புத்தகத்தில், லட்சுமிதேவி, நான்முகப் பிரம்மன், முக்யபிராணதேவர், சரஸ்வதி மற்றும் பாரதிதேவிகளைப் பற்றி பல விஷயங்களை சொல்ல முயன்றிருக்கிறேன். 

நாராயணனிடமிருந்து, பாரதிதேவி வரை அவர்களின் மகிமைகளை பல ஆதாரங்களின்படி இங்கே சொல்லியிருக்கிறேன். இவர்களைப் பற்றி கட்டுரை வடிவில் சுருக்கமாக படித்தால் போதும் என்று நினைப்பவர்கள், இந்த முன்னுரையைப் படித்தாலே போதுமானது. பல மேலதிகத் தகவல்கள் வேண்டும் என்பவர்கள், ’ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்’ மற்றும் ’ஐந்து பரிசுத்த தேவதைகள்’ என்ற இரு புத்தகங்களையும் முழுக்க படிக்கவேண்டும். 

ஸ்ரீமன் நாராயணன்

அனைத்து நற்குணங்களும் நிரம்பியவரும், எந்தவித தோஷங்களும் இல்லாதவரே ஸ்ரீமன் நாராயணன்.  நாராயணனிடமிருக்கும் குணங்களை லட்சுமிதேவியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது சாத்தியமில்லை. இவரிடமிருக்கும் குணங்கள் அனைத்துமே முழுமையானவையாகும். மோத, பிரமோத முதலான அனந்த குணங்கள், விக்ஞான, பிரக்ஞான முதலான ஞான குணங்கள் என்று ஸ்ரீஹரியின் அனைத்து குணங்களும் முழுமையானவையாகும். அவரின் ஒவ்வொரு ரூபமும் பல ரூபங்களைக் கொண்டவையாகும். 

நாராயணனின் குணம், செயல் ஆகிய அனைத்தும் முழுமையானவை. ஞானமானது ஆனந்தமயமானதைப் போல, ஆனந்தமும் ஞானமயமானதாகும். வேதங்களிலிருக்கும் ஆனந்தம் முதலான சொற்கள், ஸ்ரீஹரியின் ஆனந்தம் என்னும் குணத்தையே நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எல்லா குணங்களும் அனைத்து காலங்களிலும் இருப்பவை, மாறாதவை. விளக்குவதற்கு சாத்தியம் இல்லாதவை. 

ஸ்ரீஹரி அனைத்து சுபகாரியங்களின் பலன்களை ஏற்றுக்கொள்பவராக இருக்கிறார். எவ்வித தற்காலிக அல்லது லௌகிக சுகங்களையும் இவர் விரும்புவதேயில்லை. ஒரே நேரத்தில் பற்பல ரூபங்களைக் கொண்டவராகிறார். அவரது அவதாரங்கள் நித்யமானவை (அழியாதவை). விகாரம் இல்லாதவை (அழகானவை). அப்ராக்ருதமானவை (இயற்கையானதல்ல). சச்சிதானந்தமயமானவை. ஒவ்வொரு அவதாரமும் அந்தந்த காலத்திற்கேற்ப, நேரத்திற்கேற்ப அனந்த அவதாரங்களானவை. உலகத்தைப் படைக்கும் பிரம்ம ருத்ரர்களையே நிர்வகிப்பவர் ஸ்ரீமன் நாராயணன்.

ஸ்ரீஹரி அணுவை விட அணுவாக சிறியதாக இருக்கிறார். பெரியதைவிட பெரியதாகவும் இருக்கிறார். பெரியது-சிறியது, தூர-அருகில், தெளிவான-தெளிவில்லாத என்று பல முரண்களாக (இரு விதமாகவும்) இருக்கிறார். இவை அனைத்தும் ஸ்ரீஹரியின் ஒப்பில்லா சக்தியினால் உண்டாகின்றன. ஆனால் இவரது பலவித ரூபங்களில் எவ்வித வேறுபாடுகளும் இருப்பதில்லை.

எப்படி சூரியனிடம் இருட்டிற்கு வேலையில்லையோ, அப்படி அனைத்து நற்குணங்களும் நிரம்பியவரான ஸ்ரீஹரியிடம் எவ்வித தோஷத்திற்கும் வேலையில்லை. 

உலகத்தில் இருக்கும் பொருட்களைப் போல, ஸ்ரீஹரி வேறுபாடுகளைக் கொண்டவரல்ல. அவர் வேறுபாடுகள் இல்லாதவர், ஆனாலும் பல்வேறு ரூபங்கள் எடுத்து, வெவ்வேறாகக் காட்டிக்கொள்பவர். இத்தகைய அற்புத சக்தியை வேறு எங்கும் / யாரிடமும் காணமுடியாது. ஸ்ரீஹரியின் ஒவ்வொரு உறுப்புகளும்கூட தனித்தனி ரூபமாகவே ஆகியிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் இருக்கின்றது. இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீஹரி, உலகத்தின் உள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறார். ஆனாலும், தனக்கும் உலகத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் தனித்திருக்கிறார். இந்த உலகத்தை ஸ்ரீஹரியின் ஸ்வரூபம் என்று அறியக்கூடாது. ஸ்ரீஹரியும் இந்த உலகத்தின் ஸ்வரூபம் என்று அறியக்கூடாது. உலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களின் வேலைக்கும் இவரே காரணமாக இருக்கிறார். அனைத்து எழுத்துக்களும் இவரையே குறிக்கின்றன. இதுவே ஸ்ரீஹரியின் விபூதி ரூபத்தின் சிறப்பு ஆகும். 

அனைவரின் முழிப்பு ஆகிய நிலைகளுக்கு இவரே தூண்டுகோலாக இருக்கிறார். அனைவரின் அனைத்து செயல்களும் ஸ்ரீஹரியின் இச்சைப்படியே நடக்கின்றன. ரமா, பிரம்மா முதலான தேவதைகளும்கூட ஸ்ரீஹரியின் கண்ணசைவின்படியே நடக்கும்படி, சுதந்திரம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீஹரியின் முழுமையான பிரதிபிம்பமாக (பிரதிபலிப்பு) இருக்கின்றனர். பொருள், செயல், காலம், உலகம், ஜீவன், கடமை, வாழ்க்கை, முக்தி ஆகிய அனைத்துமே ஸ்ரீஹரிக்கு கீழ்ப்படிந்தே இருக்கின்றன. அவரது கட்டளைப்படியே நடக்கின்றன. அவரின் அருளினாலேயே இவை செயல்படுகின்றன. இவர் விரும்பவில்லை என்றால் அவை இருப்பதில்லை. இந்த உலகத்தை படைத்ததால் ஸ்ரீஹரிக்கு எவ்வித பயனும் இல்லை. தன் லீலைகளைக் காட்டுவதற்காக அனைத்தையும் செய்கிறார். ஸ்ரீஹரியிடம் எதையும் / யாரையும் வேறுபடுத்திப் பார்க்கும் தோஷங்கள் இருப்பதில்லை. அந்தந்த பொருட்களின் சுபாவம் / தகுதிக்கேற்ப, அந்தந்த பொருட்களை கட்டுப்படுத்துகிறார். 

அஞ்ஞானம், துக்கம், கவலை ஆகிய தோஷங்கள் இவரிடம் அறவே இருப்பதில்லை. பற்பல உலகங்கள், இவரின் சரீரத்தில் இருக்கும் முடிகளில் இருக்கும் ஒரு சிறு துகளுக்கு ஒப்பானவை. உலகத்தின் படைப்புத் தொழிலை ஸ்ரீஹரியானவர் எப்படி செய்கிறார் என்பதை பிரம்மன் முதலான தேவதைகளும்கூட சரியாகப் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை. ரமாதேவியாலும்கூட இது சாத்தியம் இல்லை. பற்பல உலகங்களில், பற்பல ரூபங்களினால் நிலைத்திருந்து, பற்பல லீலைகளைப் புரிந்து, தன் இஷ்டப்படி பற்பல ரூபங்களை நிறுத்துகிறார். இதுவே இவரது விளையாட்டு. 

லட்சுமிதேவியுடனேயே எப்போதும் இருக்கிறார். லட்சுமிதேவிக்கு எப்போதும் இவரது இன்மை இருப்பதில்லை. அனைத்து இடங்களிலும் இருப்பவர், அனைத்தையும் நிர்வகிப்பவர், அனைத்து சுப - பதார்த்தங்களையும் ஸ்வீகரிப்பவராக ஸ்ரீஹரி இருக்கிறார். இவரது குணங்களை, மகிமைகளை முழுவதுமாக அறிவதற்கு சாத்தியமே இல்லை. ஸ்ரீஹரியை முழுவதுமாக அறிந்தவர் என முன்னர் யாரும் இருந்திருக்கவில்லை; தற்போதும் இல்லை; பின்னரும் யாரும் வரப்போவதும் இல்லை. எண்ணிக்கை இல்லாத காலங்களில் ஸ்ரீஹரியே சர்வோத்தமனாக இருக்கிறார். மிகவும் ஆச்சரியமான சக்திகளைக் கொண்டவர், அதி அற்புதமான சக்தி ஸ்வரூபன் இவரே. 

இத்தகைய ஸ்ரீஹரியானவர், அனைத்து சாத்விகர்களுக்கும் மோட்சத்தைக் கொடுத்து, எண்ணிக்கையில்லாத சுகங்களைக் கொடுத்து அருள் பாலிக்கிறார். 

மகாலட்சுமி

பிரம்ம வாயுகளைவிட மகாலட்சுமி கோடி குணங்கள் அதிகம் கொண்டவர். விஷ்ணுவின் நற்குணங்களை ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே இருப்பவர். தினமும் புதிதுபுதிதாக காணும் குணங்களை வியப்புடன் பார்த்து, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவர். மறுபடி ஸ்ரீஹரியின் குணங்களின் தியானத்திலேயே இருந்து, மறுபடிமறுபடி அதையே கண்டு வியப்பில் மூழ்குகிறார். எந்தவிதமான தற்காலிக குணங்களையும் கொண்டவரல்லர். விஷ்ணுவைப் பற்றிய ஞானத்தை ஒவ்வொரு நொடியும் பெற்றுக்கொண்டிருப்பவர். ஸ்ரீஹரியின் அருளால், படைத்தல், காத்தல், அழித்தல், ஞானம், அஞ்ஞானம், பந்தம், மோட்சம் முதலானவைகளை தன் பார்வையாலேயே நடத்தி வருபவர். வசு, ருத்ர, ஆதித்ய முதலான தேவதைகள் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொள்பவர். சம்சாரிகளுக்கும் முக்தர்களுக்கும் அனைத்து வித உதவிகளையும் செய்யத் தகுந்தவர் இவரே.  

இத்தகைய ரமாதேவியை சர்வ-சுதந்திரள் (தன்னிச்சையாக அனைத்தையும் செய்பவர்) என்று எப்போதும் எண்ணக்கூடாது. ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டே, அனைத்து திறனையும் பெற்றிருப்பவர். அழகானவர், குறை எதுவும் இல்லாதவர், சர்வமங்கள ரூபம் கொண்டவர், அனைத்து சுபகாரியங்களையும் ஏற்றுக்கொள்பவர் இவரே. எப்போதும் ஸ்ரீஹரியுடனேயே இருப்பவர். ஸ்ரீஹரிக்கு, லட்சுமிதேவியைவிட மிகவும் பிரியமான பொருள் என்று வேறு எதுவும் இல்லை. அந்தந்த தேசத்திற்கு, காலத்திற்கு ஏற்றாற்போல், ஸ்ரீஹரிக்கு சமமாக அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். ஆகையாலேயே, சமனா என்று அழைக்கப்படுபவர். அணுவை விட சிறியதாகவும், பெரியதைவிட பெரியதாகவும் ரூபத்தைக் கொண்டவர். ஸ்ரீஹரியை பற்பல ரூபங்களினால் பூஜிப்பவர் இவர். ஸ்ரீஹரி எந்தவித நற்செயல்களை செய்தாலும், தானும் அனைத்து விதங்களிலும் அவரை அனுசரித்துப் போகிறார்.

எண்ணிக்கையற்ற கல்யாண குணங்களைக் கொண்டவராக இருக்கிறார். பிரம்மாதி தேவதைகளைவிட அதிகமான மகிமைகளைக் கொண்டவர். தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவர், புத்தியினால் அறியப்பட முடியாதவராக பெரும் மகிமைகளைக் கொண்டவர். தியானத்திற்கு யோக்கியமான ரூபத்தை எடுத்திருக்கிறார். தனது அற்புதமான சக்தியினால், அனைத்து தர்மங்களையும் காக்கிறார். 

விஷ்ணுவை மட்டுமே புகழும் சில வேதங்களைத் தவிர, மற்ற வேதங்கள் அனைத்தாலும் புகழப்படுபவர். இந்த மகாலட்சுமியானவர், ருக்மிணி, சத்யபாமா, சீதா ஆகிய பற்பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். இவரின் மகிமைகளை சொல்லி முடிப்பதற்கு, தேவதைகள், ரிஷிகள், கந்தர்வர்கள் என யாராலும் சாத்தியமில்லை. 

பிரம்ம-வாயுதேவர்

பிரம்ம பதவிக்கு தகுதியானவர்கள் ருஜுஜீவிகள் எனப்படுகின்றனர். ருஜுஜீவிகளுக்கு பரமோத்ஸாஹ என்னும் ஒரு வேறுபாட்டினை விட்டுவிட்டால், வேறு எந்த வேறுபாடுகளும் இருப்பதில்லை. அனைத்து நல்ல லட்சணங்களுடன் கூடியவர்கள். அனைத்து உலகத்தையும் ஆள்பவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீஹரியின் விருப்பத்தில் இவர்களின் தேகங்கள் அழிகின்றன. அனைத்து உலகங்களையும் எந்நேரமும் நினைத்துப் பார்க்கும் திறன் படைத்தவர்கள். இவர்களது அறிவு ஆகாயத்தைப் போல மிகவும் பரந்திருந்திருந்தாலும், ஸ்ரீஹரியைப் பற்றி முழுவதுமாக தெரிந்திருப்பவர்கள் அல்லர். இவர்களது அறிவு அனாதி நித்யவாக (தொடக்கம் இல்லா காலத்திலிருந்து, முடிவில்லா காலம் வரை) இருக்கிறது. முக்தர்கள் ஆகும்வரை ஸ்ரீஹரியைப் பற்றிய ஞானமானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. முக்தியில் மட்டும் அந்த அறிவு ஒரேமாதிரியாக இருக்கிறது. ருஜுகளின் பரோக்‌ஷஞானமானது தொடக்கம் இல்லா காலத்திலிருந்து முழுமையாக இருக்கிறது. வேதங்களைவிட அதிகமான ஞானத்தைப் பெற்று மிகவும் திறமையாளர்களாக ஆகின்றனர். 

வாயுதேவர் அனைத்து ஜீவர்களுக்கும் அபிமானியாக இருக்கிறார். ஜீவஸ்வரூபங்களை நிர்வகிப்பவராக இருக்கிறார். புத்தி, பலம், தைரியம், ஸ்தைர்யம், ஞான, வைராக்ய, பக்தி ஆகிய குணங்களுக்கு அபிமானியாக இருக்கிறார். ஜீவர்களின் ஆனந்த-அனுபவத்திற்கும், அவர்களை மோட்சத்திற்குக் கொண்டுபோவதற்கும் அபிமானியாக இருக்கிறார். மற்றும் ஜகத்குருகளாகவும் இருக்கிறார். அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்திற்கும் அபிமானியாக இருக்கிறார். மஹத் தத்வம் முதலான அனைத்து தத்வங்களுக்கும் அபிமானியாக இருக்கிறார். இந்திரியங்களின் வேலைகளை அந்தந்த இந்திரியங்களின் அபிமானியானவர்களின் மூலமாக செய்விக்கிறார். 

ஆவஹ, விவஹ, சம்வஹ, பராவஹ, ப்ரவஹ, உத்தவ, பரிவஹ ஆகிய ரூபவிசேஷங்களினால் லோகங்களை காக்கின்றனர். அண்டோகதத்தில் கூர்மரூபியாக இந்த உலகத்தை காக்கின்றனர். பஞ்சபேதங்கள், பஞ்சதன்மாத்ரங்கள், அனைத்து ஜீவர்களின் நடவடிக்கைகளும் இந்த பிரம்ம வாயுகளாலேயே நடக்கின்றன. ரமா நாராயணரின் அருளினால் அனைத்து செயல்களையும் செய்பவர்களாக இருக்கின்றனர். பிராணாபானாதி ரூபங்களினால், நாதக்ருகல ஆகிய ரூபங்களைக் கொண்டிருக்கின்றனர். 

அனைத்து தேவதைகளுக்கும் அவரவர் பதவிகளைக் கொடுத்து, அவர்களின் வேலைக்கேற்ப அதிகாரங்களை வழங்குகின்றனர். அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பவர்கள் மட்டுமல்லாமல், முக்தியையும் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முக்தஜீவர்களுக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். சூரியன், சந்திரன், அக்னி, பர்ஜன்ய, பிருத்வி, அன்னாதிகளில், அனைத்து திசைகளில், அனைத்து தேவதைகளில், ரிஷிகளில், பிருஹதி முதலான சந்தஸ்களில் நிலைத்திருக்கிறார்கள். 

விஷ்ணுவின் அனிருத்த முதலான ரூபங்களுடன், பிராணாதி ஐந்து ரூபங்களில் வியாபித்து, அனைத்தையும் அவர் ஆணையினால் நடத்தி, ஜாக்ரதாதி (முழிப்பு) முதலான அனைத்து நிலைகளுக்கும் அதிபதியாக இருக்கின்றனர். ரமா நாராயணருக்கு மட்டுமே இவர்கள் கீழ்ப்படிகின்றனர். சுபபதார்த்தங்களை மட்டுமே ஸ்வீகரிப்பவராக இருக்கின்றனர். 72,000 நாடிகளில் 77,000 ரூபங்களினால் நிலைத்திருக்கின்றனர். நாராயணர் மற்றும் மகாலட்சுமியை புகழும் வேதமந்திரங்களை விட்டு, மற்ற அனைத்து வேத மந்திரங்களினாலும் புகழப்படுபவர். பற்பல ரூபங்களை எடுத்திருக்கின்றனர். உலகத்தை வழிநடத்துபவர்களாக இருக்கின்றனர். மொத்தம் மூன்று கோடி ரூபங்களை எடுத்து உலகில் உள்ள சஜ்ஜனர்களுக்கு அருள்கின்றனர். 

பிராணாபானாதி ஐந்து ரூபங்களினால், நாக கூர்மாதி ஐந்து ரூபங்களினால், மொத்தம் பத்து ரூபங்களை தரித்து, ஆத்யாத்ம, அதிபூத, அதிதைவங்களில் நிலைத்திருக்கின்றனர். இந்த வாயுதேவருக்கு, ஹனுமந்தன், பீமசேனர், பூர்ணப்ரக்ஞர் என்று மூன்று அவதாரங்கள் இருக்கின்றன. இந்த அவதாரங்கள், பல (வலிமை), குணம் ஆகியவற்றால் மூலரூபத்திற்கு சமமாகவே இருக்கின்றன. பிரம்மனுக்கு மட்டும் பூமியில் அம்ச-அவதாரமே இருப்பதில்லை. இவர்களது தேகமானது பிராக்ருதமாக (இயற்கையான) இருந்தாலும், சுத்த சத்வாத்மகவாக இருக்கின்றது. மகாபிரளயத்தில் மட்டுமே நாசம் அடைகிறது. கர்வம், கோபம் ஆகிய தோஷங்களிலிருந்து எப்போதுமே தூரமாக இருக்கிறார். வாயுதேவரை வேதங்கள் அமிர்தம் என்று புகழ்கிறது. பிரளய காலத்தில் அனைவரும் தூங்கும் நிலையில் இருக்கும்போது, இவர் மட்டும் முழித்திருந்து, ஸ்ரீஹரியின் நற்குணங்களைப் பாடியவாறு இருக்கின்றார். ஸ்ரீஹரியை மகிழ்ச்சிப்படுத்தவேண்டியே அனைத்து செயல்களையும் செய்கிறார். இவரின் சாதனையை மெச்சி, ஸ்ரீஹரியானவர் இவருக்கு சஹபோக என்னும் சுகத்தைக் கொடுக்கிறார். வாயுதேவரே முந்தைய கல்பத்தில் பிரம்மதேவராக வருகிறார். அனைவருக்கும் குருவாகி, மோட்சத்திற்கு அழைத்துப் போகிறார். 

சரஸ்வதி - பாரதி தேவியர்

பிரம்மனின் மனைவி சரஸ்வதி. வாயுதேவரின் மனைவி பாரதிதேவி. இவர்களது தேகம் ப்ராக்ருதமாக இருந்தாலும்கூட, சுத்த-சாத்வீகாத்மகமாக இருக்கிறது. சர்வ-சத்குண-பரிபூர்ணமானவர்கள். எவ்வித தோஷமும் இல்லாதவர்கள். பிரளய காலத்தில் இவர்களின் தேகம் அழிகின்றன. ருத்ர-இந்திரன் முதலான தேவர்களால் வணங்கப்படுபவர்கள். சரஸ்வதிதேவி, ப்ரக்ருதிக்கு அபிமானினியாக இருக்கிறார். மஹத் தத்வம் முதலான தத்வங்களை உருவாக்குபவராக இருக்கிறார். அவற்றின் அழிவிற்கும் இவரே காரணமாகிறார். வாயுதேவரைவிட பிரம்மன் பதவியில் சிறிதளவு அதிகமான இடத்தில் இருப்பதைப்போல, சரஸ்வதிதேவியும் பாரதிதேவியைவிட பதவியில் சிறிதளவு அதிக இடத்தைப் பெற்றிருக்கிறார். யோக்யதையில் (தகுதி) இருவரும்கூட சமமானவராகவே இருக்கின்றனர். சரஸ்வதி - பாரதிதேவியின் மகிமைகள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு அதிகமானவை. சிரத்தை, திருப்தி, சுகபோகம், குருபக்தி, ஹரிபக்தி போன்ற சுபதர்மங்களுக்கு அபிமானினியாக இருக்கின்றனர். பிரம்ம-வாயுகள் வேதங்களால் புகழப்படுவதைப்போல, இவர்களும் புகழப்படுகின்றனர். வேதங்களுக்கு அபிமானினிகளாக இருக்கின்றனர். பிரம்மரின் அர்த்தநாரி உடலின் இடதுபாகத்தில் நிலைத்திருக்கும் சரஸ்வதி, பிற ரூபங்களைவிட உத்தமளானவர். 32 லட்சணங்களைக் கொண்டு, வேதாபிமானி என்று பெயர்பெற்ற சரஸ்வதி பாரதியரின் மகிமை ஒப்பற்றது. 

இந்தப் புத்தகத்தைக் குறித்து

மகாபாரதம் கிரந்தம் முழுக்கவே பீமசேனதேவரின் புகழையே சொல்கிறது. ராமாயணம் ஹனுமனின் மகிமையை புகழ்கிறது. மத்வவிஜயம் ஸ்ரீமதாசார்யரை பாடுகின்றது. இந்த மூன்று கிரந்தங்களிலும் ஹனும-பீம-மத்வ என்னும் மூன்று அவதாரங்களின் கதையும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. லட்சுமிதேவியின் கதையானது எல்லா ஸ்ருதி-இதிகாச புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. சரஸ்வதி - பாரதிதேவியரின் கதைகூட அப்படியே. இந்த சிறிய புத்தகங்களில் மேற்சொன்ன அனைத்து கிரந்தங்களின் சாரத்தையும் கொண்டுவருவது கடினமான காரியம். அப்படி அவற்றை கொண்டுவரும் முயற்சியையும்கூட நான் செய்யவில்லை. அப்படி செய்வது முடியாத விஷயம். பரசுக்லத்ரயரைப் பற்றி யாருக்கு தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஆசை இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகத்தை இந்தப் புத்தகம் தரும். சொல்லிய விஷயங்களுக்கு ஆதாரபூர்வமாக விளக்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு தேவதையைப் பற்றியும் தனியான புத்தகமே எழுதும் அளவிற்கு விஷயங்கள் உள்ளன. லட்சுமிதேவியைப் பற்றி இதில் மிக சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. படிப்பவர்கள் மேற்சொன்ன விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 

மகாபாரதம், ராமாயணம், பாகவதம், உபநிஷத்களில் இருக்கும் விஷயங்கள் மற்றும் ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், மேலும் படிக்க ஆர்வம் உள்ளவர்கள், மூலகிரந்தங்களையே நாடவேண்டும். இந்தப் புத்தகம் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 

‘ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்’ என்னும் புத்தகத்தைப் போலவே இதிலும் கேள்வி - பதில் வடிவமே உள்ளது. ஒவ்வொரு விஷயமும் அறிஞர்களிடம் கேட்டுத் தெளிந்தபிறகே சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள அனைத்து கட்டுரைகளும், ரங்கவிட்டல கன்னடப் பத்திரிக்கையில் ஏற்கனவே வெளிவந்து, பல்லாயிரம் பேர் படித்திருக்கின்றனர். 

வித்வான் பெம்மத்தி வெங்கடேஷாச்சார்

***

Thursday, March 15, 2018

11/12 பாரதி தேவியின் அவதாரங்கள்

11/12 பாரதி தேவியின் அவதாரங்கள்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: சரஸ்வதி மற்றும் பாரதியரைப் பற்றி தெரிந்துகொண்டோம். இவர்கள் பூமியில் எவ்வளவு முறை அவதரித்திருக்கின்றனர்?

பதில்: பிரம்மனைப்போலவே சரஸ்வதிதேவிக்கும் பூலோகத்தில் அவதாரமில்லை. பாரதிதேவிக்கு அவதாரம் இருக்கிறது. இவர் ஐந்து அவதாரங்கள் செய்திருப்பதற்கு ஆதாரம் உள்ளது. 

கே: அந்த அவதாரங்கள் எவை?

ப: 
1. விப்ரகன்யா
2. நாளாயினி
3. திரௌபதி
4. காளி
5. சந்திரா

கே: இந்த அவதாரங்கள் எப்போது நடைபெற்றன?

ப: வாயுதேவரு ஹனுமந்தனாக அவதரித்தபோது, பாரதிதேவி ‘விப்ரகன்யா’ அல்லது ‘ஷிவகன்யா’ என்ற பெயரில் அவதரித்தார். த்வாபரயுகத்தில் நளதமயந்தியரிடம் ’இந்த்ரசேனையாக’, த்ருபதராஜனின் மகளாக ’திரௌபதி’ என்றும், காசிராஜனின் மகளாக ’காளி’ என்றும், கலியுகத்தில் வாயுதேவர் மத்வராக அவதரித்தபோது ‘சந்திரா’ என்ற பெயரில் அவதரித்தார். 

கே: இந்த ஐந்து அவதாரங்களும் பாரதிதேவியின் சுத்த அவதாரங்களா அல்லது வேறு தேவதைகள் யாரும் அதே உடலில் இருந்தனரா?

ப: காளி என்பது மட்டும் பாரதிதேவியின் சுத்தமான அவதாரம். மற்ற நான்கிலும், பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா - என்ற நான்கு தேவதைகளுடன் சேர்ந்து இருந்தார். 

கே: பாரதிதேவியின் ஐந்து அவதாரங்களிலும் வாயுதேவர் அவரது கணவராக வந்திருந்தாரா?

ப: காளியை பீமசேனதேவர் மட்டும் மனைவியாக ஏற்றுக்கொண்டார். திரௌபதியை மற்ற பாண்டவர்களுடன் சேர்ந்து பீமர் மனைவியாக ஏற்றுக்கொண்டார். 

கே: அப்படியென்றால், இந்த்ரசேனை, விப்ரகன்யா, சந்திரா இந்த மூன்று அவதாரங்களும் பிரம்மசாரிணியாக இருந்தனரா?

ப: முத்கல ரிஷிக்குள் இருந்த வாயுதேவர், இந்திரசேனையில் இருந்த பாரதிதேவியை மணம் புரிந்தார். ஆனால் ஹனுமந்த அவதாரத்தில், பாரதிதேவி விப்ரகன்யையாக அவதரித்தபோது, அவர்கள் மணம் முடிக்கவில்லை. ஹனுமந்தரைப் போலவே விப்ரகன்யையும் பிரம்மசாரிணியாகவே இருந்தார். அதைப்போலவே, கலியுகத்திலும் சந்திரா கூட பிரம்மசாரிணியாகவே இருந்தார். 

கே: ஹிடிம்பை, பாரதிதேவியின் அவதாரம் இல்லையா?

ப: ஹிடிம்பை, ‘ஸ்ரீ’ என்னும் ஸ்வர்கத்தின் அதிதேவதை. ஒரு சாபத்தினால் அசுர பிறவியை அடைந்தார். 

கே: அப்படியென்றால் பீமசேனதேவர் இவரை எப்படி மணம் முடித்தார்?

ப: 
ஸா பாரதீ வரமீமம் ப்ரததாவமுஷ்ட்யை
ஸ்வாவேஷமாத்மதயிதஸ்ய ச ஸங்மேன |
ஷாபத்விமுக்திமதிதீ ப்ரதப: ப்ரஸன்னா
தீனாஹ ஸா நிஜதனும் பவமானஸூனோ: ||

ஸ்ரீ என்னும் ஸ்வர்க்கத்தின் அதிதேவதை, பாரதிதேவியைக் குறித்து தவம் புரிந்தார். அப்போது பாரதிதேவி அவளுக்கு தரிசனம் அளித்து, உன்னில் நான் தோன்றுவேன். பிறகு என் கணவரால் உன் சாபம் தீரும் என்று வரம் அளித்தார். இந்த பாரதிதேவியின் வரத்தினால் பீமசேனதேவர் ஹிடிம்பையில் கலந்திருந்த பாரதிதேவியை மணம் புரிந்தார். 

கே: காளி என்பவரிடமும் இப்படி பாரதிதேவியின் சன்னிதானம் இருந்தது என்று ஏன் சொல்லக்கூடாது? இந்த அவதாரத்தை மட்டும் பாரதியின் சுத்தமான அவதாரம் என்று ஏன் சொல்கிறீர்கள்?

ப: ’ஸா கேவலா பாரதி நான்யதேவ்யஸ்தத்ரா விஷ்டாஸ்தத் க்ருதே காஷிராஜ:’ (தாத்பர்ய நிர்ணயம் 20-13) என்ற வாக்கியத்தின்படி காளியில் வேறு யாருடைய ரூபமும் சேர்ந்திருக்கவில்லை. தன்னுடைய விசேஷ சாதனைக்காக பாரதிதேவி காளியாக அவதரித்தார். 

கே: ஹிடிம்பையிடம் யார் பிறந்தனர்? காளியிடம் யார் பிறந்தனர்?

ப: நிர்ருதி, கடோத்கஜனாக ஹிடிம்பை - பீமசேனதேவரிடம் பிறந்தார். காளியிடம் ‘சர்வ-த்ராதா’ என்னும் பெயரில் ஸமானவாயு பிறந்தார். 

கே: ஸ்ரீமதாசார்யர் பிறந்தபோது பாரதிதேவி சந்திரா என்ற பெயரில் அவதரித்தார் என்று எப்படி சொல்லமுடியும்?

ப: 
சதுர்ஜன்யபவேத்பூமௌ த்வாம் நான்யோ மாருதாத் ப்ரஜேத் |
நியமோSயம் ஹரேர்யஸ்மாத நாதிர்நித்ய ஏவ ச || 
(தாத்பர்ய நிர்ணயம் 18-114)

இந்த வாக்கியத்தில், நான்கு பிறவிகள் மட்டுமே என்று சொல்கிறார். கலியுகத்தில் நான்காவது பிறவி இல்லை என்று சொல்லவில்லை. பல உரையாசிரியர்கள், கலியுகத்தில் பாரதிதேவி இந்த நான்கு பேருடன் அவதரித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். பிருஹதாரண்யக பாஷ்யத்தில் ‘ஷிவகன்யா இந்த்ரஸேனா ச திரௌபதி காளி ச ததா சந்த்ரேத்யாதி ஸ்வர்ணபாமா:’ என்று சொல்லியிருப்பதும் இந்த கேள்விக்கு ஆதாரமாக இருக்கிறது.

கே: பாரதி, இந்த நான்கு தேவதா-ஸ்த்ரியர்களுடன் அவதரிப்பதற்கு என்ன காரணம்?

ப: பார்வதி, ஸ்யாமளா, சசி மற்றும் உஷா இவர்களுக்கு பிரம்மதேவரின் சாபம் இருந்தது. இவர்கள் பூமியில் நான்கு முறை அவதரிப்பதற்கான நிலை உண்டாயிற்று. அப்போது அவர்கள் பாரதிதேவியைக் குறித்து தவம் செய்து வரம் வேண்டினர்.

கே: பிரம்மன் இவர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே சாபம் கொடுத்திருப்பார். நான்கு முறை பிறவிகள் வருவதற்கு என்ன காரணம்?

ப: பிரம்மன் இவர்களுக்கு இரு முறை சாபம் அளித்தார். முதல்முறை பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா ஆகிய நால்வரும் மற்றவர்கள் பார்க்குமாறு தம் கணவர்களுடன் கூடினர். இதைக் கண்ட பிரம்மன், ’உங்களுக்கு மனிதஜென்மம் கிடைக்கட்டும். இன்னொரு ஆணுடன் உங்களுக்கு மணம் நடக்கட்டும்’ என்று கடுமையான சாபத்தைக் கொடுத்தார். 

ஒரு முறை இவர்கள் நால்வரும், ஒரே தேகத்தில் நுழைந்து, பிரம்மனை பரிட்சை செய்வதற்காக, மூன்று முறை அவரிடம் சென்றனர். அவர்களிடம் இருந்த அசுர-ஆவேசமே இதற்குக் காரணம். அப்போது பிரம்மன் ‘மூன்று முறை என்னை மயக்க வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் மனிதப்பிறவி எடுத்து ஒரே தேகத்தில் மூன்று முறை பிறக்கக்கடவீர்’ என்று சாபம் அளித்தார். 

இந்த சாபங்களையும் பார்க்கும்போது மொத்தம் நான்கு முறை இவர்கள் பூமியில் பிறக்கவேண்டிய நிலை வந்தது என்று தெரியவருகிறது. 

கே: நான்கு பிறவிகளில் எந்தப் பிறவியில் இன்னொரு ஆணுடன் இவர்களுக்கு சங்கமம் ஆயிற்று?

ப: இந்தக் கேள்வி, பார்வதி சசி ஆகியோருக்கும்கூட தோன்றியது. அதற்கான விடையை அறிந்துகொள்வதற்காக, அவர்கள் ஓராயிரம் ஆண்டுகள் பாரதிதேவியைக் குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு தரிசனம் அளித்த பாரதிதேவியிடம், எங்களுக்கு மற்ற ஆண்களுடன் சங்கமம் ஆகக்கூடாது. ஆகவே நான்கு பிறவிகளிலும் நாங்கள் நால்வரும் உங்களுடனேயே ஓருடலில் இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றனர். 

கே: மேற்சொன்ன இரண்டாவது சாபத்தின்படி, ஒரே தேகத்தில் இவர்கள் இருக்கவேண்டியது மூன்று பிறவிகளில் மட்டுமே. மற்ற ஆணுடனான சம்பந்தமும் ஒரே ஒரு பிறவியில் மட்டுமே. இப்படியிருக்கும்போது, நான்கு பிறவிகளிலும் ஒரே தேகத்தில் இருப்பதாக ஏன் வரம் பெற்றனர்?

ப: எந்தப் பிறவியில் பிற ஆணுடன் சங்கமம் நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே நான்கு பிறவிகளிலும் பாரதிதேவியுடனேயே இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றனர். 

கே: மத்வ அவதாரத்தின்போது, திரௌபதி, சந்திரா என்னும் பெயரில் அவதரித்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

ப: 
ததைவ கிருஷ்ணாSபி புவி ப்ரஜாதா ப்ரீத்யை ஹரேரந்தரமஸ்ய பாதயத் |
மஹாஸுராத் விஷ்ணுபரார்ஜுனாத்யா: க்ருதே ப்ரஜாதா ஹரிதோஷணாய |
புனஸ்ச தே ஸ்தானமவாப்ய ஸர்வே ஸ்வேயம் பராந்தே து விமுக்திமாப்னுயு: ||

பீமசேனதேவர் மத்வராக அவதரித்தபோது க்ருஷ்ணை, சந்திராவாக அவதரித்தார். (தாத்பர்ய நிர்ணயம் 32-132) இங்கு திரௌபதியே அவதரித்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதால் பார்வதி, சசி ஆகிய நான்கு பேருடன் சேர்ந்தே அவதரித்திருக்கிறார் என்று சொல்லலாம். 

கே: முதல் அவதாரத்தில் விப்ரகன்யையாக பாரதிதேவி என்ன செய்தார்?

ப: பார்வதி முதலான நான்கு பேருடன், பாரதி ஒரு பிராமணரின் மகளாகப் பிறந்தார். சிவனைக் குறித்து இவர்கள் கடுந்தவம் புரிந்தனர். மற்ற நால்வரும் சிவனைக் குறித்து தவம் செய்ய, பாரதிதேவி சிவனில் இருக்கும் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்தார். இப்படி அந்த பிறவி முழுவதையும் தபஸ்வினியாகவே கழித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஹனுமந்ததேவர் பிரம்மசாரியாக இருந்தார். அதற்குத் தக்கவாறு பாரதிதேவியும், தவத்திலேயே மூழ்கியிருந்தார். 

கே: சிவனில் இருந்த ஸ்ரீஹரி பாரதிதேவிக்கு என்ன வரம் அளித்தார்? பார்வதி முதலானவர்களுக்கும் சிவன் என்ன வரம் அளித்தார்?

ப: கணவரான வாயுதேவருடன், ஸ்ரீஹரியை மகிழ்ச்சி அடையச் செய்யவேண்டும் என்ற வரத்தினை ஸ்ரீஹரி அளித்தார். மற்றவர்களுக்கும் அவரவர் கணவருடன் சேர்ந்திருக்குமாறு சிவன் வரம் அளித்தார். 

கே: அப்படியென்றால் பாரதிதேவிக்கு அனைத்து பிறவிகளிலும் வாயுதேவரே கணவராக வந்தார்தானே?

ப: கணவருடன் சேர்ந்து விஷ்ணுவின் பூஜையை செய்யும் பாக்கியம் கிடைக்கட்டும் என்றே பாரதிதேவிக்கு ஸ்ரீஹரி வரம் அளித்தார். தாம்பத்யம் செழிக்கட்டும் என்று வரம் அளிக்கவில்லை. மற்ற நால்வரில், திரௌபதிக்கு மட்டும் தன் கணவருடன் தாம்பத்ய பாக்கியம் கிட்டியது. மூன்று முறை பிரம்மனை இவர்கள் பரிட்சை செய்ததால், மற்ற மூன்று பிறவிகளில் தம் கணவருடன் வாழும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கவில்லை. 

கே: இந்திரசேனை என்றால் யார்? யாரிடம் அவதரித்தார்? இவரது கணவராக யார் இருந்தார்?

ப: த்வாபரயுகத்தில், நளதமயந்தியரிடம் பாரதிதேவி நான்கு தேவதா பெண்களுடன் இந்திரசேனையாக அவதரித்தார். நளனின் மகளானதால், நளநந்தினி அல்லது நாளாயினி என்று அழைக்கப்பட்டார். முத்கலரை மணம் புரிந்தார். 

கே: இந்திரசேனை என்றால் என்ன? முத்கல என்றால் என்ன?

ப: இந்திர என்றால் முக்யபிராண அல்லது நாராயண என்று பொருள். அவரையே தலைவனாக நினைத்துக் கொண்டதால், இவருக்கு இந்திரசேனை என்று பெயர் வந்தது. எப்போதும் ஸ்ரீஹரியின் பூஜையை செய்து, அதனால் மகிழ்ச்சியடைவதால் அந்த முனிவருக்கு முத்கல என்ற பெயர் வந்தது.

கே: முத்கலர் ஒரு சாதாரண முனிவர். பாரதிதேவி வாயுதேவரின் மனைவி. இந்திரசேனையில் இருந்த பாரதிதேவி இந்த முத்கலரை மணம் புரிந்தது எப்படி சாத்தியம்?

ப: இதற்கு ஒரு கதை உள்ளது. 

பிரம்மதேவர் சரஸ்வதியை விரும்பினார் என்று பொதுவாக அறியப்படும் கதையைக் கேட்ட முத்கலர், பிரம்மதேவரை மரியாதைக்குறைவாக நினைத்தார். ஆகவே, பாரதி மற்றும் ஐந்து ரூபங்களைக் கொண்ட ஒருவருடன் சேர்ந்து பேரழிவை சந்திப்பீர் என்று பிரம்மனே இவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் மிகவும் துக்கமடைந்த முத்கலர், பிரம்மனைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இந்த தவத்தால் மனமகிழ்ந்த பிரம்மன், அவருக்கு சாபத்திற்கான பரிகாரத்தை தெரிவித்தார். நீ அந்த ஐந்து பெண்கள் சேர்ந்து இருக்கும் ரூபத்தை சேர்வதில்லை. உன் தேகத்தில் இருக்கும் வாயுதேவர், இந்திரசேனையுடன் சேர்கிறார். உனக்கு அப்போது மயக்க நிலை இருக்கும். அதனால் உனக்கு பாவம் வருவதில்லை. இதன்படியே, முத்கலர் இந்திரசேனையுடன் கிருஹஸ்தாஸ்ரமத்தை அனுசரிக்கவில்லை. முத்கலரில் இருந்த வாயுதேவர், இந்திரசேனையுடன் கிருஹஸ்தாஸ்ரமத்தை அனுசரித்தார். 

கே: இந்திரசேனையின் பிறவிக்குப் பிறகு, திரௌபதியின் பிறவியில் ஐந்து கணவர்கள் வருவதற்கு என்ன காரணம்? இந்திரசேனைக்கு இருந்ததைப் போல ஒருவரே இங்கும் கணவராக ஏன் இல்லை?

ப: பல காலங்களுக்கு வாயுதேவர் இந்திரசேனையில் இருந்து, பின் தனது லோகத்திற்கு திரும்பினார். அப்போது முத்கலரும் தவத்திற்கு கிளம்பினார். இந்திரசேனை கணவரிடமிருந்து பிரிந்தாள். அவளும் கடுந்தவத்தை புரிந்தாள். பார்வதி முதலானவர்களும் ருத்ரரைக் குறித்து தவம் மேற்கொண்டனர். பாரதிதேவி, ருத்ரரில் இருக்கும் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் மேற்கொண்டாள். ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம் அளித்தபோது ‘பதிம் தேஹி’ (ஒரு கணவரைக் கொடுக்கவும்) என்ற வரத்தை பாரதிதேவி கேட்டார். ஐந்து பேரும் ‘பதிம் தேஹி’ என்று கேட்டதால், வரத்தைக் கேட்டும் குரல் ஐந்து முறை கேட்டது. பாரதிதேவிக்கு ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஸ்ரீஹரியும், மற்ற நால்வருக்கு, ருத்ரரும் வரம் அளித்தனர். இதன்படியே, இந்திரசேனைக்கு ஐந்து கணவர்கள் அமைந்தனர். ஆகவே, திரௌபதி அவதாரத்தில் ஐந்து கணவர்கள் அமைந்தனர். 

கே: ஒரு பெண்ணுக்கு ஐந்து பேர் கணவர்கள் என்றால், அது முறைதவறிய உறவு அல்லவா?

ப: இந்தக் கேள்வி பார்வதி முதலானவர்களுக்கும் வந்தது. அதற்காக அவர்கள் சத்தமிட்டு அழுதனர். வரம் அளித்த ருத்ரர் மேல் இந்திரன் கோபப்பட்டான். 

கே: ருத்ரரின் மேல் தேவேந்திரன் கோபப்பட்டது சரியா?

ப: ஆம். சிவனின் சாபத்தால் தேவேந்திரன் பூலோகத்தில் பிறவி எடுத்து, திரௌபதியின் கணவனாக வேண்டியிருந்தது. ஸ்ரீஹரியின் அருளால் அர்ஜுனனாக அவதரித்தான். பிரம்மனிடம் கேட்காமல், ருத்ரர் தானாகவே வரம் அளித்ததால், பிரம்மன் ருத்ரருக்கு சாபம் அளித்தார். நீ பூலோகத்தின் மனிதனாகப் பிறக்கும்போது, மனைவியை அடையமாட்டாய் என்று சாபம் இட்டார்.

கே: திரௌபதிதேவியில் பாரதி, பார்வதி, சசி, ஸ்யாமளா, உஷா என்று ஐந்து பேர் இருக்கின்றனர். மற்ற பெண்கள் தமது கணவருடன் கூடினாலும், பார்வதி மட்டும் ஏன் தன் கணவருடன் கூடவில்லை?

ப: மேலே சொன்னதைப்போல, பிரம்மனின் சாபமே இதற்குக் காரணம். ருத்ரர் அஸ்வத்தாமனாக அவதரித்தார். அஸ்வத்தாமர் திருமணம் செய்யாமல், பார்வதியிடமிருந்து விலகியிருந்து, பிரம்மசாரியாகவே இருந்தார். ஆகையால், திரௌபதிதேவியின் தேகத்தில், பார்வதிதேவி உறங்கும் / செயலற்ற நிலையில் இருந்தார். 

கே: திரௌபதியின் தந்தையான த்ருபதன், அவருக்கு திரௌபதி என்றே பெயர் வைத்தாரா, அல்லது வேறு பெயரும் இருக்கிறதா?

ப: துருபதனின் மகளாகையால் இவருக்கு திரௌபதி என்றே பெயர். ஆனால், தந்தை வைத்த பெயர் ‘கிருஷ்ணா’ என்பதே. இவர் மிகவும் அழகானவராக இருந்தார். பெண்களிலேயே மிகவும் உத்தமமானவராக, மிகவும் அழகானவராக இருந்ததால் இவருக்கு ‘கிருஷ்ணா’ என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருந்தது. இதைப்போலவே பார்வதி, யாக்ஞசேன, பாஞ்சாலி என்னும் பெயர்களும் இவருக்கு இருந்தது. 

கே: திரௌபதி துருபதனின் மகளாகப் பிறக்கவில்லை. நெருப்பிலிருந்து பிறந்தவர் என்று கேள்விப்படுகிறோம். இது சரிதானே?

ப: துருபதன் செய்த யாகத்தின் பிரசாதத்தைப் பெறுவதற்கு அவனின் மனைவி தடைபோட்டார். அங்கிருந்த பிராமணர்கள், அந்த பிரசாதத்தை யக்ஞ நெருப்பிலேயே போட்டார்கள். அப்போது, அக்னி குண்டத்திலிருந்து அக்னியின் அவதாரமான த்ருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி அவதரித்தனர். திரௌபதி, ஒரு வளர்ந்த கன்னியாகவே நெருப்பிலிருந்து வந்தார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். விஷ்ணு துரோகிகளை அழிப்பதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார் என்று அசரீரி கேட்டது. 

கே: திரௌபதியைப் பற்றி கூறவும்.

ப: திரௌபதி, பாரதிதேவியின் அவதாரம். ருஜுகணஸ்தர். சத்வகுணங்களால் நிரம்பியவர். 32 லட்சணங்களையும் கொண்டவர். நோய், நொடி ஆகிய எந்தவித தோஷங்களும் இல்லாதவர். பிறந்ததிலிருந்து இறுதிவரை இளம்பெண்ணாகவே இருந்தவர். இத்தகைய உத்தமமான தேகத்தில், மற்ற நான்கு பெண்களும் வசித்தனர். இது அவர்களின் பாக்கியம். ‘யத்ர ரூபம் தத்ரகுணா:’ என்பதுபோல், உருவத்திற்குத் தக்க குணங்கள் அவர்களில் நிரம்பியிருந்தன. 

கே: திரௌபதியின் சுயம்வரத்தின் விதிகளை த்ருபதன் அறிவித்தபோது, கர்ணனும் அந்தப் போட்டியில் பங்கேற்க வந்தான் என்று திரௌபதி ‘நாஹம் வரயாமி சுதம்’ என்கிறாரே, இது சரியா?

ப: தாக்‌ஷிண்யாதி பாடங்களில் (தென்னிந்தியாவில் இயற்றப்பட்ட கிரந்தங்களில்) இந்த வசனம் வரவில்லை. ஆனால் இது மிகவும் சுவாரசியமான ஒரு சம்பவம். 

கே: சுயம்வரத்தில் அர்ஜுனன் தன் பாணத்தால் அந்த மீனை துளைத்து போட்டியில் வென்றபோது, திரௌபதி அவரின் கழுத்தில் மாலையை அணிவித்தார். இதனால் அர்ஜுனனே தனது கணவன் என்று தீர்மானித்தாள். இப்படியிருக்கும்போது, தம்பியின் மனைவியை அண்ணன்களான பீமன் மற்றும் தர்மராஜர் எப்படி மணம் முடித்தனர்?

ப: சுயம்வரத்தில் அர்ஜுனனின் கழுத்தில் திரௌபதி அணிவித்த மாலையானது, திருமண மாலையல்ல. அது போட்டியில் வெற்றி பெற்றதால் போட்ட வெற்றி மாலை மட்டுமே. அப்போது திருமணம் நடக்கவில்லை என்றே நினைக்கவேண்டும். பின்னர் அனைவரின் சம்மதத்துடன், வேதவியாஸரின் ஒப்புதலைப் பெற்று, ஐந்து பாண்டவர்களும் திரௌபதியை மணம் முடித்தனர். 

கே: தன்னுடைய ஒரே மகளை, ஐந்து பேருக்கு திருமணம் செய்துகொடுக்க துருபதன் எப்படி சம்மதித்தார்? அப்போதைய காலகட்டத்தில் இது விவாதிக்கப்படவில்லையா?

ப: பெரிய குழப்பமே நேர்ந்தது. திருஷ்டத்யும்ன மற்றும் துருபதன் இருவருக்கும் பெருங்குழப்பமே நேர்ந்தது. யுதிஷ்டிரன், குந்தி ஆகியோர் என்ன சொன்னாலும் கேட்பவரில்லை. இறுதியில் வேதவியாஸரே வந்து திருமணம் செய்யுமாறு பணித்தார். 

கே: திரௌபதிக்குள் ஐந்து பேர் இருந்ததால், ஒருவருடன் கூடும்போது மற்றவர்களுடன் முறை தவறிய உறவு என்பதான தோஷம் வரவில்லையா?

ப: 
கன்யைவ ஸாSபவதத: ப்ரதிவாஸரம் ச |
ஜன்மாபவத்யபிமதே: ப்ருதகேவ நாஷாத் ||

ஒவ்வொரு நாளும் திரௌபதி கன்னியாகவே இருந்தார். ஆகவே தன் கணவர்களுடன் கூடும்போது, ஒவ்வொரு முறையும் புதிய பிறவியே வந்திருந்தது. இதை காந்தர்வ விவாக முறை என்று கூறலாம். எந்த கணவருடன் கூடினாரோ, அப்போது அந்த கணவரின் மனைவி மட்டுமே அந்த தேகத்தில் நிலைத்திருந்தார். மற்றவர்கள் மயக்க / செயலற்ற நிலையில் இருந்தனர். ஆகையால் கணவருக்கு பிறர் மனைவியை கூடிய தோஷம் வரவில்லை. பெண்களுக்கு பிற கணவரைக் கூடிய தோஷம் வரவில்லை. 

கே: பாரதிதேவிக்கு ‘நித்ராவஸ்தா’ (மயக்க / செயலற்ற நிலை) இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்றானபிறகு, அவருக்கு பிற கணவருடன் கூடிய தோஷம் வரவில்லையா?

ப: ஒவ்வொரு முறை திரௌபதி தன் கணவர்களுடன் கூடியபோதும், அவரின் தேகத்திலிருந்த பாரதிதேவி மற்றும் தர்மராஜன் முதலானவர்களின் தேகத்திலிருந்த வாயுதேவர்க்கு மட்டுமே சங்கமம் நடந்தது. ஆகையால் பிற கணவருடன் கூடிய தோஷம் பாரதிதேவிக்கு வரவில்லை. 

ஏவம் ஸ வாயுரனு விஷ்ட யுதிஷ்டிராதி பீமாத்மனைவ ரமதே ஸததம் தயைக: |
அன்யாத்ருஷா ஹி ஸுரபுக்திரதோ Sன்யன்யரூபா மானுஷ்யபுக்திரிதி நாத்ர விசார்யமஸ்தி ||

வாயுதேவர், தர்மராஜர் முதலானவர்களிடம் நான்கு ஆவேசரூபத்திலும், பீமசேனராகவும், பாரதிதேவியுடன் எப்போதும் நிலைகொண்டிருந்தார். தேவதைகள் கூடும் விதமே வேறு. ஆகையால் இந்த விஷயத்தில் மேலும் விவாதிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. 

கே: திரௌபதிதேவி, மகாராணி ஆனபோது அவரின் கடமையை எப்படி சரிவர செய்தார்?

ப: மகாராணி ஆனபோது, திரௌபதிதேவிக்கு அனைத்து செயல்களை நிர்வகிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. தினமும் அவர் அரண்மனையில் 90,000 முனிவர்கள், 10,000 யதிகள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொருவருக்கும் 300 பேர் அளவுக்கு குடும்பம் இருந்தது. இந்த மாபெரும் வேலை திரௌபதிதேவியின் மேற்பார்வையிலேயே நடந்து வந்தது. இவருக்கு உதவி செய்வதற்கு லட்சம் பேர் இருந்தனர். இவ்வளவு பேர் இருந்தாலும், தன் கணவர்கள் மற்றும் மாமியாரின் சேவைகளை தானே செய்துவந்தார். 

கே: ஒவ்வொரு பதிவிரதையும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை திரௌபதி சொல்லிக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

ப: சாட்சாத் லட்சுமியின் ஸ்வரூபமான சத்யபாமா, ஒருமுறை திரௌபதியிடம் ‘எல்லா கணவர்களுக்கும் நீ எப்படி அன்பு செலுத்துகிறாய்? இதன் ரகசியம் என்ன?’ என்று கேட்டார். சாதாரண மக்களுக்குப் புரியவைப்பதற்காக சத்யபாமா இப்படி கேட்டார் என்று அறிந்துகொண்ட திரௌபதி, ஒவ்வொரு மனைவியும் தம் கணவருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகவும் விவரமாகத் தெரிவித்தார். இந்தக் கதையானது, மகாபாரதத்தில் ஒரு உப-பர்வத்தில் முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது. 

கே: மய-சபையில் ஒரு வெற்றிடத்தை தண்ணீர் நிரம்பியிருக்கிறது என்று தவறாக எண்ணி, துரியோதனன், ஆடைகளை சிறிதே தூக்கி நடந்தான். இன்னொரு இடத்தில் நிலம் என்று எண்ணி, தண்ணீரில் விழுந்தான். இந்த சமயங்களில், பீமன், திரௌபதி ஆகியோர் பலமாக சிரித்தனர். இங்கு பீமன் மற்றும் திரௌபதி ஏன் சிரிக்கவேண்டும்? துரியோதனனின் மேல் இருந்த பகையே இதற்கு காரணம். அல்லது அவருக்கு அவமானம் செய்யவேண்டும் என்பதே இதன் காரணம். ஆகையால் திரௌபதி செய்தது தவறுதானே?

ப: ஸ்ரீகிருஷ்ணன் செய்த குறிப்பினால் முதலில் சிரித்தது பீமன். கூடவே திரௌபதியும் சிரித்தார். மற்றவர்களும் பலமாக சிரித்தனர். பூமியின் பாரத்தைக் குறைக்க இது ஒரு துவக்கப்புள்ளி என்று இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் இப்படி சிரித்ததில் அவமானப்பட்ட துரியோதனன், இவர்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் இவர்களுடன் சூதாட்டம் ஆடினான். இது துரியோதனின் தவறு மட்டுமே தவிர, பீமன், திரௌபதியின் தவறு அல்ல.

கே: சூதாட்டம், மகாபாரதத்தில் ஒரு முக்கியமான கட்டம். அந்த சமயத்தில், பரசுக்ல-த்ரயர்களில் ஒருவரான பாரதிதேவியை துச்சாதனன் முதலானோர் தொடுவதற்கு எப்படி சாத்தியம் ஆயிற்று? மற்றும் அவரை துகிலுறியும் தகுதி அவர்களுக்கு இருந்ததா?

ப: வாயுதேவரைப் போலவே பாரதிதேவியும் ‘அகணாஷ்மஸமள்’ (யாராலும் வெல்லப்பட முடியாதவர்). இவரை கெட்ட நோக்கத்துடன் பார்க்கும் சக்தியும்கூட துச்சாதனர்களுக்கு இல்லை. தொடுவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே, சூதாட்ட கட்டத்தின்போது, அவமானம் ஏற்பட்டது சசி முதலானவர்களுக்கே தவிர பாரதிதேவிக்கு அல்ல. 

கே: துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்த சமயத்தில், திரௌபதி விழுப்புடன் இருந்தார் என்றும், அந்த சமயத்தில் இருக்கவேண்டிய ஒரு ஆடையை மட்டுமே அணிந்திருந்தார் என்றும் சொல்கின்றனர். இதை எப்படி அறிந்துகொள்ள வேண்டும்?

ப: சம்பிரதாயத்தை பின்பற்றிவரும் பெண்கள் இன்றும்கூட விழுப்பு சமயத்தில், ஒரு ஆடையை மட்டுமே அணிந்திருக்கின்றனர். அப்படியென்றால் மூன்று நாட்களும் ஒரே ஆடையை அணிந்தவராகின்றனர். ஆடையை மாற்றிக்கொள்வதில்லை. இந்த வழக்கத்தை உடையவர்களையே ‘ஏகவஸ்த்ரதாரிணி’ (ஒரு ஆடையை அணிந்தவர்) என்று அழைக்கின்றனர். பிறந்தது முதல் ஒரு ஆடையை அணிந்தவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. 

கே: அணிந்திருந்த ஒரே சேலையை துச்சாதனன் இழுத்தான். அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது என்கிறார்களே. அது எப்படி?

ப: 
புன: புனஸ்சைவ விகர்ஷமாணே
து:ஷாசனேSன்யானி ச தாத்ருஷானி |
பபூவுரந்தம் ந ஜகாம பாப: 
ஷ்ராந்தோ ந்யஷேதத் ஸ்வின்னகாத்ர: ஸபாயாம் 
(தாத்பர்ய நிர்ணய 21-365)

தாத்பர்ய நிர்ணயத்தில் சொல்லியிருப்பதைப் போல, துச்சாதனன் அந்த சேலையை இழுக்கத் துவங்கிய அந்த நேரத்திலேயே, திரௌபதியின் உடலில் மேல் அந்த சேலையைப் போன்றதொரு ஆடை இருந்தது. இப்படி பல சேலைகளை துச்சாதனன் இழுத்தான் என்றுதான் பொருளே தவிர, ஒரே சேலையை இழுத்தான் என்பதல்ல. மேலும் எந்த சந்தர்ப்பத்திலும், திரௌபதி ஆடையில்லாமல் இருக்கவில்லை. 

கே: பீஷ்ம, துரோணாதிகள் சேர்ந்த சபையில், ‘யுதிஷ்டிரர் முதலில் தான் தோற்று, பின் என்னை பணயத்தில் வைத்தாரா? அல்லது முதலில் என்னை தோற்று பிறகு அவர் பணயமாக தோற்றுப் போனாரா?’ என்று திரௌபதி கேட்டார். இது சரியான கேள்வியா? வேறுதும் கேட்கத் தோன்றாமல், இதை கேட்டாளா?

ப: இதற்கு தாத்பர்ய நிர்ணயத்தில் அழகான பதில் உள்ளது. தன் மனைவியை பணயத்தில் வைத்து, தோற்று, அவளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதற்கு கணவனுக்கு என்றைக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் தோற்றால், அவனுடன் திரௌபதியும் சேர்ந்து தோற்றாற்போலவே ஆகும். தவிர, திரௌபதியை தனியாக பணயம் வைக்க யுதிஷ்டிரனுக்கு அதிகாரம் இல்லை. 

கே: மகாபதிவிரதையான திரௌபதி, துச்சாதனனுக்கு சாபம் கொடுத்திருக்கலாம். அதன் மூலமாக தர்மத்தையும் நிலை நாட்டியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை?

ப: திரௌபதியின் பதிவிரதம் உலகப் புகழ் பெற்றது. கணவர்களின் மனதிற்கிணங்க நடப்பவள். ஆகையால் எந்த சந்தர்ப்பத்திலும் திரௌபதி சாபம் கொடுப்பதில்லை. கீசகனால் தொந்தரவு கொடுக்கப்பட்ட சமயத்திலும், அவனுக்கு சாபம் கொடுக்கவில்லை. எந்த துஷ்டராலும், பாரதிதேவியை தொடுவதற்கு சாத்தியமில்லை. பாரதிதேவிக்கு அவமானம் செய்ததற்கான பாவத்தை மட்டும் அவர்கள் பெறுகின்றனர். தங்களின் பாவத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர். இந்த உத்தேசத்தினாலேயே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. 

கே: வனவாச சமயத்தில் யுதிஷ்டிரருக்கும் திரௌபதிக்கும் ஒரு முறை ஒரு விவாதம் நடந்தது. அதில் ஜீவகர்த்ருத்வ விஷயம் பேசப்பட்டது. அப்போது திரௌபதி சொல்லிய ஜீவகர்த்ருத்வத்தை சுருக்கமாகச் சொல்லவும். 

ப: 
ப்ரத்யக்‌ஷமேதத் புருஷஸ்ய கர்ம
தேனானுமேயா ப்ரேரணா கேசவஸ்ய |
ஸ்நகர்ம க்ருத்வா விஹிதம் ஹி விஷ்ணுனா
தத்ப்ரேரணேத்யேவ புதோSனுமன்யதே ||

ஜீவகர்த்ருத்வ (ஜீவனால் ஒரு வேலையை செய்யமுடியும் திறன்) நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின் இருக்கிற விஷ்ணுவின் நோக்கத்தையும் நாம் ஆராய்ந்து அறியவேண்டும். அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே ஜீவனால் எந்த வேலையையும் செய்ய முடிகிறது என்று நிரூபித்தார் திரௌபதி.

கே: பாரதிதேவியின் அவதாரங்களில் முக்கியமானது எது?

ப: பாரதிதேவி பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது திரௌபதி அவதாரம் ஆகும். மொத்த மகாபாரதத்தின் நாயகி இவரே ஆகும். இவரே வித்யாபிமானினி. இத்தகைய வித்யாபிமானினியான பாரதியின் சரித்திரமே மகாபாரதம் ஆயிற்று. திரௌபதிக்கு அவமானம் செய்தால், அது வேத வித்யைகளுக்கு அவமானம் செய்தது போன்றதாகும். இத்தகைய அவமானத்தை பாண்டவர்கள் என்றும் மறக்கவில்லை. இறுதியில் வேத வித்யைக்கு அவமானம் செய்தவர்களை கொன்றொழித்தனர். இன்றும் உலகத்தில் யாராவது வேதவித்யைக்கு அவமானம் செய்தால், அவர் அழிந்துபோவதில் சந்தேகமே இல்லை. ஆகையால் வேதவித்யைக்கு அபிமானினியான திரௌபதியின் மகிமைகளை அறிந்து, வேண்டி, வணங்கி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம். 

கே: பாரதிதேவியின் அவதாரங்கள் எவ்வளவு?

ப: பாரதிதேவி ஐந்து அவதாரங்களை எடுத்திருக்கிறார். த்ரேதாயுகத்தில் ஒரு பிராமணரிடத்தில் அவதரித்து ஷிவகன்யா என்று அழைக்கப்பட்டார். திருமணம் ஆகாமல் தபஸ்வினியாக இருந்தார். இரண்டாம் அவதாரம், நளதமயந்தியரிடம் பிறந்து இந்த்ரசேன என்று அழைக்கப்பட்டார். முத்கல்யரிடம் இருந்த வாயுதேவரை மணந்தார். மூன்றாம் அவதாரமாக த்ருபதனிடம் திரௌபதியாக அவதரித்தார். காசிராஜனின் மகளாக காளி என்ற பெயரில் அவதரித்தார். ஹிடிம்ப என்னும் ஆவேச அவதாரத்தை தரித்தார். கலியுகத்தில் சந்திரா என்னும் பெயரில் பிறந்தார். சிலர் இவரை கல்யாணிதேவி என்று அழைக்கின்றனர். இந்த அனைத்து அவதாரங்களையும் நினைத்து தன்யர் ஆவோமாக. 

கே: திரௌபதியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: த்ருபதன் தனக்கு வாரிசு பிறக்கவேண்டுமென்று ஒரு யாகத்தை செய்ய முடிவு செய்தான். யாஜோபயாஜர் புரோகிதர் ஆனார். மகன், மகள் பிறக்கவேண்டி குடிக்கவேண்டிய ஹவிஸ்ஸை (பிரசாதத்தை) குடிப்பதற்கு அவரின் மனைவி சரியான நேரத்திற்கு வரவில்லை. அதனால் அந்த ஹவிஸ்ஸை ஹோமத்திலேயே போட்டுவிட்டனர். அதனால் ஹோமத்தின் அக்னியிலிருந்து திருஷ்டத்யும்னன் வெளியில் வந்தான். பிறகு அக்னியிலிருந்து திரௌபதி வந்தார். பிறந்தபோதே வாலிப வயது, மிகவும் அழகான உடல், பீதாம்பர ஆபரணங்களினால் ஜொலிக்கும் அழகினைக் கொண்டிருந்தார். அழகில் இவரை மிஞ்ச வேறு யாரும் இருக்கவில்லை. துஷ்ட க்‌ஷத்திரியர்களின் நாசத்திற்காக அக்னிகுண்டத்திலிருந்து வெளிவந்தார்.

திரௌபதியை மணம்புரிய இந்திரன், க்‌ஷத்திரியர்களிடம் வந்தான். ஆனால், சுயம்வரத்தில் நடந்த போட்டியில் வென்ற அர்ச்சுனனுக்கு திரௌபதி மாலை அணிவித்தாள். பிறகு பாண்டவர்களுடன் அவளது திருமணத்தை விமரிசையுடன் செய்வித்தான் த்ருபதன். திரௌபதி ஒருவருக்கு ஐந்து பாண்டவர்களுடன் திருமணம் நடந்தது. உதாரண பதிவிரதையாக அனைவரும் மெச்சும்படியாக இருந்தார் திரௌபதி. இவரது அழகு, வீரம், குணம் இவைகளைப் பார்த்து துரியோதனாதிகள் பொறாமைப்பட்டனர். வஸ்திராபரணம் முதலான பல சமயங்களில் அவரை அவமானப்படுத்த முயன்றனர். ஸ்ரீகிருஷ்ணனின் அருள் இருந்த காரணத்தால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு நொடியும் தர்மசாதனை செய்து, விஷ்ணு சர்வோத்தமத்வத்தை, வாயு ஜீவோத்தமத்வத்தை நிறுவினார். வேதாபிமானினியான திரௌபதியின் மனதை அறிந்த பாண்டவர்கள், துஷ்ட க்‌ஷத்திரியர்களை அழித்தனர். மகாபாரத யுத்தத்தின் மூலம் கௌரவர்களை அழித்து, அதர்மத்தை அழித்தனர். இதற்கெல்லாம் திரௌபதியே காரணம் என்பதால், அவரே மகாபாரதத்தின் கதாநாயகி எனப்படுகிறார். 

இத்தகைய திரௌபதியின் அருள் நமக்கு எப்போதும் இருக்கவேண்டும். நற்கல்வியைப் பெற்று ஸ்ரீஹரியிடம் நாம் போய் சேர அவரது அருளே உதவியாக இருக்கும். 

***

பஞ்சபரிசுத்த தேவதைகளை உரையாசிரியர்கள் ‘பரசுக்ல த்ரயர்கள்’ என்று அழைக்கிறார்கள். மோட்சத்தை அடைவதற்கு இவர்களின் ஸ்வரூபத்தை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், பற்பல கிரந்தங்களின் ஆதாரத்தில், இந்த பஞ்சபரிசுத்த தேவதைகளைப் பற்றி பல  விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர்களின் அருளைப் பெற்று, அதன் மூலம் ஸ்ரீஹரியின் பிரசாதத்தைப் பெற்று, நமக்கு தத்வஞானம் கிடைக்கட்டும் என்று வேண்டுமோமாக. 

***

அஸ்மத் குருஅந்தர்கத பாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீராமகிருஷ்ண வேதவியாஸாத்மக லட்சுமிஹயக்ரீவாத்மக மத்வபதி ஸ்ரீகோபாலகிருஷ்ண: ப்ரியதாம்

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Wednesday, March 14, 2018

10/12 பாரதி தேவி

10/12 பாரதி தேவி

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: பாரதிதேவியின் நைவேத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாமா?

பதில்: கண்டிப்பாக. நான் உண்ணும் ஒவ்வொரு உணவு பொருட்களையும் பிராணதேவருக்கு நைவேத்தியம் செய்வதைப்போல, பாரதிதேவிக்கும் நைவேத்தியம் செய்யவேண்டும். 

கே: ஸ்ரீஹரி இல்லாத பிற தேவதைகளின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டால், சாந்திராயன விரதத்தை செய்யவேண்டும் என்கிறார்களே?

ப: கலிபிரவேசம் ஆகக்கூடிய ருத்ரர் முதலிய தேவதைகளின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்கிறார்கள். ஆனால் எக்காலத்திலும் கலிபிரவேசம் செய்வதற்கு வாய்ப்பேயில்லாத, பரசுக்ல-த்ரயர்களின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்வதால் எந்தவித தோஷமும் வருவதில்லை. 

கே: அப்படியென்றால், தினந்தோறும் பூஜை நேரத்தில், பாரதிதேவிக்கும் நாம் பூஜை செய்யவேண்டுமா?

ப: ஆம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், எப்படி லட்சுமியை விட்டு எப்படி ஸ்ரீஹரியை தனியாக பூஜிப்பதில்லையோ, அப்படியே பிராணதேவரை விட்டு பாரதிதேவியை தனியாக பூஜிக்கக்கூடாது. 

கே: அப்படியென்றால், லட்சுமிதேவியைப் போல, பாரதிதேவியும்கூட நித்யா-வியோகினியா? (கணவனை என்றும் பிரியாதவர்).

ப: லட்சுமியிடம் இருக்கும் மிகச்சிறப்பான குணங்கள், பாரதிதேவியிடம் இருப்பதற்கு சாத்தியமில்லை. ஆகையால், நித்யாவியோக என்று சொல்வதற்கு பதில், பிராணதேவரை விட்டு மற்றவர்களை கணவன் என்று எப்போதும் நினைக்காதவள் என்று சொல்லலாம். 

கே: ஸ்ரீமதாசார்யர் அவதரித்தபோது, பாரதிதேவியும் இவ்வுலகில் அவதரித்தாரா?

ப: கல்யாணிதேவியாக அவதரித்தார் என்று சிலர் சொல்கின்றனர். பாரதிதேவியின் அவதாரங்களைப் பற்றி வரும் பக்கங்களில் பார்ப்போம். 

கே: பாரதிதேவியை எப்படி அறியவேண்டும்?

ப: ‘சமஸ்தகுண சம்பூர்ண பாரதே ச சரஸ்வதே | சமஸ்ததோஷரஹிதா ஷர்வஷக்ராதிவந்திதா || சரஸ்வதி மற்றும் பாரதிதேவியர் இருவரும் அனைத்து நற்குணங்களால் நிரம்பியவர்கள். எந்தவித தோஷங்களும் இல்லாதவர்கள். பிரம்ம-ருத்ரர்களுக்கு சமமானவர்களாக சரஸ்வதி-பாரதியரும் அனைத்து நற்குணங்களால் நிரம்பியவர்கள். தாரதம்யத்தில் பாரதிதேவியை விட சரஸ்வதி சிறிது மேலே இருந்தாலும், ஸ்வரூப-யோக்யதைகளில் இருவரும் சமமாகவே கருதப்படுகின்றனர். 

கே: பாரதிதேவி எதற்கு அபிமானினியாக இருக்கிறார்?

ப: நம்பிக்கை, திருப்தி, அனுபவம், சுகபோகங்கள், குருபக்தி, ஹரிபக்தி ஆகிய சாத்விக குணங்களுக்கு பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார். இந்த குணங்களைப் பெறவேண்டுமென்றால், பாரதிதேவியை சரணடையவேண்டும். 

கே: தத்வந்யாஸத்தில் ’பராய அவ்யக்தாத்மனே பிரம்மணே பாரதீப்யம் நம:’, ‘பராய மஹதாத்மனே ப்ரம்ஹவாயுப்யாம் நம:’ என்றிருக்கிறது. அவ்யக்த தத்வத்திற்கு சரஸ்வதி பாரதியர் அபிமானினியாக இருக்கின்றனர். மஹத் தத்வத்திற்கு பிரம்மவாயுகள் அபிமானியாக இருக்கின்றனர் என்று தத்வந்யாஸத்தில் சொல்லியிருக்கின்றனர். அத்தகைய அவ்யக்ததத்வத்திற்கு சரஸ்வதி பாரதியர் அபிமானினியர் என்று வணங்கி, பிறகு மஹத்தத்வத்திற்கு அபிமானியான பிரம்மவாயுகளை வணங்கவேண்டும் என்பது எப்படி சரியாகும்?

ப: இந்தக் குழப்பம் பலருக்கு உள்ளது. பதில் கீழ்வருமாறு. ‘மஹத்தத்வாதி ஜனனீ ப்ரக்ருத்யாத்யபிமானினி’ என்று சரஸ்வதி பாரதியர் அவ்யக்த தத்வத்திற்கு மட்டுமல்லாது அதற்கும் மூலகாரணமான ப்ரக்ருதிக்கும் அபிமானினியராக இருக்கிறார்கள் என்று பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ப்ரக்ருதிக்கும், அவ்யக்த தத்வத்திற்கும் லட்சுமிதேவியே அபிமானினியாக இருக்கிறார். சரஸ்வதி பாரதியர் தற்காலிக அபிமானினியாக இருக்கின்றனர். இந்த கோணத்திலேயே ‘அவ்யக்தாத்மனே ப்ரம்மணிபாரதீப்யாம் நம:’ என்கிறார்கள். மேலும் பிரம்ம வாயுகளை முதலில் சொல்லாமல், சரஸ்வதி பாரதியை வணங்கினால், அது தாரதம்யத்திற்கு எதிரானது ஆகும். 

கே: வாயுதேவர் மற்றும் பாரதிதேவி - இருவரும் எதில் சமம்? எதில் சமமில்லை?

ப: லட்சுமி நாராயணரிடம் எப்படி காலத்திற்கேற்றவாறு சமானம் இருக்கிறதோ, அதைப்போலவே, முக்யபிராணர்-பாரதியரிடமும் இருக்கிறது என்று தெரியவேண்டும். முக்தியில் இருவருக்கும் ஒரே இடம் இருந்தாலும், குணத்தில் வேறுபாடு இருப்பதால் ப்ராணதேவரிடம் இருக்கும் ஆனந்தம் / குணம், பாரதிதேவியிடம் இருப்பதில்லை. இதைப்போலவே பிரம்ம சரஸ்வதியிடமும் வேறுபாடு அறிந்துகொள்ள வேண்டும். 

கே: லட்சுமிதேவியிடம் இருக்கும் பல ரூபங்களில், தட்சிணா என்னும் ரூபத்திற்கு சிறந்த இடம் இருப்பதைப்போல, சரஸ்வதி பாரதியிடம்கூட சிறந்த ரூபங்கள் உள்ளனவா?

ப: ஆம். எப்போது பிரம்மனும் வாயுதேவரும் அர்த்தநாரி ரூபத்தை எடுக்கிறார்களோ, அப்போது மற்ற அனைத்து ரூபங்களின் ஆதிக்கமும் இவர்களிடத்தில் இருக்கிறது. ‘அர்த்தநாரீனரத்வேன யதா பர்த்ரா ஸஹ ஸ்திதா | ததோத்தமா தக்‌ஷிணாவத் ததன்யத்ராவரா மதா’.

கே: பாரதிதேவியின் தேகத்தின் லட்சணங்கள் என்ன? அவரின் ஆயுள் எவ்வளவு?

ப: சரஸ்வதி மற்றும் பாரதியரின் தேகங்கள் 32 லட்சணங்களினால் ஆனது. 96 அங்குல உயரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ருத்ராதி அனைத்து தேவர்களால் என்றென்றும் முழுதாக அறியமுடியாத மகாமகிமையைக் கொண்டவர். மனிதர்களின் ஆயுளைப் போன்று 311 ட்ரில்லியன் ஆண்டுகள் ஆயுளைக் கொண்டவர். 

கே: பாரதிதேவி எப்படி சர்வக்ஞர் ஆகிறார்?

ப: உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்தவர் பாரதிதேவி. ஆனால் ஸ்ரீஹரியைப் பற்றி முழுவதுமாக இவர் அறிந்திருப்பதில்லை. கூடவே லட்சுமி, பிரம்மா, வாயு இவர்களைப் பற்றியும்கூட இவர் முழுவதுமாக அறிந்திருப்பதில்லை. ஆனால் மற்ற அனைத்து தேவதைகளைவிடவும் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பவர். 

கே: ’உத்க்ராந்திகத்யாகதீனாம்’ என்னும் சூத்திரத்தில் சொல்லியிருப்பதைப்போல, பிரம்மா, வாயு, சரஸ்வதி மற்றும் பாரதி இவர்களின் ஸ்வரூபம் (தேகம்) அணுவைப் போல இருக்கிறது. இவ்வளவு சிறியதாக உள்ள அணு, அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பதற்கு எப்படி சாத்தியம்? மேலும் அனைத்து ஞானங்களையும் பெறுவதற்கு எப்படி சாத்தியம்?

ப: நறுமணம் மிகுந்த கஸ்தூரியை வீட்டில் வைத்தால், வீடு முழுவதும் எப்படி அந்த நறுமணம் வீசுமோ, அப்படியே தேவதைகளும் அணு ரூபமே ஆனாலும் தங்களின் தாரதம்ய தகுதிக்குத் தக்கவாறு அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பர். இதைப்போலவே, பாரதிதேவியும் அனைத்து பெண்- ஜீவர்களைவிட அதிக குணம் / ஞானங்களைப் பெறுபவளாகிறார்.

கே: ஸ்வரூபத்தில் பரிமாணாதிக்யவை (பரிமாணாதிக்யம் = வளர்வது அல்லது சுருங்குவது) ஒப்பினால் என்ன பிரச்னை?

ப: ஆம். ஸ்ரீஹரியின் மிகவும் அற்புதமான சக்தியினால், ஸ்வரூபத்தில் பரிமாணத்தை ஒப்பலாம். இதையே ப்ருஹத்பாஷ்யத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார் - ’அல்பதேஜஸ்ததைவால்பம் ஜீவரூபம் ஹி ஸம்ஸ்ருதௌ | ததேவ ஸுமஹத்தேஜ: கரோதி பகவான் மஹத்’.

கே: விகாரத்தை ஒப்பினால் அநித்வத்வ (தாற்காலிக நிலைமை) என்று ஆகிறதா?

ப: விரிவடைவது - சுருங்குவது இவற்றை விகாரம் என்று சொல்லமுடியாது. இந்த விரிவடைதல் - சுருங்குதல் இவை ஸ்ரீஹரியின் அற்புத சக்தியினால் நடைபெறுகிறது. அணிமா முதலான யோக சித்திகளை, ஜீவர்கள் பெறுகிறார்கள். மேலும் முக்தியில் அனைவரும், மிகச் சிறியதான தன் ஸ்வரூபத்தை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால், அநித்வத்வ என்னும் சந்தேகத்திற்கு இடமில்லை. 

கே: நம் வலது கண்ணில் வாயுதேவர் மிகவும் அழகான கோவத்ஸ ரூபத்தில் இருக்கிறார். அங்கு பாரதிதேவியை எப்படி நினைக்கவேண்டும்?

ப: தன் கணவரின் மிகவும் அழகான கன்றுக்குட்டியின் ரூபத்தைக் கண்டு, பாரதிதேவிக்கு மிகவும் அதிகமான பாசம், பக்தி உண்டாகிறது. தான் கண்ணின் மேல் பாகத்தில் அமர்ந்து, அந்த கன்றின் அழகினை முழுமையாக ரசிக்கிறாள். அது மட்டுமல்லாமல், அத்ரி என்னும் பெயரைக் கொண்டு, ஒரு மனதுடன் அந்தக் கன்றினையே தியானம் செய்கிறாள். இந்த கணவன் - மனைவியரின் ஒற்றுமை வேறெங்கும் காணமுடியாதது. 

கே: நாம் மூச்சு விடுவதற்கு காரணம் பிராணதேவர். இவருடன் சேர்த்து பாரதிதேவியையும் சிந்திக்க வேண்டுமா?

ப: ’நாஸத்யதஸ்ரரு ஸ்வாஸமானி பாரதி’ (ஹரி-8-8) என்று சொல்லியிருப்பதைப் போல, அஸ்வினி தேவதைகளுக்குள் வாயுதேவர் மற்றும் பாரதிதேவி நிலைத்திருந்து நாம் சுவாசம் செய்யும் செயலை நடத்துகின்றனர். 

கே: அப்படியென்றால் பாரதிதேவியும், பிராணதேவருடன் சேர்ந்து ஹம்ஸமந்திரத்தை ஜெபிக்கிறாரா?

ப: ‘சுததியிம்தெடகொடி ஹம்ஸோபாஸனெய மாள்ப’ என்பதுபோல் பாரதிதேவியின் கூட இருந்து ஹம்ஸமந்திரத்தை பிராணதேவர் ஜெபிக்கிறார். 

கே: நம் தேகத்தில் பாரதிதேவியை எங்கு, எப்படி பூஜிக்கவேண்டும்?

ப: ‘த்விதளபத்மவு ஷோபிபுது கண்டதலி’ என்று சொல்வதைப்போல நம் கழுத்தில் இரண்டு இதழ்கள் உள்ள தாமரை உள்ளது. வாயுதேவர் அந்த தாமரையின் வலது இதழில் நிலைத்திருக்கிறார். இடது இதழில் பாரதிதேவி இருக்கிறார். இருவரும் தைஜஸ ரூபியான ஸ்ரீஹரியை நிரந்தரமாக பூஜித்து வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களான பிராண-பாரதியரை வணங்குவதைவிட சிறந்த காரியம் வேறு என்ன இருக்கப்போகிறது?

கே: பாரதியை வாக்-அபிமானினி என்கிறார்கள். ஆகையால் வாக்-இந்திரியத்திலும் (நாக்கு) பாரதி இருக்கிறாரா?

ப: ஆம். வாக்-இந்திரியத்தில் ஹயக்ரீவரூபியான ஸ்ரீஹரி பெண் ரூபத்தில் இருக்கிறார். இவரை பூஜித்தவாறு, பாரதிதேவி அங்கிருந்துகொண்டு, வாக்-அபிமானினியாக இருக்கிறார்.

கே: வலது கண்ணில், கழுத்தில், நாக்கினில் இப்படி மூன்று இடங்களில் நிலைத்து, பாரதிதேவி நம்மை ரட்சிக்கிறார் என்று கூறினீர். உடலின் வேறு பகுதிகளிலும் பாரதிதேவி இருக்கிறாரா?

ப: நம் உடலின் வலது பாகத்தில் இருக்கும் அனைத்து நாடிகளிலும்கூட பாரதிதேவியின் சன்னிதானம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாடிகளில் ஆறாகவும் பாய்ந்து நம்மை சுத்தப்படுத்துகிறார். பெண்-உடலுக்கு பாரதிதேவி முக்கிய அபிமானினியாக இருக்கிறார். இதனை பெண்கள் விசேஷமாக நினைத்துப் பூஜிக்கவேண்டும். 

சிரி சரஸ்வதி பாரதி சௌபர்ணி வாருணி பார்வதிமுகரு
இருதிஹரு ஸ்த்ரீயரொளு அபிமானி தாவெனிஸி (ஹரி-11-29)

கே: நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் பாரதிதேவியின் அபிமான்யத்தைப் பெற்றது எவை?

ப: ‘அன்னமானி சஷாங்கதொளு காருண்யசாகர கேசவனு பரமான்னதொளு பாரதியு’ (ஹரி-31-14) என்று சொல்வதைப்போல பரமான்னத்தில் (பாயசம்) பாரதிதேவி இருக்கிறார். ஆகவே அவர் சன்னிதானம் இருக்கும் பாயசத்தை, மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டும் என்றும்; இதர பொருட்களை சிறிதளவு மிச்சம் வைத்தே சாப்பிடவேண்டும் என்பதும் வழிவழியாக நம்மிடம் இருந்துவரும் ஒரு நம்பிக்கை. லட்சுமிசோபான’வில் முக்யபிராணரின் வீட்டில் பாரதிதேவி, நாராயணரூபியான ஸ்ரீஹரிக்கு, பாயசம் ரசான்னத்தை பரிமாறினார் என்று வருகிறது.

கே: நம் ஆயுளில், பாரதிதேவி எப்போது அபிமானினியாகிறார்?

ப: நம் ஆயுளில், 30 வயதுவரை பிரம்மதேவர், 57 வயதுவரை வாயுதேவர், 82 வயதுவரை சரஸ்வதிதேவி, 100 வயதுவரை பாரதிதேவி அபிமானினியாக இருக்கின்றனர். இப்படி அனைவரின் ஆயுளுக்குக் காரணமாகி, வாழ்க்கை என்னும் யக்ஞத்தை சமர்ப்பிப்பதற்கு பாரதிதேவி முக்கிய காரணம் ஆகிறாள்.

கே: பாரதிதேவியிடம், ஸ்ரீஹரியின் எந்த ரூபத்தை நினைக்க வேண்டும்?

ப: ‘பாரதி வாக்தேவி வாயு ஸரோருஹாஸனரல்லி னெலெஸிஹரெல்ல காலதலி’ (ஹரி-8-26) என்று சொன்னதைப்போல, அனிருத்த ரூபியான ஸ்ரீஹரி சக்திநாமகனாக பாரதிதேவியில் எப்போதும் நிலைத்திருக்கிறார். இதையே நாமும் நினைக்க வேண்டும்.

கே: பாரதிதேவி எப்படி பிறந்தார்?

ப: ஸ்ரீஹரியின் பிரத்யும்ன ரூபம் மற்றும் லட்சுமியின் க்ருதி ரூபத்திற்குப் பிறந்தவர் பாரதிதேவி. பிரத்யும்ன மற்றும் க்ருதிக்கு இரு பெண்குழந்தைகள் பிறந்தனர். முதலாமவர் சரஸ்வதி, அடுத்ததே பாரதி. 

தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் இதையே ‘சூத்ரம் ஸ வாயு: புருஷோ விரிஞ்சி: ப்ரத்யும்னதஸ்சாத் க்ருதௌ ஸ்த்ரீயௌ த்வே’ என்று விளக்கியிருக்கிறார். 

கே: பாரதிதேவியின் சாதனை எவ்வளவு கல்பங்கள்?

ப: பிராணதேவரைப் போலவே 200 கல்ப சாதனை. ஆனால், அவரை விட யோக்யதையில் சிறிது குறைவானவர்.

கே: ஸ்ரீஹரியை பாரதிதேவி எப்போதும் பார்த்தவாறு இருக்கிறாரா?

ப: சரஸ்வதி மற்றும் பாரதிதேவி இருவரும், ஸ்ரீஹரியை தங்களின் இதயத்தில் சந்திரனைப் போல பிம்பரூபியாக எப்போதும் நினைத்தவாறு பூஜித்துக் கொண்டிருக்கின்றனர். 

கே: ஜீவன-ஸ்வரூபத்தில் ப்ராணதேவருக்கு பிரவேசம் இருக்கிறது என்று சொல்வதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதேபோல, பல விவரங்களும் உள்ளன. ஆனால் பாரதிதேவிக்கு பிரவேசம் இருக்கிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

ப: ஸ்வரூப-சரீரத்தில் பாரதிதேவிக்கு பிரவேசம் இல்லை என்று சொல்வதற்கு எங்கும் ஆதாரம் இல்லை. ஆனால், ‘பாரதி மஜ்ஜனனீ’ என்று ஜகன்னாததாசர் இயற்றிய பாடலில், மூன்று குணங்களால் ஆன லிங்க-தேகத்தில் அணுவின் அளவில் இருக்கிறார் என்று சொல்கிறார். இதைத்தவிர, ஹரிகதாம்ருதசாரத்தில் பல இடங்களில், பாரதிதேவிக்கு லிங்கதேகத்தில் பிரவேசம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். 

கே: எவ்வளவு குணங்களால், பாரதிதேவி வாயுதேவரைவிட குறைவானவர்?

ப: ஞான, ஆனந்தம் முதலான குணங்களில் 100 குணங்களால் குறைவானவர்.

கே: ஹரிகதாம்ருதசாரத்தில்,  விஜாதீய (நடப்பில் இல்லாத / அசாதாரண) 100 குணங்களால் வாயுதேவரைவிட பாரதிதேவி குறைந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனா, ஞான, ஆனந்த முதலான குணங்களால் குறைவானவர் என்று நீங்கள் சொல்கிறீர்களே?

ப: பெல்லாரி ஆச்சாரியர் முதலான பல உரையாசிரியர்களும், ஞானம் முதலான குணங்களால் குறைவானவள் என்று சொல்கின்றனர். ‘உமா யாவதனந்தாம்ஷான்’ என்னும் அனுவியாக்யானத்தின் ஸ்லோகத்தை பார்க்கும்போதும் அப்படியே தெரியவருகிறது. ஆனால் இங்கிருக்கும் ‘அனந்த’ என்னும் சொல்லிற்கு 100 என்றே பொருள் கொள்ளவேண்டும். 

கே: பற்பல அம்சத்தினால் குறைந்தவர் என்று நினைத்தால் என்ன பிரச்னை?

ப: பிருஹதாரண்யக பாஷ்யத்தில் மற்றும் அனுவியாக்யானத்தில் ஸ்ரீமதாசார்யர் ‘சந்த்ரேத்யாதி ஸ்வரூபாஸ்தேப்ய: ஷதகுணாவரா:’ என்று மிகத் தெளிவாக, நூறு குணங்களால் குறைவானவள் என்று சொல்லியிருக்கிறார். பற்பல குணங்களால் குறைந்தவள் என்றால், பாரதிதேவிக்கும் மற்ற தேவதைகளுக்கும் தாரதம்யம் சரியாக வருவதில்லை. 

கே: ஞானத்தில் பற்பல அம்சத்தினால் குறைந்தவள் என்றும் ஆனந்தத்தில் 100 அம்சத்தின் குறைந்தவள் என்று கூறினால் என்ன பிரச்னை?

ப: பாரதியின் ஞானத்தைவிட வாயுதேவரின் ஞானம் பற்பல அம்சத்தினால் அதிகம் என்று சொன்னால், ஆனந்தமும் அப்படியே சொல்லவேண்டியதாகிறது. ஏனென்றால், ஆனந்தத்திற்கு ஞானமே காரணமாகிறது. ஆனந்தம் 100 மடங்கு அதிகம் என்பதற்கு ஆதாரம் உள்ளது. அதற்குக் காரணமான ஞானமும் 100 மடங்கு அதிகம் என்பதே சரியாக இருக்கும். 

கே: ’ஷதாவரள்’ என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 

ப: சாந்தோக்ய உபநிஷத்தின் பாஷ்யத்தில் ’ஷிவாதாஷா தத்தைவாஸ்யா: முக்யவாயு: ஷதோத்தர:’ என்றும் ஐதரேய பாஷ்யத்தில் 

‘பிரம்மவாயு ச தத்பார்யே வீந்த்ரஷேஷௌ ச தத் ஸ்த்ரியௌ | 
ஷிவஸ்தத்தயிதா ஷக்ரகாமௌ தத்தயிதாதய: ||
ஸர்வே ஸுரா: க்ரமேண்யைவ விஷ்ணோர்ஞாதா அபாகைகா: |
ஞானானந்தபலாத்யேஷு விஷ்ணுபக்தௌ ச ஸர்வஷ: |
ஹீனா: ஷதகுணேன்னைவ க்ரமேணானேன தே மதா: ||’

இத்தகைய ஆதார வாக்கியங்களை கவனமாகப் பார்த்தால், அனைத்து குணங்களை விடவும் 100 மடங்கு குறைவானவர் என்று அறியவேண்டும். 

கே: அனைத்து ஹரிபக்தர்களும் பாரதிதேவியை என்னவென்று சொல்லி பூஜிக்கவேண்டும்?

ப: 
ஆசார்ய: பவனோஸ்மாகம் ஆசார்யாணீ ச பாரதீ |
தேவோ நாராயண: ஸ்ரேஷ: தேவி மங்களதேவதா ||

நம் அனைவருக்கும் ஆசாரியர் என்றால் அவர் ஸ்ரீமதாசார்யரே. ’ஆசார்யாணீ’ என்றால் அது பாரதிதேவி. சர்வோத்தமனான தேவன் என்றால் அவர் ச்ரேஷ. மங்களதேவதா என்றால் அது மகாலட்சுமி ஆவார். வித்யாரம்ப (புதிய கல்வியைத் துவக்கும்போது) பாரதிதேவியை ‘ஆசார்யாணீ’ என்று வணங்கவேண்டும் என்கிறார் ராஜர்.

கே: பாரதிதேவியை வேதங்களுக்கு அபிமானினி என்கிறார்கள். இதன் பொருள் என்ன?

ப: அபௌருஷேயமான (ஆதி காலத்திலிருந்து இருக்கும்) வேதங்கள் ஜடம் ஆகும். இத்தகைய ஜடமான வேதத்திற்கு பல தேவதைகள் அபிமானியாக இருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வர்ணாபிமானி தேவதைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் மேல், முக்கிய அபிமானி தேவதையாக இருப்பவரே பாரதிதேவி. இவரே அனைத்து தேவதைகளிலும் நின்று, ஸ்ரீஹரியை சர்வோத்தமன் என்று கொண்டாடுகிறார். இவரை மறந்து வேத-அத்யயனம் செய்தால், அந்த வேதங்களிலிருந்து தத்வஞானம் கிடைப்பது சாத்தியமே இல்லை. 

கே: அனைத்து வேத மந்திரங்களும் ஸ்ரீஹரியைத் தவிர, வேறு விஷயங்களைப் பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளன. ஜகத்-மித்ய (உலகம் பொய்யானது) என்றுகூட வேதம் சொல்கிறது என்று அத்வைதிகள் சொல்கின்றனர். இப்படியிருக்கும்போது, அனைத்து வேத மந்திரங்களினால் பாரதிதேவி, ஸ்ரீஹரியையே சர்வோத்தமன் என்று எப்படி கொண்டாடுவது சாத்தியம் ஆகிறது?

ப: அனைத்து வேதங்களும், வேத மந்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்து, சொல், வாக்கியம் ஆகிய அனைத்துமே ஸ்ரீஹரியையே புகழ்ந்து பாடியுள்ளன. இதனை அறியாத அஞ்ஞானிகள், வேதம் வேறு பல விஷயங்களையும் புகழ்கிறது என்கிறார்கள். அத்வைதிகள் நினைப்பதும் அப்படியே. இதெல்லாம் பாரதிதேவிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அவமானம் ஆகும். இப்படி தவறாக நினைத்து, பாரதிதேயின் அருள் நமக்கு கிடைக்காமல் போகக்கூடாதெனில், அனைத்து வேதங்களும் விஷ்ணுவையே புகழ்கின்றன என்று சரியாக நினைக்கவேண்டும். 

கே: வேதங்களில் இருக்கும் எந்த மந்திரங்கள் பாரதிதேவியை புகழ்கின்றன?

ப: 
‘கௌரீர்மாய ஸலிலானி தக்‌ஷத்யேகபதி த்விபதி ஸாசதுஷ்பதி | அஷ்டாபதி நவபதி பபூவுஷீ சஹஸ்ரக்‌ஷரா பரமேவ்யோமன் ||’
‘யஸ்தே ஸ்தன: ஷதயோ யோ மயோபூர்யேன விஷ்வா புஷ்யஸி தமிஹ வார்யாணி | யோ ரத்னதா வஸுவித்ய: சுதத்ர: சரஸ்வதி தமிஹ தாதவே க: ||’

என்னும் இரு மந்திரங்கள் சரஸ்வதி மற்றும் பாரதி ஆகியோரை புகழ்கின்றன என்று தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்கிறார். முதலில் இவை ஸ்ரீஹரியையும், பின்னர் சரஸ்வதி, பாரதியையும் புகழ்கின்றன என்று சொல்கிறார். ஆகையால், யாருக்கு பாரதிதேவியும் அருள் வேண்டுமோ, அவர் இந்த இரண்டு மந்திரங்களைச் சொல்லி அவரை வணங்கவேண்டும்.  

கே: பாரதிதேவியைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா?

ப: கருடபுராணத்தில், பாரதிதேவியின் பல ரூபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் ‘புத்தி’ என்பதும் ஒரு ரூபம் ஆகும். 

‘ஸுபுத்தி ஜனகத்வாத்ஸா ஸஜ்ஜனானாம் ககேச்வர |
அதோ ஸா புத்தினாம்னேதி பாரதீ ஸம்ப்ரகீர்திதா’

என்று இவரை வர்ணிக்கிறார். மற்றும் அனைத்து வேதங்களுக்கு அபிமானினியாக இருப்பதால், இவரை ‘வேதாத்மிகா’ என்றும் கருடபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஸர்வவேதாபிமானித்வாத் ஸர்வவேதாத்மிகா ஸ்ம்ருதா ||’.

கே: பாரதிக்கு புத்தி என்னும் பெயரைப் போல வேறு என்ன பெயர் உள்ளது?

ப: இவரின் இன்னொரு பெயர் - அனுபூதி. ஸ்ரீஹரியின் தத்வஞானம் நம் அனுபவத்திற்கு வருமாறு செய்கிறார் ஆகையால் இவருக்கு அனுபூதி என்னும் பெயர் வந்தது என்று சொல்கிறார்கள். ‘யதானுபூதம் ச ஹரிம் ஸம்யக் தர்சயதி யத: | அதோSனுபூதிஸஞ்ஞா ஸா பாரதி பரிகீர்திதா ||’

கே: பாரதி என்னும் சொல்லின் பொருள் என்ன?

ப: பா என்றால் சுகம் என்று பொருள். எப்போதும் சுகரூபியான இவருக்கு பாரதி என்று பெயர். அல்லது பா என்றால் ஞானம் என்று பொருள். ஞானரூபியான வாயுதேவரின் மனைவியாக இருப்பதால் இவரை பாரதி என்று அழைக்கின்றனர். ‘ஞானரூபஸ்ய வாயோஸ்து பார்யா ஸா பரிகீர்திதா | ஸதா ஸுகஸ்வரூபத்வாத் பாரதீதி ஸுகாத்மிகா ||’

கே: ஹரிவாயுகளிடத்தில் பாரதிதேவி எப்படி பக்தி செய்கிறார்?

ப: மகாகுரு என்று அழைக்கப்படும் வாயுதேவரிடம், ஒரு கணமும் விடாமல் பாரதிதேவி பக்தி செய்கிறார். ஆகையால் இவருக்கு ‘குருபக்தி’ என்னும் பெயரை வேதவியாஸதேவர் கொடுத்தார். இதைவிட அதிக பக்தியை ஸ்ரீஹரியிடம் செய்வதால் ‘ஹரிப்ரீதி’ என்னும் பெயரையும் வேதவியாஸதேவர் கொடுத்தார். 

‘குருஸ்து வாயுரேபோக்த: தஸ்மின் பக்தியுதா ஸதா |
அதஸ்து பாரதீ நித்யம் குருபக்திரிதி ஸ்ம்ருதா |
மஹாகுரோஸ்து வாயோஷ்சபார்யா வை ஸம்ப்ரகீர்திதா |
ஹரௌ ஸ்னேஹயுதத்வாச்ச ஹரிப்ரீதிரிதி ஸ்ம்ருதா |

கே: வேதங்களுக்கு மட்டும் பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார் அல்லவா?

ப: வேதங்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து மந்திரங்களுக்கும்கூட இவரே அபிமானினியாக இருக்கிறார். வேதங்களுக்கு அபிமானினியானதால் ‘வேதாத்மிகா’ என்னும் பெயரையும், அனைத்து மந்திரங்களுக்கும் அபிமானினியானதால் ‘சகலமந்திராத்மிகா’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். ‘ஸர்வமந்த்ராபிமானித்வாத் ஸர்வமந்த்ராத்மிகா ஸ்ம்ருதா’. 

கே: பாரதிதேவியின் அருள் எத்தகையது?

ப: ஒவ்வொரு ஆராய்ச்சியாளரின் தாய் பாரதிதேவி. இவரின் அருளால் பிறவி ஊமையும் பேச்சைப் பெறுகிறான். முட்டாள்கூட அறிவாளியாகிறான். இதைவிட பெரிய அருள் என்ன இருக்கப்போகிறது? இதற்கு எதிர்ப்பதமாக, பாரதிதேவியின் அருள் கிடைக்கவில்லையென்றால், அதோகதிக்கு செல்லவேண்டியதே ஆகும். அனைத்து வேதங்களுக்கும் அபிமானினியான பாரதிதேவியின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும். 

கே: பாரதிதேவியின் மகிமையை சுருக்கமாகச் சொல்லவும். 

ப: ’பாரதீம் சுமதீம் கிருஷ்ணதீரதிம் ஸ்மரதாம் கதீம் இரதம்’ என்று சரஸபாரதிவிலாஸத்தில் ஸ்ரீவாதிராஜர் பாரதிதேவியை துதித்துள்ளார். உலக விஷயங்களில் விரக்தியையும், கிருஷ்ணபக்தியில் நற்புத்தியையும் கொடுத்து நம்மை காப்பாற்றட்டும் என்று வேண்டுகிறார். நம் அனிருத்த-சரீரம் மற்றும் லிங்க-சரீரத்திற்குள் நின்று நம்மை சாதனைகளை (நற்செயல்களை) செய்ய வைக்கிறார். முக்யபிராணருடன் சேர்ந்து ஹம்ஸமந்திரத்தை ஜபிக்கிறார். இவரைப் பற்றி மேலும் படிப்பதால், நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் பிறக்கிறது. 

கே: பாரதிதேவியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும். 

ப: படைப்பின் துவக்கத்தில் க்ருதி மற்றும் ப்ரத்யும்னரிடம் இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் சரஸ்வதி. இளையவர் பாரதி. படைப்பிற்குக் காரணமான பிரம்மனை சரஸ்வதி மணம் முடித்தார். அனைத்து தேவர்களுக்கும் குரு என்று அழைக்கப்பட்ட, அனைவரின் ஸ்வரூபோத்தாரகன் ஆன வாயுதேவரை பாரதி மணம்முடித்தார். 

முக்யபிராணதேவரின் மனைவியான பாரதிதேவியிடம், மகனாக ருத்ரர் பிறந்தார். பிறகு மற்ற தேவதைகளும் அவருக்கு மகனாகப் பிறந்தனர். ஆகையால் இவர் ‘தேவமாதா’ என்று அழைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல், அனைத்து தேவதைகளுக்கும் குரு என்றும் அழைக்கப்பட்டார். அனைத்து தேவதைகளும், பாரதிதேவியிடம் பாடம் படித்து, பிறகு முக்யபிராணரிடம் பாடம் படித்து, ஸ்ரீஹரியை கொண்டாடினர். இந்த முறையில் ஸ்ரீஹரியை குரு என்று பூஜை செய்தால், மோட்சம் அடைவதற்கு சாத்தியமாகின்றது. 

ரிக்வேத, யஜுர்வேத, ஸாமவேத, அதர்வவேத வேதங்களுக்கு பாரதிதேவி அபிமானினியாக இருக்கிறார். வேத-ஸ்வரூபளான இவர் ஒரு கணமும் விடாமல் ஸ்ரீஹரியை, வேதங்களினால் துதித்துக்கொண்டே இருக்கிறார். மற்றும் மகாலட்சுமியையும், நான்முக பிரம்மனையும், தன் கணவரான வாயுதேவரையும் வேதங்களினால் துதித்து, தானும் வேதங்களினால் போற்றப்படுபவர் ஆகிறார். 

அதுமட்டுமல்லாமல், அனைத்து புராண, இதிகாச, மூலராமாயண, மகாபாரத, பஞ்சராத்ர ஆகிய சாஸ்திரங்களுக்கும்கூட பாரதிதேவியே அபிமானினி ஆகியிருக்கிறார். இவரின் அருள் இருந்தால் மட்டுமே வாக்-சித்தி (சொல்வதெல்லாம் பலிப்பது) ஆவதற்கும், அந்த சாஸ்திரங்களின் அறிவைப் பெறுவதற்கும் சாத்தியம் ஆகும். 

இத்தகைய பாரதிதேவியை வணங்கி அவரின் அருளைப் பெறுவோமாக. 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசாரியார் பாரதிதேவியை எப்படி வர்ணித்திருக்கிறார்?

ப: உத்யத்திவாகர சமூஹநிபாம் ஸ்வபர்து
ரங்க ஸ்திதாமபயஸ்த்வர பாஹுமுக்மாம் |
முத்ராம் ச தத்வ த்ருஷயே வர புஸ்தகம் ச
தோர்யுக்மகேன தததீம் ஸ்மரதாSத்ம வித்யாம் ||

உதயசூரியனைப் போன்ற ஒளியைக் கொண்டவர், தன் கணவரின் தொடையில் அமர்ந்திருப்பவர், கீழ்க்  கைகளில் அபய, வர முத்திரைகளை தரித்திருப்பவர், மேல் கைகளில் ஞான முத்திரை மற்றும் கிரந்தங்களைப் பிடித்துக்கொண்டிருப்பவர், கல்வியின் அபிமானினியாக இருக்கும் சரஸ்வதி பாரதியரை தியானம் செய்வோமாக. 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

Tuesday, March 13, 2018

9/12 சரஸ்வதி தேவி

9/12 சரஸ்வதி தேவி

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: தன் தந்தையையே மணந்துகொண்டவர் சரஸ்வதி. இது எப்படி சரியாகும்?

பதில்: சரஸ்வதி என்றதுமே பலருக்கு எழும் கேள்வி இதுவே. மேலும் இந்தக் கேள்வியைத் தவிர, சரஸ்வதியின் மகிமைகள் பற்றியும் யாருக்கும் தெரிவதில்லை. அவர் தன் தந்தையை மணம் புரியவில்லை. அவர் நான்முகப் பிரம்மனின் அனாதி-பத்னியாக (எல்லா காலங்களில் இவரே அவரின் மனைவி) இருக்கிறார் என்று பிரம்மனின் கதையைப் பார்க்கும்போது கவனித்தோம். அதையே மறுபடி இங்கே பார்க்கவேண்டுமென்றால், அரைத்த மாவையே மறுபடி அரைத்தது போலாகும். 

கே: தன்னிடமிருந்தே என்னைப் பிறப்பித்து, என்னையே மணம் செய்துகொண்டிருக்கிறாரே என்று சரஸ்வதி நான்முகப் பிரம்மனைக் குறித்து ஆச்சரியப்படுகிறாரே? இந்த விஷயம் ‘கதம் நு மா ஆத்மன ஏவ ஜனயித்வா ஸம்பவதி, ஹந்த திரோSஸானி’ என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இது மற்றவர்களுக்கு வந்த சந்தேகம் இல்லை. சரஸ்வதிதேவிக்கே வந்த சந்தேகம் இது. இதற்கு என்ன பதில்?

ப: சரஸ்வதியானவர் பரசுக்லத்ரயரில் ஒருவராக இருப்பதால், அஞ்ஞானம், விபரீதஞானம், பயம் ஆகிய எந்த தோஷமும் இவருக்கு இல்லை. ஆனால் ஒரு முறை நான்முகப் பிரம்மனிடத்தில் இந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஏனென்றால் இவருக்கு இரண்டு நோக்கங்கள். பெண்களுக்கே உண்டான வெட்கத்தை வெளிப்படுத்தினார். அப்படியே பயத்தையும் காட்டினார். இவரிடமிருந்தே வெட்கம் மற்றும் பயம் இரண்டும் பிறந்தன. துஷ்டர்களுக்கு இவரைப் பற்றிய உண்மையான அறிவு பிறக்கக்கூடாது என்பதே இவரது இரண்டாவது நோக்கம். 

கே: நான்முகனிடமிருந்து சரஸ்வதி எப்படி பிறந்தார்?

ப: பிருஹதாரண்ய உபநிஷத்தில் சொல்லியிருப்பதைப் போல, அர்த்தநாரீஸ்வர ரூபத்தைப் போல, நான்முகனின் பாதி உடலே சரஸ்வதியின் உடலாக இருக்கிறது. இத்தகைய சரஸ்வதியை பிரம்மன் மணந்து, அனைத்து தேவதைகளையும் படைத்தார்.

கே: ஆண் மற்றும் பெண் கூடினால் வாரிசு உண்டாகும் என்பது நான்முகன் - சரஸ்வதி இவர்களிடமிருந்தே தோன்றியது அல்லவா?

ப: ஆம். முக்கியமாக ஸ்வாயம்புவ மனு மற்றும் ஷதரூபாதேவிகள் பிறந்ததே, நான்முகன் - சரஸ்வதி இவர்களின் சங்கமத்தில்தான். இதிலிருந்தே ஆண்-பெண் கூடினால் வாரிசு மற்றும் குடும்பம் என்னும் முறைகள் வந்தன. 

கே: பிரம்மனின் உடலிலிருந்தே சரஸ்வதி பிறந்தார் என்றால், சரஸ்வதி வாக்-இந்திரியத்திலிருந்து பிறந்தார் என்று சிலர் சொல்கின்றரே?

ப: இது தவறல்ல. இதைப் பற்றி பாகவதத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 

ஹ்ருதி காமோ ப்ருவோ: க்ரோதோ லோபஸ்சாதரதஸ்ச தாத் |
ஆஸ்யத்வாக் ஸிந்தபோ மேட்ரா நிர்ருதி: பாயோரகாஷ்ரய: ||
பாகவதம் 3-13-26

நான்முகனின் இதயத்திலிருந்து காமம், இமைகளிலிருந்து க்ரோதம், கீழ் உதட்டிலிருந்து லோபம், வாக்-இந்திரியத்திலிருந்து சரஸ்வதி, ரகசிய இந்திரியங்களிலிருந்து வருணன், ஆசனவாயிலிருந்து நிரருதி ஆகியோர் பிறந்தனர். 

கே: அப்படியென்றால் சரஸ்வதி இருமுறை பிறந்தாரா?

ப: ஆம். ஒருமுறை பாதி-உடலாகப் பிறந்தார். இன்னொருமுறை வாக்-இந்திரியங்களிலிருந்து பிறந்தார். இது பிரம்மாண்டத்தின் உள்ளே நடந்த ஸ்ருஷ்டி. பிரம்மாண்டத்தின் வெளியே நேராக ஸ்ரீஹரியின் உடலிலிருந்தே பிறந்தார். உத்தம தேவதைகள் அனைவரும் மொத்தம் 14 வகைகளில் பிறப்பர். (இது பொதுவான விதி). தேவதைகள் 14 வகைகளாகப் பிறப்பதால், இவர்களுக்கு அதிக சாதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதே இதன் ரகசியமான பொருள். 

கே: சரஸ்வதிதேவியை அனைவரும் கல்விக்கு அபிமானி தேவதை என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

ப: நான்முகனின் நாக்கிலிருந்து பிறந்ததால், வாக்-அபிமானினி எனப்படுகிறார். அனைத்து வித்யைகளுக்கும் நாக்கு மூலகாரணம் ஆகையால் வித்யாபிமானினி எனப்படுகிறார். இந்த சரஸ்வதியைப் பற்றி தண்டி என்னும் கவி ஒருவர் மிகவும் அழகாக வர்ணிக்கிறார். ‘இதமந்தந்தம: க்ருத்ஸ்னம்ஞ்யாயோத புவனத்ரயம் | யதி ஷப்தாஹ்வயம் ஜ்யோதி: ஆஸம்சாரம் ந தீப்யதே’ - சப்தத்திற்கு அபிமானினியான சரஸ்வதி இல்லையென்றால் மூன்று லோகங்களும் இருள் சூழ்ந்து காணப்படும் என்கிறார். ஆகையால் தெரியவருவது என்னவென்றால் - இந்த சரஸ்வதியே நம் வாழ்க்கைக்கும், இந்த மூன்று உலகங்களுக்கும் ஒளி கொடுக்கும் விளக்கு. 

கே: சரஸ்வதி என்னும் சொல்லிற்கு மூலம் எது? அதன் பொருள் என்ன?

ப: மரியாதை என்னும் பொருள் உள்ள ஸ்ரு என்பதே இதன் மூலம். நிரந்தரமாக பாய்ந்து கொண்டிருப்பவள் என்று பொருள். பேச்சு, மொழி, வேத, புராணம், இதிகாசம் என்று அனைத்து ரூபங்களிலும் எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பவள். அதுமட்டுமல்லாமல், சங்கீதம், சாகித்யம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் இவையும் குருபரம்பரையின் மூலமாகவே வந்துள்ளன. இவை அனைத்திற்கும் ஊற்று சரஸ்வதியே. ‘சரஸ்’ என்றால் அறிவைக் கொடுக்கும் கல்வி/கலைகள் என்று பொருள். 

1. ஸராம்ஸி அஸ்யாம் அஸீதி சரஸ்வதி - அனைத்து வித்யைகளும் இவளிடத்தில் இருப்பதால், இவளுக்கு சரஸ்வதி என்று பெயர். 
2. ஸராம் வாதீதி சரஸ்வதி - எப்போதும் ஸ்ரீஹரியிடம் வசிப்பதால் இவளுக்கு சரஸ்வதி என்று பெயர்
3. ஜலானி அஸ்யாமஸ்தீதி சரஸ்வதி - ஆறுகளில் சிறந்தவள் என்பதால் இவளுக்கு சரஸ்வதி என்று பெயர்.

என்று மூன்று வகையான பொருளைக் கூறலாம். 

கே: சரஸ்வதியின் மக்கள் யார்?

ப: அனைத்து தேவதைகளும் சரஸ்வதியின் மக்களே ஆவர். அதுமட்டுமல்லாமல், குதிரை, கழுதை, யானை, விதவிதமான விலங்குகள், பூச்சிகள், பசுகள், பறவைகள், எறும்பு ஆகியவற்றின் ரூபங்களை சரஸ்வதியே எடுத்து, மொத்தம் 84 லட்சம் யோனிகள் பிறப்பதற்கு முக்கிய காரணமாகியிருக்கிறார். இப்படியே 84 லட்சம் யோனிகளின் ரூபங்களை எடுத்திருக்கிறார். இதுவே சரஸ்வதியின் சிறப்பு. நான்முகப் பிரம்மனும் சரஸ்வதி எடுக்கும் அதே ரூபத்தில் அவரது கணவனாக வந்து படைத்தலுக்குக் காரணமானார். 

கே: வாயுதேவருக்கு அஞ்ஞானம், தவறான ஞானம் ஆகியவை இருப்பதில்லை. ஆனால், அவருக்குக் கீழான தாரதம்யத்தில் (படிநிலையில்) இருக்கும் சரஸ்வதி பாரதியருக்கு அஞ்ஞானம் மற்றும் தவறான ஞானங்கள் இருக்கின்றனவா?

ப: இதற்கான பதில் ஹரிகதாம்ருதசாரத்தில் இருக்கிறது. ‘சதுரவதனன ராணி அதிரோஹித விமலவிஞ்ஞானி’. சரஸ்வதிதேவியின் தூய்மையான ஞானத்திற்கு என்றும் அழிவு / குறைவு இல்லை. மேலும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறார். என்றைக்கும் இவருக்கு கலியின் தொந்தரவு இல்லை. ஸ்ரீஹரியை நினைக்காமல் ஒரு நொடியும் இவர் இருப்பதில்லை. ஆகையாலேயே, அனைத்து தேவதைகளுக்கும் இவரே அபிமானினியாகிருக்கிறார். 

கே: ஹரிகதாம்ருதசாரத்தில் சரஸ்வதிதேவியை ஜனனி என்று அழைக்கின்றனர். ஜனனி என்று நாம் எப்படி பூஜை செய்யவேண்டும்?

ப: பிருஹதாரண்யக உபநிஷத்தில் இதற்கான பதில் மிகவும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. 
’யஸ்தே ஸ்தன: ஷஷயோ யோ மயோபூ: யேன விஷ்வா புஷ்யஸி வார்யாணி | 
யோ ரத்னதா வசுவித்ய: சுதத்ர சரஸ்வதி தமிஹ தாதமே க: ||’ 

அனைத்து தேவதைகளும், சரஸ்வதியின் குழந்தைகளே. அந்த அனைத்து குழந்தைகளுக்கும், சரஸ்வதி முலைப்பால் கொடுத்து, அதன் மூலம் நல்லறிவு முதலான குணங்களைப் புகட்டினார். வெறும் தேவதைகளுக்கு மட்டுமே இப்படி செய்யாமல், அனைத்து விலங்குகளுக்கும் தன்னுடைய ஸ்தனங்களினாலேயே அறிவுத்திறனைப் புகட்டினார். இப்படி அனைத்து உயிரினங்களும் நன்கு பெருகி வளர்ந்து வருவதற்கு சரஸ்வதிதேவியே காரணம். ஆகையாலேயே, தாசர் சரஸ்வதியை ஜனனி என்று மிகச் சரியான பெயரை வைத்து அழைக்கிறார். 

கே: தினமும் நாம் சரஸ்வதியை வணங்கவேண்டுமெனில் எந்த ஸ்லோகத்தை சொல்லவேண்டும்?

ப: ஸ்ரீவாதிராஜர் தனது சரஸபாரதி விலாஸத்தில், சரஸ்வதிதேவியை மிகவும் அற்புதமாக வர்ணித்திருக்கிறார். கீழ்க்கண்ட இரு ஸ்லோகங்களைப் படித்தால் போதுமானது. 

நமாமி வாணீம் ப்ரம்மாணீம் கல்யாணீம் சுத்ததர்மிணீம் |
அகௌகஹாரிணீம் நித்யதருணீம் முக்திகாரிணீம் ||
ஹரௌ பக்திமதீம் பாக்யவதீம் சதத்ருதே: ஸதீம் |
சரஸ்வதீம் புண்யவதீம் ஸ்மராமீந்து சமத்யுதீம் ||

பிரம்மனின் மனைவி, மங்களத்தைத் தருபவர், குறைகளில்லாத தர்மங்களைக் கொண்டவர், பக்தர்களின் பாவங்களை போக்குபவர், எப்போதும் இளமையானவர், முக்திக்கு காரணமானவர், ஸ்ரீஹரியிடம் பக்தி கொண்டவர், செல்வங்களை வழங்குபவர், நற்குணங்களைக் கொண்டவர், நிலவைப் போன்ற ஒளியுடையவர், இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட சரஸ்வதியை வணங்குகிறேன். 

கே: ரிக்வேதத்தில் ‘சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்’ மிகவும் அபூர்வமானதாகும். இதைப் பற்றி அதிக விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கிறது. தயைகூர்ந்து சொல்வீரா?

ப: அனைத்து ரிஷிகளும் ஒருமுறை ஆஷ்வலாயனரிடம் போய் - ஸ்ரீஹரியின் தத்வஞானத்தைப் பெறுவதற்கு நாங்கள் எந்த தேவதையை பூஜிக்க வேண்டும் - என்று கேட்டனர். அப்போது ஆஷ்வலாயனர் உபதேசித்த மந்திரமே ‘சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்’. இதை தினந்தோறும் படிப்பதனால் சிறந்த மெய்யறிவு கிடைக்கிறது. சொல்வதெல்லாம் நடக்கும் சக்தி கிடைக்கிறது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை. 

கே: அவ்வளவு பெரிய உபநிஷத்தை, அவ்வளவு நேரம் இல்லாத நாம் எப்படி படிப்பது?

ப: உபநிஷத் என்று பெயர் பெற்றிருந்தாலும், மிகவும் சிறியதான மந்திரம் இது. ‘ப்ரணோ தேவி சரஸ்வதி வாஜீர்பிர் வாஜினீவதி’ என்று துவங்குகிறது. மற்றும் வேத அத்யயனத்தின் துவக்கத்தில் அனைவரும் சொல்லும் ‘பாவகா ந: சரஸ்வதி வாஜீர்பி வாஜினீவதி’ என்னும் மந்திரமும் இதில் இருக்கிறது. ‘அம்பிதமே நதீதமே’ என்பது இதன் இறுதியில் உள்ள மந்திரம். ஒவ்வொரு மந்திரமும் மிகவும் பொருள் நிரம்பிய, மிகவும் சுவையானதாகும். சரஸ்வதிதேவியின் மகிமையை கொண்டாடுகிறது. 

கே: உபநிஷத்தினை முழுமையாக படிக்க முடியாத பட்சத்தில், நாம் சொல்லவேண்டிய ஒரே ஒரு உபநிஷத் மந்திரம் என்னவென்று சொல்வீர்களா?

ப: இறுதியான மந்திரத்தை தினந்தோறும் சொல்லவேண்டும். 
அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதே |
அப்ரஷஸ்தா இவ ஸ்மஸி ப்ரஷஸ்திமம்ப நஸ்க்ருதி ||

கே: இந்த மந்திரத்தின் பொருள் என்ன?

ப: 
அம்பிதமே = அனைத்து தாய்களுக்கும் தாயான சரஸ்வதியே
நதீதமே = அனைத்து ஆறுகளிலும் உத்தமமானவளே
தேவிதமே = அனைத்து தேவியர்களில் முதலாமவளே
சரஸ்வதே = எப்போதும் ஸ்ரீஹரியைப் பற்றி நினைப்பவளே
அப்ரஷஸ்தா இவ ஸ்மஸி ப்ரஷஸ்திமம்ப நஸ்க்ருதி = ஞானம், அறிவுத்திறன், புகழ் ஆகிய குணங்கள் இல்லாமல் ஆத்மா கெட்டுப்போயிருக்கிறது.

ஆகையால் ஸ்ரீஹரியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம். ஏ சரஸ்வதியே, என் எல்லா தடைகளையும் நீக்கி, நற்குணங்களை என்னிடம் விதைத்து, ஸ்ரீஹரியின் தத்வஞானத்தை எனக்கு அருள்வாயாக. 

கே: ஆறுகளில் சரஸ்வதியே மிகச் சிறந்தவர் என்றீர்கள். இவர் ஆறானது எப்போது?

புராணங்களில் இதற்கு ஒரு சுவையான கதை உள்ளது. செல்வத்திற்கு அபிமானியான லட்சுமிக்கும், கல்விக்கு அபிமானியான சரஸ்வதிக்கும் வேடிக்கையான வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி, சரஸ்வதியிடம் ‘நீனு நீராகு’ (நீ நீராகி விடு) என்கிறார். சரஸ்வதி லட்சுமிக்கு ‘கிடவாகு’ (மரம் ஆகிவிடு) என்கிறார். ஆகையினாலேயே, லட்சுமி துளசிச் செடியானார். சரஸ்வதி ஆறாகி பாய்ந்தார். 

கே: சரஸ்வதி ஆறு எங்கு பாய்கிறது?

ப: பிரயாக க்‌ஷேத்திரத்தில் கங்கை, யமுனைக்கு நடுவே மண்ணுக்கடியில் பாய்கிறாள். ஏனென்றால், முன்னர் ஒரு முறை தன் கணவரான நான்முகப் பிரம்மன், இதே க்‌ஷேத்திரத்தில் பத்து அஸ்வமேத யாகத்தை செய்திருந்தார். மேலும் பழைய காலத்தில் இந்த ஆற்றங்கரையில் அனைத்து ரிஷிமுனிகளும் யக்ஞ, யாகங்களை செய்து வந்தனர் என்று சரஸ்வதி ஆற்றினை அழகாக வர்ணித்திருக்கின்றனர். 

கே: இந்த ஆற்றின் சிறப்பு என்ன?

ப: ரிக்வேதத்தின் 1,3,7,8 மற்றும் 10வது மண்டலங்களில் இந்த ஆறு மிகவும் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 10வது மண்டலத்தின், 75வது சூக்தமானது முழுவதுமாக இந்த ஆற்றையே புகழ்கிறது. ஆற்றின் வர்ணனையுடன், சரஸ்வதியின் வர்ணனையையும் காணமுடிகிறது. சரஸ்வதி மற்றும் ரிஷத்வதி ஆறுகளின் நடுவில் இருக்கும் இடம் ’விலாஸ்யபத’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் மேல் போகும் ரேகைக்கோடு, இந்தியாவின் நட்டநடுவான இடமாகும் என்று வான்வெளி சாஸ்திரத்தின்படி சொல்கின்றனர். இன்றும் இப்படியே சொல்லும் வழக்கம் இருக்கிறது. நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றில் மிகவும் அகன்றதான இந்த சரஸ்வதி ஆறு, சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டது என்று சொல்கின்றனர். தற்போது பிரயாகையில் பூமிக்கு அடியில் ஓடிக்கொண்டிருப்பது நமது பாக்கியமே ஆகும். 

கே: சரஸ்வதி என்று ஆறு மட்டும் இல்லை. மரம்கூட கேள்விப்படுகிறேன். இதற்கும் சரஸ்வதியே அபிமானினி அல்லவா?

ப: ஆம். இந்த செடியினை பயன்படுத்துவதனால், மனோ நோய்கள் பரிகாரம் ஆவதுமட்டுமல்லாமல், நற்புத்தியும் வளர்கிறது. ஞாபகமறதி முதலான பிரச்னைகள் சரியாகின்றன. இந்த சரஸ்வதி மரத்தை ‘ப்ராம்ஹி’ என்று அழைக்கின்றனர். கன்னடத்தில் ‘ஒந்தெலக’ என்கிறார்கள். கிருஷ்ண யஜுர்வேதத்தின் வரும் ‘மேதாம் தேவி சரஸ்வதி’ என்னும் மேதா சூக்தத்தைச் சொல்லி, இந்த இலையின் சாற்றினை குடிக்கவேண்டும். இதனால் அறிவுத்திறன் வளர்கின்றது. 

கே: சரஸ்வதியின் ரூபம் எப்படியிருக்கிறது? இவருக்கு மொத்தம் எவ்வளவு ரூபங்கள் உள்ளன?

ப: சரஸ்வதிக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் உள்ளன. ஆனால் புராணங்களில் 12 ரூபங்களை மிகவும் சிறப்பாக வர்ணித்துள்ளனர். அந்த 12 ரூபங்களும், அவை கைகளில் தரித்திருக்கும் பொருட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1. மஹாசரஸ்வதி - துளசிமாலை, தாமரை, வீணை, புத்தகம்
2. சரஸ்வதி - துளசிமாலை, வீணை, புத்தகம், தாமரை
3. கமலா - வரத ஹஸ்தம், துளசிமாலை, தாமரை, புத்தகம்
4. ஜயா - வரத ஹஸ்தம், தாமரை, புத்தகம், துளசிமாலை
5. விஜயா - வரத ஹஸ்தம், துளசிமாலை, புத்தகம், தாமரை
6. சாரங்கி - வரத ஹஸ்தம், புத்தகம், துளசிமாலை, தாமரை
7. தும்புரி - அபய ஹஸ்தம், துளசிமாலை, வீணை, புத்தகம்
8. நாரதி - வரத ஹஸ்தம், புத்தகம், வீணை, தாமரை
9. சர்வமங்கள - வரத ஹஸ்தம், தாமரை, புத்தகம், அபய ஹஸ்தம்
10. வித்யாதரெ - தாமரை, துளசிமாலை, வீணை, புத்தகம்
11. சர்வவித்யா - துளசிமாலை, தாமரை, புத்தகம், அபய ஹஸ்தம்
12. சாரதா - அபய ஹஸ்தம், தாமரை, புத்தகம், துளசிமாலை 

கே: சரஸ்வதி வைத்திருக்கும் வீணையின் சிறப்பு என்ன?

ப: ’கச்சபே’ என்பது அந்த வீணையின் பெயர். ‘வல்லகே’ என்று இன்னொரு வீணையையும் வைத்திருக்கிறார் என்று சொல்கின்றனர். தேவதைகளில் அனைவரும் ஒவ்வொரு வீணையை ஏந்தியிருக்கின்றனர். 

சிவனின் வீணை ருத்ரவீணை. 
நாரதரின் வீணை மஹதி. 
தும்புருவின் வீணை கலாவதி. 
விஷ்வாவசுவின் வீணை ப்ருஹதி. 
ஸ்யாமளாதேவியின் வீணை மாணிக்ய. 
தக்‌ஷனின் வீணை தும்புரு. 
உதயனனின் வீணை கோஷவதி என்று சொல்கின்றனர். 

பழைய கிரந்தங்களில் சொன்னபடி மொத்தம் 19 வீணைகள் உள்ளன. வீணையின் நாதமானது பத்து விதமான தெய்வீக நாதங்களில் ஒன்றானதாகும். இப்படி சங்கீத உலகத்தில் வீணைக்கு மேன்மை வந்துள்ளது. 

கே: சரஸ்வதியின் வாகனம் எது?

ப: இவரது வாகனம் அன்னப்பறவை. ஹம்ஸவாஹினி என்று இவரை புராணங்களில் வர்ணிக்கின்றனர். மயில்கூட இவரின் வாகனம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இதற்கு எங்கும் சரியான ஆதாரம் காணப்படவில்லை. 

கே: சரஸ்வதிதேவி வெறும் வித்யைக்கு (கல்வி) அபிமானினியா?

ப: ’சங்கீதமபி ஸாஹித்யம் சரஸ்வத்யா ஸ்தனத்வயம்’ என்னும் பிரபல வசனத்தின்படி சங்கீதம், சாகித்யம் என்ற இரண்டும் சரஸ்வதியும் ஸ்தனங்கள். இதன்படியே கல்வியின் பரம்பரை வளர்ந்து வந்துள்ளது. அதனால் வெறும் வேதங்களின் கல்விகளுக்கு மட்டுமல்லாமல், சங்கீதம், நாட்டியம், சிற்பக்கலை, வரைக்கலை, ஆகிய பல விதமான கலைகளும் சரஸ்வதியிடமே தோன்றிவந்தன. அவை அனைத்திற்கும் இவரே அபிமானினியாக இருக்கிறார். 

கே: சரஸ்வதிதேவி பிறந்தது எப்போது?

ப: மாக சுத்த பஞ்சமியன்று சரஸ்வதி தோன்றினார் என்று சொல்கின்றனர். அன்றைய தினம், சரஸ்வதி கோயில்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

கே: ஆஸ்வின மாதத்தில் வரும் நவராத்திரியில், அனைவரும் சரஸ்வதி பூஜை செய்கின்றனர். சரஸ்வதிதேவி அப்போதுதான் பிறந்தாரா?

ப: நவராத்தியில், சஷ்டி திதியில், மூலா நட்சத்திரத்தன்று துவங்கி சரஸ்வதியை விசேஷமாக பூஜிக்கின்றனர். இது சரஸ்வதி தோன்றிய நாள் அல்ல. புராணங்களில் சொல்லியவாறு, இது சரஸ்வதியின் விரதம் மட்டுமே. விரதம் என்பது வேறு, தோன்றிய (அவதரித்த) நாள் என்பது வேறு. இதை அனைவரும் பின்பற்றியே ஆகவேண்டும். 

கே: நவராத்திரி தினங்களில் சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்?

ப: சரஸ்வதியின் மற்றொரு பெயர் சாரதா. சரத் காலத்திற்கு இவரே அபிமானினி ஆனதால் சாரதா எனப்படுகிறார். குமரி முதல் இமயம் வரை அனைவரும் நவராத்திரி விழாவைக் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். நவராத்திரிக்கு இத்தகைய மேன்மை வந்திருப்பதே, சரஸ்வதி பூஜையால்தான்.

கே: நவராத்திரி விழாவின்போது சரஸ்வதிதேவியை எப்படி பூஜிக்கவேண்டும்?

ப: சரஸ்வதியின் சிலையென்றால் அது புத்தகமே. நற்சாஸ்திரங்களின் புத்தகங்களை வைத்து அன்று பூஜிக்கவேண்டும். தியான, ஆவாஹன முதலான 16வித உபசார பூஜைகளை செய்யவேண்டும். ஒவ்வொரு உபசாரங்களின்போது, சரஸ்வதி சம்பந்தமான ஸ்லோகங்கள் உள்ளன. அங்கபூஜை, புஷ்பபூஜை, பத்ரபூஜை மற்றும் அஷ்டோத்தர நாமாவளி பூஜைகளை செய்யவேண்டும். இறுதியில், ‘சதுர்தஷஸு வித்யாஸு ரமதே யா சரஸ்வதே, சதுர்தஷஸு லோகேஷு ஸா மே வாசே வஸேத் ஸதா’ என்று பக்தியுடன் வணங்கவேண்டும். 

கே: மூலா நட்சத்திரத்தன்று மட்டும் சரஸ்வதி பூஜை செய்தால் போதுமல்லவா?

ப: ’மூலேனாவாஹயேத் தேவீம் ஸ்ரவணேன விசர்ஜயேத்’. மூலா நட்சத்திரத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, பூஜையை துவக்கி, ஸ்ரவண நட்சத்திரம் வந்தபோது விசர்ஜனம் செய்யவேண்டும். பொதுவாக சஷ்டியன்று சரஸ்வதி பூஜை துவங்கினால், விஜயதசமியன்று முடிவடைகிறது. இப்படி தினமும் பூஜை செய்யவேண்டும். முடியாவிட்டால், மூலா நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை செய்து, மற்ற நாட்களில் சுருக்கமாக பூஜை செய்யலாம். 

கே: சரஸ்வதி பூஜையன்று புதிய கல்வி / படிப்பை துவங்கலாம் அல்லவா?

ப: தவறு. அனைத்து புத்தகங்களையும் பூஜையில் வைத்து, அன்று அனத்யயனத்தை (படிக்கக்கூடாத நாள்) பின்பற்ற வேண்டும். அன்று புதிய கல்வியை / படிப்பை துவக்கக்கூடாது. வெறும் மந்திர-ஜபம், பாராயணங்களை மட்டுமே செய்வதற்கு அன்று அனுமதி.

கே: சரஸ்வதிதேவி பூமியில் எப்போது அவதரித்தார்? அவரது அவதாரங்கள் எவ்வளவு?

ப: நான்முகப் பிரம்மனுக்கு எப்படி பூமியில் அவதாரம் இல்லையோ, அதைப்போல சரஸ்வதிதேவிக்கும் பூமியில் அவதாரம் இல்லை. பக்தர்களுக்காக பலமுறை மூலரூபத்திலேயே வந்து அருள்கிறார். 

கே: ஸ்ரீமா சாரதாதேவி என்று சரஸ்வதிதேவியை 1850ம் ஆண்டில் அவதரித்தவர் என்று ராமகிருஷ்ண ஆசிரமத்தினர் சொல்கிறார்களே?

ப: ராமகிருஷ்ணரின் மனைவியான சாரதாதேவியை சாட்சாத் சரஸ்வதிதேவியின் அவதாரம் என்று ராமகிருஷ்ண ஆசிரமத்தினர் சொல்கின்றனர். ஆனால் இதற்கு புராணங்களில் ஆதாரம் இல்லை. தேவதைகளின் அவதாரங்களைப் பற்றி வேதவியாஸரோ அல்லது ஸ்ரீமதாசார்யர் சொன்னவை மட்டுமே சரியான ஆதாரங்கள் ஆகும். 

கே: சங்கராச்சாரியரை பின்பற்றுபவர்கள் சரஸ்வதியை விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு பின்புலம் என்ன?

ப: ’காஷ்மீரபுர வாஸினி’ என்பதுபோல, காஷ்மீரத்தில் சாரதாபீடம், அவர்களது சக்திபீடமாக இருக்கிறது. ஹம்ஸ நாமக பரமாத்மனிடமிருந்து பரமஹம்ஸ பரம்பரை வளர்ந்து வந்திருக்கிறது என்று நாம் எப்படி சொல்கிறோமோ, அது போல காஷ்மீரத்து சக்திபீடத்திலிருந்து பரம்பரை வளர்ந்து வந்திருக்கிறது என்கிறார்கள். ’சாரதாம்பா’ என்னும் பெயரிலேயே பல கோயில்களை கட்டியிருக்கின்றனர். அவற்றை சாரதாபீடம் என்று பெயரிட்டே அழைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மதுசூதன சரஸ்வதி என்பதுபோல் சரஸ்வதி என்னும் பெயரையும் வைத்துக்கொள்கின்றனர். 

கே: சிருங்கேரி க்‌ஷேத்திரத்திற்கும் சரஸ்வதிக்கும் என்ன சம்பந்தம்?

ப: காஷ்மீரத்திலிருந்து சாரதாதேவியை சங்கராச்சாரியர் அழைத்து வந்தபோது, முன் செல்லும் சங்கராச்சாரியர் எங்கு தன்னை திரும்பிப் பார்க்கிறாரோ தான் அங்கேயே நின்றுவிடுவேன் என்று கறாராகச் சொன்னாராம். ஆனால், கூடலி அருகில் வந்தபோது, தேவியின் கொலுசு சத்தம் கேட்காததால், சங்கராச்சாரியர் திரும்பிப் பார்த்திடவும், அவர் அங்கேயே நின்றுவிட்டாராம். ஆகையால், கூடலியில் மற்றும் சிருங்கேரியில் சரஸ்வதி நிலைத்திருக்கிறார் என்பது அவர்களின் கருத்து. 

கே: சங்கராச்சாரியாரின் சம்பிரதாயத்தில் சரஸ்வதி பூஜை எப்படி செய்கின்றனர்?

ப: நாம் சரஸ்வதிதேவியை பரசுக்ல-த்ரயர் என்றும், ருஜுகளில் உத்தமரான பிரம்மனின் மனைவி என்றும் அழைக்கின்றோம். ஆனால் அவர்கள் அவரை அப்படி நினைப்பதில்லை. இவரை ஆதிசக்தி என்று சொல்கின்றனர். மேலும் லட்சுமியுடன் இவரை சேர்த்து, ஒரே தாரதம்யத்தில் பூஜிக்கின்றனர். இதெல்லாம் நம்முடைய சாஸ்திரத்திற்கு எதிராக இருக்கிறது. 

கே: ராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், ஸ்மார்த்தர் ஆகட்டும் சரஸ்வதியை விடாமல் பூஜிக்கின்றனர். ஆனால் நம்மிடம் இந்த வழிமுறையே இல்லை. இது தப்புதானே?

ப: நான்முகப் பிரம்மனுக்கு தனியான பூஜை என்பது நம் வழிமுறையில் இல்லை. ஆகையாலேயே, அவரின் மனைவியான சரஸ்வதிதேவிக்கும் தனியாக பூஜை செய்வதென்பது நம் வழக்கத்தில் வரவில்லை. ஆனால், பாரதிதேவிக்கு விதிகளின்படி பூஜை செய்யும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. முக்யபிராணரின் பிரதிமையில் (உருவச்சிலையில்), பிரம்மன் வசிப்பதைப்போல், பாரதிதேவியின் பிரதிமையில் சரஸ்வதிதேவி வசிக்கிறார். ஆகையால் பாரதிதேவிக்குப் பூஜை செய்யும்போது சரஸ்வதிதேவிக்கும் சேர்த்து பூஜை செய்வது நம் சம்பிரதாயம். அதுமட்டுமல்லாமல், எந்த நற்காரியத்தையும் துவக்கும்போது ‘வாணீ ஹிரண்யகர்பாப்யாம் நம:’, என்று சொல்லி நான்முகப் பிரம்மன் மற்றும் சரஸ்வதிதேவிக்கு அந்தச் செயலை சமர்ப்பிக்கும் வழக்கமும் நம்மில் உள்ளது. 

கே: நம் நாட்டில் சரஸ்வதிதேவிக்கு கோயில் இருக்கிறதா?

ப: முன்னர் சொன்னதுபோல், ஸ்மார்த்தர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. சரஸ்வதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், ஜைனர், பௌத்தர்கள்களில்கூட சரஸ்வதியை வணங்கும் வழக்கம் உள்ளது. சரஸ்வதிக்கு அவர்கள் கட்டிய கோயில்களும் உள்ளன. 

கே: சரஸ்வதிக்கு மூன்று ரூபங்கள் உள்ளன. அவை காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி. ஆகையால், தினமும் காயத்ரி ஜபம் செய்யும்போது நாம் சரஸ்வதியை நினைக்கவேண்டும் என்று ஸ்மார்த்தர் சொல்கின்றனர். இது சரியா?

ப: தவறு. காயத்ரி மந்திரத்தில் சூர்யநாராயணனே வணங்கப்படும் தெய்வம் என்று ஸ்ரீமதாசார்யர் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆகையால் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்போது, நான்முக பிரம்மனின் மனைவியான சரஸ்வதியை நினைப்பது அநாவசியம். 

கே: அப்படியென்றால், சரஸ்வதிதேவிக்கு மேலே கூறிய மூன்று ரூபங்கள் இல்லையா?

ப: அப்படியில்லை. மூன்று ரூபங்கள் உண்டு. ஆனால் அந்த ரூபங்களில் அந்தர்யாமியாக ஸ்ரீஹரியே இருக்கிறான் என்று நினைக்கவேண்டும். காயத்ரி என்னும் ரூபத்தினால் காலையில், சாவித்ரி என்னும் ரூபத்தினால் மதியத்தில், சரஸ்வதி என்னும் ரூபத்தினால் மாலையில், நான்முகனின் மனைவியான தேவி அபிமானினியாக இருக்கிறாள். 

கே: அப்படியென்றால், சரஸ்வதியின் காயத்ரி ரூபத்தை, காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது அபிமானினி என்று நினைக்கலாமா?

ப: கண்டிப்பாக நினைக்கலாம். இதையே ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தில், ஸ்ரீமதாசார்யர் தெரிவிக்கிறார் - ‘அபிமானினீ து காயத்ர்யா முக்யா ஸ்ரீ: பரிகீர்திதா |’ காயத்ரி மந்திரத்திற்கு லட்சுமியே முக்கியமான அபிமானினி. சரஸ்வதி அ-முக்கியமான அபிமானினி என்று இதன் பொருள். இப்படி நினைத்து பூஜிப்பது தவறில்லை. ஆனால் சூரியநாராயணனை மறந்து, சரஸ்வதி ஒருவரே காயத்ரி மந்திரத்தின் அதிபதி என்று நினைத்து ஜெபிப்பது தவறு என்பது ஸ்ரீமதாசார்யரின் அபிப்பிராயம். 

கே: சரஸ்வதிதேவிக்கு காயத்ரி முதலான பெயர்கள் எப்படி வந்தன?

ப: ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் இதைப் பற்றி பல விவரங்கள் உள்ளன. சரஸ்வதியின் மகிமைகளைப் பற்றி அங்கு பல இடங்களில் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரியின் காயத்ரி முதலான ரூபங்களை ஆதரிப்பதால், இவருக்கு காயத்ரி ரூபங்கள் வந்திருக்கின்றன என்று பொதுவாக சொல்லலாம். 

கே: சரஸ்வதியையே மகாகாளி, துர்கா, பார்வதி என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? இது சரியா?

ப: இது தவறு. துர்காசப்தசதி, சரஸ்வதியை புகழ்கிறது என்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் ஸ்ரீஹரியின் மனைவியான துர்கையே வேறு, நான்முகனின் மனைவியான சரஸ்வதி வேறு, ருத்ரரின் மனைவியான பார்வதி வேறு. இம்மூவரையும் ஒன்று என்று எப்போதும் அறியக்கூடாது. அப்படி ஒருவேளை இவர்களில் ஒற்றுமையைக் கண்டால் அவர்களுக்குள் இருக்கும் அந்தர்யாமியை நினைக்கவேண்டும். அதிக பலன் வேண்டுமென்றும், விரைவான பலன் கிடைக்கவேண்டுமென்றும், மூன்று தேவியரையும் சேர்த்து வணங்கச் செய்யும் தந்திரங்கள் இவை. இந்த தந்திரத்தின்படி இவர்களைப் பூஜித்தாலும் இவர்களுக்கு ஸ்வரூப-ஐக்கியம் (இவர்கள் மூவரும் ஒன்றாகமுடியாது) என்று தெரிந்து கொள்ளவேண்டும். 

கே: சரஸ்வதிதேவியை எப்படி வணங்கவேண்டும்?

ப: நான்முகனின் நாக்கிலிருந்து பிறந்த சுத்த-சாத்வீகளான சரஸ்வதி, நம் நாக்கிலும் நிரந்தரமாக நிற்கட்டும் என்று வணங்கவேண்டும். ராகவேந்திர ஸ்வாமியின் நாக்கில் சரஸ்வதியின் சன்னிதானம் இருக்கிறது என்று மிகவும் அழகாக வர்ணிக்கிறார். மோட்சம் கிடைக்கவேண்டுமென்றால் சரஸ்வதியின் அருள் நமக்கு கண்டிப்பாகத் தேவை. அவரின் அருள் இல்லையென்றால், நாம் அதோகதிக்கு போகவேண்டியிருக்கும். மேலும் ஒவ்வொருவரும் வித்யாரம்பக் காலங்களில் சொல்லும் ஸ்லோகம் - ‘சரஸ்வதி நமஸ்தும்பம் வரதே காமரூபிணி, வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே சதா’. இந்த ஸ்லோகத்தினால் சரஸ்வதியை வணங்கி, ஸ்ரீஹரியின் தத்வத்தை அறிய முற்படவேண்டும். அதற்காக சரஸ்வதியின் அருளை வேண்டுவோமாக. 

கே: சரஸ்வதியை பூஜிக்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?

ப: அஞ்ஞானம், தவறான ஞானங்களை சரஸ்வதிதேவியிடம் காணமுடியாது. ஆகையினாலேயே இவர் பரசுக்லத்ரயரில் சேர்ந்தார். மிகுந்த சக்தி/கருணை மிக்கவர் என்று அறியப்படுபவர். காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்போது, சரஸ்வதியே காயத்ரி மந்திரத்தின் அதிபதி (போற்றப்படுபவர்) என்று அறியக்கூடாது. அப்படியே, லட்சுமி மற்றும் பார்வதியுடன் சரஸ்வதியும் ஐக்கியம் (ஒரே தாரதம்யத்தைச் சேர்ந்தவர்கள்) என்று நினைக்கக்கூடாது. இப்படி உண்மையான ஞானத்தைப் பெற்று பூஜித்தால் மட்டுமே, சரஸ்வதிதேவியின் பரிபூர்ண அருள் நமக்குக் கிடைக்கும். அப்போது மட்டுமே சரஸ்வதி தேவி ஞானத்தை வழங்குபவர் ஆகிறார். 

கே: சரஸ்வதிதேவியின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: படைப்பின் துவக்கத்தில், நான்முகப் பிரம்மன் படைப்பதைத் துவக்கினார். அப்போது அவரின் ஒவ்வொரு உறுப்பிலிருந்து ஒவ்வொரு தேவதைகள் பிறந்தனர். அவரது நாக்கிலிருந்து சரஸ்வதி பிறந்தார். வாக்கிற்கு அபிமானியான இவர் மிகவும் அழகாக இருந்தார். அப்போது நான்முகன் இவரை விரும்பியதாக, அசுர மோகனத்திற்காக ஒரு நாடகமாடினார். மகளை விரும்பியது தவறு என்பதாக மரீசி முதலானவர்கள் நான்முகனுக்கு உபதேசம் செய்தனர். இதுவும் ஒரு நாடகமே. இதைக் கேட்ட நான்முகன் சரஸ்வதியை திருமணம் செய்யாமல் ஒதுக்கினார். அப்படி ஒதுக்கியவரை துர்ஜனர்கள் ஸ்வீகாரம் செய்தனர். ஆனால், இவர் பிரம்மனின் உண்மையான மனைவி அல்ல. இவரே துஷ்சாஸ்திரங்களுக்கு மற்றும் துர்ஜனர்களுக்கு அபிமானியாகி இருக்கிறார். லௌகிக விஷயங்களில் மிகவும் ஆசைப்படுபவராக இருக்கிறார். இவரையே பிரம்மன் விரும்பியதாக நாடகம் ஆடினார். 

வேதங்களுக்கு அபிமானியான சரஸ்வதியே வேறு. இவர் பிரம்மனின் பாதி-உடலிலிருந்து பிறந்தவர். இவர் பிரம்மனின் நியத-பத்னி (எந்தக் காலத்திலும் எப்போதும் இவரே அவரின் மனைவி), பிரம்மனிடம் போய் சேர்ந்தாள். பிறகு பிரம்ம-சரஸ்வதியர் வெவ்வேறு ரூபங்களை தரித்து, பின் இணைந்தனர். இவர்கள் இணைந்ததில் இரு ஜீவன்கள் பிறந்தன. பிறந்த ஆண் ஜீவனே ஸ்வாயம்புவ மனு. பெண் ஷதரூபாதேவி ஆவார். பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து, இவர்களது பரம்பரை வளர்ந்தது. 

பல விலங்குகள், பறவைகளின் ரூபங்களை சரஸ்வதி ஏற்றார். அதற்கேற்றாற்போல், பிரம்மனும் அந்தந்த விலங்குகள், பறவைகளின் ஆண் ரூபங்களை ஏற்றார். பிறகு அவர்கள் இருவரும் இணைந்ததால் அந்தந்த விலங்குகள், பறவைகளின் கூட்டம் பெருகியது. இப்படி படைப்பிற்கு முக்கியப் பங்கு வகித்த சரஸ்வதிதேவியின் மகிமை மிகவும் அபாரமானது. அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் கல்வியறிவு அளிப்பவரும் இவரே ஆவார். இத்தகைய சரஸ்வதியின் அருள் நமக்கு நிரந்தரமாகக் கிடைக்கட்டும். 

கே: நம் உடலில் சரஸ்வதி எங்கிருக்கிறார்? அவரை எப்படி நினைத்து வணங்கவேண்டும்?

ப: ‘இடா பாகீரதீ நாம்னே பிங்களா யமுனா ஸ்ம்ருதா தயோர்மத்யே கதனாடி சுஷும்னாக்யா சரஸ்வதி’ என்ற வாக்கியத்தின்படி இடா நாடியில் கங்கா, பிங்களா நாடியில் யமுனா, சுஷும்னா நாடியில் சரஸ்வதி ஆகியோர் நிலைத்திருக்கிறார்கள். எப்படி கங்கா, யமுனைக்கு நடுவில் சரஸ்வதி நதியும் ரகசியமாக ஓடிக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல் நம் உடலிலும்கூட கங்கா-யமுனைகளின்  நடுவில் சரஸ்வதியும் ஓடிக்கொண்டிருக்கிறார். சுஷும்னா நாடியின் வழியே இறந்தாலே அது மோட்சத்திற்கான வழியாகும். ஆகையால் மோட்சத்தை விரும்புபவர்கள், சுஷும்னா நாடியில் இருக்கும் சரஸ்வதியை எந்நேரமும் நினைத்து பூஜிக்கவேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***