Wednesday, January 31, 2018

20/40 யக்ஞ அவதாரம்

20/40 யக்ஞ அவதாரம்


ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: யக்ஞ அவதாரம் நடந்தது எப்போது?

பதில்: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில். சுமார் 185 கோடி ஆண்டுகளுக்கு முன்.

கே: தற்போது இருப்பது வைவஸ்வத மன்வந்தரம். ஸ்வாயம்புவ மன்வந்தரம் இருந்தது எப்போது?

ப: முதலில் துவங்கியதே ஸ்வாயம்புவ மன்வந்தரம்.

கே: மொத்தம் எவ்வளவு மன்வந்தரங்கள்? அவற்றின் பெயர்கள் என்ன?

மொத்தம் 14 மன்வந்தரங்கள்.
1. ஸ்வாயம்புவ
2. ஸ்வாரோசிஷ
3. உத்தம
4. தாபஸ
5. ரைவத
6. சாக்‌ஷுஷ
7. வைவஸ்வத
8. ஸாவர்ணி
9. பௌத்ய
10. ரௌச்ய
11. ப்ரம்மஸாவர்ணி
12. ருத்ரஸாவர்ணி
13. மேருஸாவர்ணி
14. தக்‌ஷஸாவர்ணி

கே: இந்த 14 மன்வந்தரங்களிலும் தேவர்களின் பதவிகள் ஒரே மாதிரி இருக்கின்றனவா?

ப: இல்லை. ஒவ்வொரு மன்வந்தரங்களுக்கும் பதவிகள் மாறுபடுகின்றன. முதலாம் மன்வந்தரமான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் ‘யக்ஞ’ என்னும் ஸ்ரீஹரியே இந்திர பதவியில் இருந்தார். இரண்டாம் மன்வந்தரத்தில், ‘ரோசன’ என்னும் பெயரில் வாயுதேவர், இந்திர பதவியில் இருந்தார். இதைப் போல் வெவ்வேறு மன்வந்தரங்களில், சப்தரிஷிகளும் மாறுபடுகின்றனர். தேவதா கணமும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். 

கே: ஸ்வாயம்புவ மன்வந்தரத்திற்கு எதற்கு அந்தப் பெயர்?

ப: ஸ்வாயம்பு என்றால் சதுர்முக பிரம்மா. இவரின் மகனுக்கு ‘ஸ்வாயம்புவ’ என்று பெயர். இவன் முதலாம் மன்வந்தரத்திற்கு அதிபதி ஆனதால், ‘ஸ்வாயம்புவ மன்வந்தர’ என்று அந்த மன்வந்தரம் பெயர் பெற்றது.

கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரி எங்கு அவதரித்தார்?

ப: ருசி பிரஜாபதி மற்றும் ஆகுதி என்னும் தம்பதியரிடம் அவதரித்தார். 

கே: ஆகுதி என்றால் யார்?

ப: சதுர்முக பிரம்மனின் மகனான ஸ்வாயம்புவ மனுவிற்கு ஆகுதி, ப்ரஸூதி, தேவஹுதி என்று மூன்று பெண் வாரிசுகள் மற்றும் உத்தானபாத, ப்ரியப்ரத என்று இரு ஆண் மகன்கள். மூத்தவளான ஆகுதியை ருசி ப்ரஜாபதிக்கு கொடுத்து திருமணம் செய்வித்தனர். 

கே: ப்ரஸூதி, தேவஹுதியர்களிடமும் ஸ்ரீஹரி அவதரித்தாரா?

ப: தேவஹூதியை கர்தம ரிஷி திருமணம் செய்துகொண்டார். இவர்களிடத்தில் கபிலரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மன்வந்தரத்திலேயே அவதாரம் செய்தார். ப்ரஸூதியை தக்‌ஷ பிரஜாபதி மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 16 பெண்கள் பிறந்தனர். கடைசிப் பெண்ணான மூர்த்தி என்பவளுக்கு, ஸ்ரீஹரி, நர, நாராயண, ஹரி, கிருஷ்ண என்று நான்கு ரூபங்களில் அவதரித்தார். 

கே: அப்படியென்றால், யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவமனுவிற்கு பெண்வழிப் பேரன் ஆகிறார். அல்லவா?

ப: ஆம். ஸ்வாயம்புவமனுவின் பெண்ணான ஆகுதியின் மகனாததால், அவருக்கு பேரன் ஆகிறார். அது மட்டுமல்லாமல், ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் தானே இந்திர பதவியில் இருந்து, அந்த மன்வந்தரத்தை அருளினார்.

கே: யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மனுவிற்கு எப்படி அருளினார்?

ப: தவத்தில் இருந்த ஸ்வாயம்புவ மனுவை, பற்பல அரக்கர்கள் சூழ்ந்து தாக்க முற்பட்டபோது, யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி வந்து அவர்களை விரட்டினார். தன் தாத்தாவான ஸ்வாயம்புவ மனுவை யக்ஞ ரூபியான ஸ்ரீஹரி காப்பாற்றினார். 

கே: ஸ்வாயம்புவ மனு, ஏன் தவம் மேற்கொண்டிருந்தார்?

ப: காமம் முதலான போகங்களை விடுவதற்காக ஸ்வாயம்புவ மனு மற்றும் ஷதரூபாதேவியர், தனது அரசாட்சியை உத்தானபாத மற்றும் ப்ரியவிரதருக்குக் கொடுத்துவிட்டு, வானப்ரஸ்த ஆசிரமத்தை ஏற்றனர். ஸ்ரீஹரியின் அருளினை வேண்டி, காட்டிற்குச் சென்று தவம் செய்ய முற்பட்டனர். 

கே: ஸ்வாயம்புவ மனு எங்கு மற்றும் எப்படி தவம் மேற்கொண்டார்?

ப: ‘சுனந்தா’ என்னும் நதிக்கரையில், ஒரே காலில் நின்றவாறு நூறு ஆண்டுகள் கடுந்தவத்தை மேற்கொண்டார். அப்போது ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்தவாறு ஸ்ரீஹரியை வணங்கினார். 

கே: யக்ஞ அவதாரத்தின் கதையை விளக்கவும். 

சதுர்முக பிரம்மனுக்கு 14 பேர் மகனாகப் பிறந்தனர். அவர்களில் மூத்தவரே ஸ்வாயம்புவமனு. இவருக்கு ப்ரியப்ரத, உத்தானபாத என்று இரு மகன்கள் பிறந்தனர். ஆகுதி, தேவஹூதி, ப்ரஸுதி என்று மூன்று பெண்கள் பிறந்தனர். ஆகுதியை ருசி பிரஜாபதிக்கு, தேவஹுதியை கர்தம பிரஜாபதிக்கு, ப்ரஸூதியை தக்‌ஷ பிரஜாபதிக்கும் கொடுத்து மணம் செய்வித்தார். ஆகுதிக்குப் பிறந்தவரே யக்ஞரூபியான ஸ்ரீஹரி. தன் பேரன், சாட்சாத் ஸ்ரீஹரியே என்பதை அறிந்து, ஸ்ரீஹரியின் கருணையை நினைத்து, ஸ்வாயம்புவ மனு அவரைக் குறித்தே தவம் செய்தார். தன் அரசாட்சியைத் துறந்து, விரக்தியடைந்து, தன் மனைவியான ஷதரூபாதேவியுடன், தவம் மேற்கொள்ள காட்டிற்குப் போனார். வானபிரஸ்த ஆசிரமத்தை மேற்கொண்டு, நூறு ஆண்டுகள், யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை நினைத்து தவம் செய்தார். தனக்கு மற்றும் தன்னைப் போன்ற சாதகர்களுக்கு மோட்சத்தை அளிக்கவேண்டும் என்று வேண்டி, ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்து வணங்கினார். 

அப்போது, ருத்ரதேவரிடம் சாகாவரம் பெற்ற அரக்கர்கள் இவரைக் கொல்வதற்கு ஓடி வந்தனர். அப்போது, யக்ஞரூபியான ஸ்ரீஹரி அவதாரமெடுத்து, அந்த அரக்கர்கள் அனைவரையும் கொன்று, தன் பக்தனான ஸ்வாயம்புவ மனுவிற்கு அருளினார். மோட்சத்தை வேண்டும் தன் பக்தர்களை ஸ்ரீஹரி ஓடோடி வந்து அருளுவான் என்று இந்த சம்பவத்தின் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார். 

இத்தகைய யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை நாம் அனைவரும் வணங்குவோமாக.

கே: ஸ்வாயம்புவமனு, ஈசாவாஸ்ய உபநிஷத்தை பாராயணம் செய்தார் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?

ப: பிரம்மாண்ட புராணத்தில்.

ஸ்வாயம்புவ: ஸ்வதௌஹித்ரம் விஷ்ணும் யக்ஞாபிதம் மன: |
ஈஷாவாஸ்யாதிபிர் மந்த்ரை: துஷ்டாவாவஹிதாத்மனா ||

தன் பேரனான யக்ஞ ரூபியான ஸ்ரீஹரியை, ஸ்வாயம்புவமனு, ஈசாவாஸ்ய உபநிஷத் முதலான ஸ்தோத்திரங்களினால் வணங்கினான். 

கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஸ்வாயம்புவ மனுவிற்கு எப்படி அருளினார்?

ப: தன்னைப் போன்ற சாதகர்களுக்கு மோட்சம் கிடைக்கவேண்டுமென்று, ஸ்வாயம்புவ மனு, யக்ஞரூபியான ஸ்ரீஹரியை, ஈசாவாஸ்ய உபநிஷத் முதலான ஸ்லோகங்களினால் வேண்டினார். அப்போது அவரை கொல்வதற்காக பற்பல அரக்கர்கள் ஓடி வந்தனர். அப்போது யக்ஞரூபியான ஸ்ரீஹரி தோன்றி அனைத்து அரக்கர்களையும் கொன்றார். தன் தாத்தாவான ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றினார். 

கே: தன்னை அரக்கர்கள் கொல்ல வருகிறார்கள் என்று ஸ்வாயம்புவ மனுவிற்கு தெரிந்ததா இல்லையா?

ப: யக்ஞரூபியான ஸ்ரீஹரியை வேண்டியவாறு, தியானத்தில் இருந்த ஸ்வாயம்புவ மனுவிற்கு, அரக்கர்கள் வந்ததுகூட தெரியவில்லை. ஒருமனத்துடன் யக்ஞரூபியான ஸ்ரீஹரியையே வேண்டிக்கொண்டிருந்தார். இவரின் நலத்தை பார்த்துக் கொண்டிருந்த, யக்ஞரூபியான ஸ்ரீஹரி, ஓடோடி வந்து அரக்கர்களைக் கொன்றார். 

கே: சதுர்முக பிரம்மனின் மகன் மற்றும் பதினான்கு மனுவிற்கு மூத்தவரான ஸ்வாயம்புவ மனுவை கொல்லும் சக்தி அரக்கர்களுக்கு எப்படி வந்தது?

ப: ருத்ரதேவரின் வரத்தினால் இத்தகைய சக்தியை அந்த அரக்கர்கள் பெற்றிருந்தனர். சாகாவரம் பெற்றிருந்தனர். அதனால், சாட்சாத் ஸ்ரீஹரியே யக்ஞ ரூபியாக வந்து அவர்களைக் கொன்றார். 

கே: ஸ்வாயம்புவ மனு கூறிய ஈசாவாஸ்ய உபநிஷத் அதற்கு முன் இருக்கவில்லையா?

ப: த்யங்-அதர்வண என்ற ரிஷி மற்றும் அகஸ்த்ய ரிஷி இருவரும் இந்த மந்திரத்தை ஏற்கனவே துண்டுதுண்டாக சொல்லியிருந்தனர். ஸ்வாயம்புவமனு இதனை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்தார். மேலும் ஒரே மந்திரத்தை பல ரிஷிகளும் சொல்லலாம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

கே: ஈசாவாஸ்ய உபநிஷத்தில் எவ்வளவு மந்திரங்கள் உள்ளன? யாரை அந்த உபநிஷத் வணங்குகிறது?

ப: மொத்தம் 18 மந்திரங்கள் உள்ளன. யக்ஞ நாமகனான ஸ்ரீஹரியையே இந்த உபநிஷத் கொண்டாடுகின்றது. அதுமட்டுமல்லாமல், வாழ்க்கையில் கண்டிப்பாக அடையவேண்டியதான, விஷ்ணுவின் சரணாரவிந்தங்களை, மிகவும் அழகாக வர்ணிக்கிறது.

கே: ஈசாவாஸ்ய உபநிஷத்தில் மிகவும் முக்கியமான ஸ்லோகம் என்ன?

ப: 
ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |
தேன த்யக்தேன புஞ்சிதா: மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் ||

இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் கடவுளால் படைக்கப்பட்டு, அவற்றில் ஸ்ரீஹரி நீக்கமற நிறைந்திருக்கிறான். அனைத்திற்கும் ஸ்ரீஹரியே உரிமையானவர். நமக்கென ஸ்ரீஹரியால் கொடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுதான் நாம் பற்றற்று இருக்கவேண்டும். பிறர் பொருட்களை விரும்பக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும். 

கே: யக்ஞரூபியான ஸ்ரீஹரியை பூஜிக்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறதா?

ப: இரேபடித்தாய என்னும் வம்சத்தில் வந்த ஒரு கிருஹஸ்தருக்கு, ஸ்ரீமதாசார்யர் யக்ஞநாராயணரின் உருவச்சிலையை கொடுத்திருக்கிறார். அதன்மூலம் யக்ஞரூபியான ஸ்ரீஹரியை பூஜிக்க வேண்டுமென்று தெரியப்படுத்துகிறார். இத்தகைய யக்ஞரூபியான ஸ்ரீஹரியைப் பற்றி அறிந்து, பூஜை செய்து, தன்யர் ஆவோமாக.

கே: ‘யக்ஞஸ்ச லோகாதுத தத்க்ருதான்ன:’ என்னும் நாராயணவர்ம ஸ்லோகத்தின் பொருள் என்ன?

ப: யக்ஞ நாமகனான ஸ்ரீஹரி கெட்ட மனிதர்களிடமிருந்தும், கெட்ட காரியங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றட்டும் என்று நாராயண வர்மத்தில் யக்ஞரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து வேண்டியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் நமக்கு வரும் கெட்ட சிந்தனைகளை, கெட்ட மனிதர்களின் நட்பை, விலக்கவேண்டும் என்றால் யக்ஞனையே சரணடையவேண்டும். அதாவது, நம் அனைவரின் கடமைகளும் யக்ஞம் ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும் செய்யும் கர்ம-தர்மங்கள் அனைத்தும் யக்ஞம் ஆகவேண்டும். நம் மொத்த வாழ்க்கையே யக்ஞம் ஆக வேண்டும். அப்போது யக்ஞரூபியான ஸ்ரீஹரி, மிகவும் மகிழ்ந்து நமக்கு அருளுவார்.

கே: யக்ஞ அவதாரத்தின் மூலம் நமக்குத் தெரியவரும் செய்தி என்ன?

ப: ‘ந மே பக்த: ப்ரணஷ்யதி’- ஹரிபக்தனுக்கு என்றும் அழிவில்லை. ஒருமனத்துடன் யக்ஞரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து தவம் செய்துகொண்டிருந்த ஸ்வாயம்புவமனுவைக் கொல்வதற்கு பல அரக்கர்கள் வந்தனர். அப்போது அவதாரம் செயத யக்ஞரூபி, அந்த அரக்கர்களைக் கொன்று ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றினார். ’ந மே பக்த: ப்ரணஷ்யதி’ என்னும் கீதையின் ஸ்லோகத்திற்கு இதைவிடவும் வேறொரு சரியான உதாரணம் தேவையில்லை. ஸ்வாயம்புவமனுவை காப்பாற்றியது மட்டுமல்லாமல், அந்த மொத்த மன்வந்தரத்திற்கும் தானே இந்திரனாக இருந்து அனைவரையும் காப்பாற்றினார். 

நாமும்கூட ஸ்வாயம்புவ மனுவைப் போல, உலகத்தை மறந்து, ஸ்ரீஹரியின் தியானத்தில் மூழ்கவேண்டும். அப்படிச்செய்தால் நமக்கு என்றென்றும் அழிவில்லை. 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


Tuesday, January 30, 2018

19/40 தாபஸ அவதாரம்

19/40 தாபஸ அவதாரம்.
தாபஸ = Thaapasa.

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கே: கஜேந்திரனுக்கு வரம் அளித்து கஜேந்திரவரதன் என்ற அழைக்கப்பட்ட ஸ்ரீஹரியின் அவதாரத்திற்கு என்ன பெயர்?

ப: ஹரி என்று பெயர். தாபஸ மன்வந்தரத்தில் அவதரித்ததால் ‘தாபஸ-ஹரி’ என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பெயர். ஆனால் பொதுவாக கஜேந்திரவரதனை நாராயண என்றே அழைக்கின்றனர்.

கே: தாபஸ-ஹரி அவதாரம் அந்த க்‌ஷணத்தில் நடந்ததா? அல்லது ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் போல, தாய் தந்தையரை நியமித்து அவர்களிடத்தில் நடந்த அவதாரமா?

ப: பொதுவாக அனைவரும் சொல்வது - கஜேந்திரனின் அபயக்குரலுக்கு ஸ்ரீஹரி உடனடியாக வந்தார் என்பதே. ஆனால், ஹரிமேதா மற்றும் ஹரிணி தம்பதியருக்குப் பிறந்த ஹரி, கஜேந்திர வரதனாக வந்து, கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றினார் என்று பாகவதம் சொல்கிறது. 

கே: சில இடங்களில் இவரை தாமஸ என்று அழைக்கின்றரே?

ப: தாமஸ என்று அழைப்பது தவறு. தாபஸ என்பதே சரி.

கே: கஜேந்திர மோட்சம் நடைபெற்றது எப்போது?

ப: தாபஸ மன்வந்தரத்தில். மூன்று மன்வந்தரங்களுக்கு முன். சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்.

கே: இந்த அவதாரம் இதே ஸ்வேதவராஹ கல்பத்தில் நடைபெற்றதா அல்லது வேறு கல்பத்திலா?

ப: இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சதுர்முகப் பிரம்மனின் நாளுக்கு (பகல்) ஸ்வேதவராஹ கல்பம் என்று பெயர். இதில் இருக்கும் 14 மன்வந்தரங்களில் 7வது மன்வந்தரம் தற்போது நடைபெறுகிறது. 4வது மன்வந்தரத்தில் கஜேந்திர மோட்ச அவதாரம் நடைபெற்றது.

கே: பிரம்மனின் ஒரு நாள் என்றால் என்ன? பிரம்மனின் ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்? ஒரு மன்வந்தரம் எவ்வளவு ஆண்டுகள்?

ப: ஒரு மன்வந்தரம் என்றால் 30,85,75,000 ஆண்டுகள். ஒரு மன்வந்தரத்தில் 71 மகா யுகங்கள் இருக்கின்றன. இப்படி 14 மன்வந்தரங்கள் செல்லவேண்டும். இதுவே பிரம்மனின் ஒரு பகல். மொத்தம் 432,00,00,006 ஆண்டுகள். இதுவே தின-கல்பம். இந்த தினகல்பத்தில் ஸ்ரீஹரியின் தசாவதாரங்கள் மற்றும் இதர அவதாரங்களும் நடைபெறுகின்றன. மொத்தம் பிரம்மனின் ஆயுள் மனிதனின் ஆண்டுக்கணக்கில் 31,104 கோடி ஆண்டுகள்.

கே: 432கோடி ஆண்டுகள் என்னும் பிரம்மனின் பகலில், எவ்வளவு ஆண்டுகள் கழிந்தபிறகு கஜேந்திர மோட்ச அவதாரம் ஆனது என்று அறியவேண்டும்?

ப: ஆம். இது 7வது மன்வந்தரம். சுமார் 200 கோடி ஆண்டுகள் தற்போது ஆகியிருக்கின்றன. இதில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன் கஜேந்திர மோட்ச அவதாரம் நடைபெற்றிருக்கிறது (என்று பொதுவாக சொல்லலாம்).

கே: ராம கிருஷ்ண அவதாரங்கள் நம் பாரதத்தில் இந்தப் பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது என்று குறிப்பாக சொல்லமுடியும். இதைப்போல் கஜேந்திரமோட்சம் நடந்த இடம் எதுவென்று சொல்ல முடியுமா?

ப: இதைப் பற்றி தகவல்களும் உள்ளன. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் பாரத தேசத்திலோ, ஜம்புத்வீபத்திலோ நடைபெற்ற அவதாரம் அல்ல இது. பாற்கடலைச் சுற்றி இருக்கும் புஷ்கர தீரத்தில், நமக்குத் தெரிவது ஜம்புத்வீபம் மட்டுமே. மற்ற த்வீபங்கள் நம் கண்ணிற்குத் தெரிவதில்லை.

கே: அந்த த்வீபங்களில் மனிதர்கள், பசு, விலங்குகள், பறவைகள் என யாரும் இருப்பதில்லையா?

ப: மனிதர்கள் இருப்பதில்லை. ஆனால் மற்றவைகள் இருக்கின்றன. சில த்வீபங்கள் தேவர்களுக்கு சம்பந்தப்பட்டுள்ளன. இந்த புஷ்கர த்வீபம், வருண தேவனுடயதாகும். 10,000 யோஜன உயரமிருக்கும் த்ரிகோண பர்வதத்தில் இவன் வசிக்கிறான். இந்த த்வீபத்தில் ருதுமந்த என்னும் தோட்டம் இருக்கிறது. பல பெண் யானைகளுடன் கஜேந்திரன் ஒரு முறை அங்கே வந்தான்.

கே: த்ரிகூட பர்வதம் 10,000 யோஜனை உயரம் இருப்பது எப்படி சாத்தியம்? 10,000 யோஜனை என்றால் நம் கணக்குப்படி சுமார் 1,60,000 கிலோ மீட்டர்கள். மலைகள் இவ்வளவு உயரம் இருப்பது சாத்தியமா?

ப: பூலோகத்தில் இதுபோன்றதை கண்டதில்லை. நிஜம். புஷ்கர த்வீபத்தில் இவ்வளவு உயரமான மலை இருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அல்லது சாஸ்திரங்களில் ஒரு முழம் அளவை ஒரு யோஜனை என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. த்ரௌபதி சுயம்வர சமயத்தில், பீமன் 10 யோஜனை உயரமுள்ள மரத்தைக் கொண்டு போர் புரிந்தான் என்பதற்கு, 10 முழ உயரம் என்று உரை எழுதியிருக்கிறார்கள். அப்படியே இங்கேயும் இருக்கும் என்று சொல்லலாம். 

கே: த்ரிகூட என்று மலைக்கு பெயர் வருவதற்கு என்ன காரணம்?

ப: அந்த மலையில் மூன்று சிகரங்கள் உள்ளன. இரும்பு, வெள்ளி மற்றும் தங்க சிகரங்கள்.

கே: த்ரிகூட பர்வதத்தில் கஜேந்திரனை முதலை கடிக்கும் நிலைமை எப்படி வந்தது?

ப: பல பெண் யானைகளுடன் சுற்றித்திரிந்த கஜேந்திரன், நீர் குடிப்பதற்காக அந்த ஏரிக்கு வந்து, ஏரியின் நீரை விளையாட்டாக கலக்கினான். அங்கு இருந்த முதலை இதனால் ஆத்திரமடைந்து கஜேந்திரனின் காலைக் கவ்வியது.

கே: முதலையைவிட யானைக்கு சக்தி அதிகம் என்பதால், தன் காலை உடனே விடுவித்திருக்கலாமே? அங்கிருந்த பெண் யானைகள் ஏன் கஜேந்திரனுக்கு உதவவில்லை?

ப: நீரில் இருக்கும்போது முதலைக்கு அதிக பலம். நீருக்கு வெளியே யானைக்கு அதிக பலம். ஆகையால் முதலையிடமிருந்து யானையால் தப்ப முடியவில்லை. பெண் யானைகளும் கஜேந்திரனை தப்புவிக்க முயன்று தோற்றன. ஆனாலும், விடாமல் தொடர்ந்து போராடியது கஜேந்திரனின் வீரத்தைக் காட்டுகிறது.

கே: கஜேந்திரனுக்கும் முதலைக்கும் எவ்வளவு நாட்கள் போர் நடந்தது?

ப: மனித வாழ்க்கைக் கணக்கின்படி சுமார் 1000 ஆண்டுகள் இருவருக்கும் போர் நடந்தது. இவர்களின் போரினைக் கண்டு தேவர்களும் ஆச்சரியமடைந்தனர். இறுதியில் கஜேந்திரனின் சக்தி மிகக் குறைந்து, முதலையின் சக்தி அதிகமடைந்தது.

கே: கஜேந்திரனுக்கு ஸ்ரீஹரியின் நினைவு வரக் காரணம் என்ன?

ப: ஸ்ரீஹரியின் விருப்பப்படியே நான் முதலை வாயில் சிக்கியிருக்கிறேன். பிரம்மாதி தேவர்களையும்கூட அடக்கியாளும் ஸ்ரீஹரியை நானும் சரணடைய வேண்டும் என்று போன பிறவியில் செய்த நற்காரியங்களினால் கஜேந்திரனுக்கு ஹரிஸ்மரணை வந்தது. கஜேந்திரனுக்கு வந்த ஹரிஸ்மரணையினால், கஜேந்திர மோட்சம் என்பது இவ்வளவு புகழ் அடைந்திருக்கிறது.

கே: பாகவதத்தில் கஜேந்திரன் செய்த ஸ்தோத்திரம் மிகப் பெரியதாக இருக்கிறது. மிகவும் கருத்துச் செறிவுடனும், சாஸ்திரங்களின் சுருக்கம் என்பதாகவும் இருக்கிறது. ஒரு விலங்கானது இவ்வளவு அற்புதமாக ஸ்தோத்திரம் சொல்வதற்கு சாத்தியமா என்ன?

ப: முந்தைய பிறவியில் ஒரு சிறந்த விஷ்ணு பக்தரிடமிருந்து இந்த கஜேந்திரன் ஸ்ரீஹரியைப் பற்றி அறிந்திருந்தான். செய்த நற்காரியங்களால் அவரது நினைவுகூட அவனுக்கு இருந்தது. அதனாலேயே, முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரன் - ’ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதத் சிதாத்மகம் | புருஷாயாதி பீஜாய பரேஷாயபி தீமஹி’ - என்று ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினான். 

கே: 25க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களினால் கஜேந்திரன் ஸ்ரீஹரியை வணங்கினான். இதில் நாம் முக்கியமாக நினைவில் வைக்கவேண்டிய ஸ்லோகம் என்ன?

ப:
ஸோந்தஸ்ஸரஸ்யு ருபலேன கைஹீத ஆர்தோ
த்ருஷ்ட்வா கருத்மவதி ஹரின் க உபாத்தசக்ரம் ||
உத்க்‌ஷிப்ய ஸாம்புஜகரம் கிரமாஹ க்ருச்ச்ரான்
நாராயணா அகிலகுரோ பகவன் நமஸ்தே ||

ஏரியில் முதலையிடம் அகப்பட்டிருந்த கஜேந்திரன், கருட வாகனான, சக்ர தாரியான, ஸ்ரீஹரியைக் கண்டு, மிகுந்த பக்தியுடன் தாமரைப்பூவினை அர்ச்சித்து - ’சர்வேஸ்வரனான ஸ்ரீஹரி நாராயணனே, உனக்கு அனேக வந்தனங்கள்’ - என்றான்.

கே: இந்த கஜேந்திர மோட்சத்தின் ரூபத்தை எப்படி நினைக்க வேண்டும்? சற்று விவரமாக விளக்கவும்.

ப: கருடனின் மேல் அமர்ந்து, கஷ்டத்தில் சிக்கியிருக்கும் பக்தனின் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு, ’மணிமய கிரீடகுண்டல ஹார கௌஸ்துப மினுகுதிஹ வைஜயந்திய பூஷணாங்கத ஹணெய கஸ்தூரி திலகத நாமதிந்த எஸகுதிஹ வரஷங்க சக்ரதிந்த ஜணஜணத நூபுரத தந்தபங்க்திய க்ருபேக்‌ஷணத ஸிரிமொகத பீதாம்பராலங்க்ருத’ என்று புரந்தரதாசர் வர்ணிப்பதைப் போல் நினைக்கவேண்டும். 

பொருள்: மணிகள் பொருந்திய கிரீட குண்டலங்கள், மாலை, கௌஸ்துபங்கள் மினுமினுக்கும் வைஜயந்திமாலையுடன் அலங்கரித்து, நெற்றியில் கஸ்தூரி திலகம் தரித்து, சங்கு, சக்ரத்துடன், ஜணஜண என்று ஒலிக்கும் கைவளைகளுடன் கருணை நிறைந்த முகத்துடன், பீதாம்பரம் அணிந்துகொண்டவர்.

கே: தாபஸ-ஹரி கஜேந்திரனை எப்படி அருளினார்?

ப: கருடனின் மேல் அமர்ந்து பறந்துவந்த ஸ்ரீஹரிக்கு, கருடனின் வேகம் குறைவாகப்பட்டது. தானே இறங்கி ஓடிவந்து, கஜேந்திரனுக்குக் கை கொடுத்து மேலே தூக்கினார். நீரிலிருந்து முதலை வெளியே வந்தபிறகு, யானையின் சக்தி அதிகமாயிற்று. முதலையின் சக்தி குறைந்தது. கஜேந்திரன் மூலமாகவே முதலை தோற்கும்படி செய்தார். பிறகு சக்கரத்தைப் பிரயோகித்து, முதலையின் வாயை கத்தரித்தார்.

கே: தாபஸ-ஹரியின் அவதாரத்தின் கதையை தெரிவிப்பீரா?

ப: ஹஹு என்னும் ஒரு கந்தர்வன் இருந்தான். தேவல-முனிவரின் சாபத்தினால் அவன் முதலையாக பிறந்திருந்தான். மந்திரத்யும்னன் என்று இன்னொரு ராஜன் இருந்தான். ஸ்ரீஹரியின் பூஜையில் ஈடுபட்டு, வந்திருந்த முனிவரை சரியாக உபசரிக்காததால், ‘அதிதி-ஸத்கார’ என்னும் பாவத்திற்கு ஆளாகி, அகஸ்த்ய முனிவரின் சாபத்தினால், யானையின் ஜென்மத்தைப் பெற்றிருந்தான். ஸ்ரீஹரியை நினைத்திருந்த பலனால், முந்தைய பிறவியின் நினைவு இவனுக்கு இருந்தது. ஏரிக்கு வந்த இந்த யானையின் காலை, ஹுஹு என்னும் கந்தர்வனான முதலை கவ்வியது. இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. ஆயிரமாண்டுகள் நடந்த அந்த போரில், யானை முழுவதுமாக தோற்றது. வேறு யாரும் கஜேந்திரனின் உதவிக்கு வரவில்லை. முதலையின் மூலமாக எனக்கு இந்தத் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பது நாராயணனே ஆவார். அவரையே நான் சரணடைகிறேன் என்று கஜேந்திரனுக்கு அறிவுக்கண் திறந்தது. கஜேந்திரனின் வாயிலிருந்து ஸ்தோத்திரங்கள் புறப்பட்டன.

கஜேந்திரனின் அபயக்குரலைக் கேட்ட ஸ்ரீஹரி, கருட வாகனமேறி ஓடி வந்தார். ஸ்ரீஹரியைக் கண்ட கஜேந்திரனுக்கு பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஏரியில் இருந்த தாமரையையே பிய்த்து அதை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்து - ‘நாராயணா அகிலகுரோ பகவன் நமஸ்தே’ - என்று சமர்ப்பித்தான். பக்தியுடன் ஒரு புஷ்பத்தை சமர்ப்பித்தாலே போதும், என்னையே நான் தருவேன் என்று இந்த கஜேந்திர மோட்ச சம்பவத்தின் மூலம் ஸ்ரீஹரி செய்துகாட்டினார். கருடன் மேல் ஏறி வந்த ஸ்ரீஹரி தனது சக்ரத்தின் மூலம் முதலையின் வாயை கத்தரித்தார். முதலைக்கும் பாப விமோசனம் அளித்தார். இந்த கஜேந்திர வரதனின் கருணையைக் கண்ட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். நமோ நமோ என்று அவரை வணங்கினர்.

கே: லட்சுமியுடன் இருக்கும் நாராயணன், கருடன் மேல் அமர்ந்து, ஆகாயத்திலிருந்தே சக்கரத்தை முதலை மேல் ஏவினார் என்று வரைபடங்களிலிருந்து தெரியவருகிறதே. இதற்கு என்ன பொருள்?

ப: ஆம். ஆனால் இந்த மாதிரியான கதை அனைத்து இடங்களிலும் இல்லை. ஸ்ரீஹரி முதலில் கருடன் மேலிருந்து இறங்கி, ஏரியிலிருந்து யானையை மேலே இழுத்து, பின்னரே முதலை மேல் சக்கரத்தைப் ஏவினார்.

கே: அனைத்து இடங்களுக்கும் ஸ்ரீஹரி கருட வாகனத்தில் வருவதற்கு என்ன காரணம்?

ப: கருடன் என்றால் வேதம் என்று பொருள். வேதாபிமானியான கருடனின் மேல் அமர்ந்து வருவதனால், தான் எப்போதும் வேதப்ரதிபாத்யன் (வேதங்களால் விளக்கப்படுபவன்) என்று தெரிவிக்கிறார் என்பதே இதன் பொருள்.

கே: கஜேந்திரனைக் காப்பாற்றும் பொருட்டு, முதலைக்கு மோசம் செய்தாரா ஸ்ரீஹரி?

ப: கஜேந்திரனுக்கு மட்டும் அவர் அருளவில்லை. முதலைக்கும்கூட அருளினார். ஆனால், தன் கைகளால் கஜேந்திரனுக்கு அருளி, சக்கரத்தால் முதலைக்கு அருளினார் என்பதை மட்டும் மறக்கக்கூடாது.

கே: சக்கரத்தை ஏவியதற்கான காரணம்?

ப: ஸ்ரீஹரி சக்கரத்தை ஏவுவது வெறும் கொல்வதற்காக மட்டும் அல்ல. பிறருக்கு அருளுவதற்கும் ஆகும். ஸ்ரீகிருஷ்ணன், ஜாம்பவந்தன் மேல் சக்கரத்தை ஏவி, அவனை குறை ஒன்றுமில்லாத அழகிய வாலிபனாக மாற்றினார் என்னும் கதையை நாம் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, இங்கும் முதலை மேல் சக்கரத்தை ஏவி, முதலைக்கும் அருளினார். முதலையாக இருந்த அந்த கந்தர்வன், மகிழ்ச்சியில் ஸ்ரீஹரியின் புகழை ஆடிப்பாடியவாறு அங்கிருந்து கிளம்பினார்.

கே: முந்தைய பிறவியில் கஜேந்திரன் மற்றும் முதலை இரண்டும் என்னவாக இருந்தன?

ப: கஜேந்திரன் தனது முந்தைய பிறவியில், பாண்ட்ய தேசத்தின் மந்திரத்யும்னன் ராஜனாக இருந்தான். அகஸ்த்ய முனிவரின் சாபத்தினால் யானைப் பிறவியை பெற்றிருந்தான். ஹஹு என்னும் கந்தர்வன், தேவல என்னும் ரிஷியின் சாபத்தினால் முதலைப் பிறவியை பெற்றிருந்தான்.

கே: ராஜனின் பெயர் இந்திரத்யுமனன் என்றே அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் கந்தர்வனின் பெயர் ஹோஹு என்கிறார்கள். ஆனால் நீங்கள் மந்திரத்யுமனன் என்றும் ஹஹு என்றும் சொல்கிறீர்கள். இது எப்படி?

ப: இந்திரத்யும்னன் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தாலும், பழைய உரைகளில் மந்திரத்யும்னன் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் கந்தர்வர்களின் பெயர்களை ஹாஹு, ஹோஹு என்கிறார்கள். ஆனால் அவர்களின் நிஜமான பெயர் ஹஹ மற்றும் ஹஹு என்பதே ஆகும். 

கே: ’ஹாஹா ஹூஹூ ஸ்சைவ மாத்யா:’ என்று அமரகோசத்தில் இருக்கிறதே?

ப: அமரகோசத்திற்கும் முந்தைய பாடங்களில் ஹஹ ஹஹு என்றே அந்த கந்தர்வர்களின் பெயர்கள் இருக்கின்றன. சங்கீதத்திலிருந்து இவர்கள் தங்கள் பெயர்களைப் பெற்றிருக்கிறார்கள். ஹஹ மற்றும் ஹஹு என்பது அவ்யயங்களே தவிர ஷப்தங்கள் அல்ல. 

அவ்யய = முன்னிடைச்சொல் / வினைஉரிச்சொல் (Preposition/adverb)
ஷப்த = பெயர்ச்சொல் (Noun).

ஸ்ரீஹரியைத் தவிர வேறு யாருக்காவது அவ்யயங்களுடன் கூடிய பெயர் இருக்கிறது என்றால், அது கந்தர்வர்களுக்கு மட்டுமே ஆகும். 

கே: யானைப் பிறவியில் முந்தைய பிறவியின் நினைவுகள் எப்படி சாத்தியமாயிற்று?

ப: அகஸ்தியர், மந்த்ரத்யும்ன ராஜனுக்கு யானையாகக் கடவாய் என்று சாபம் கொடுத்திருந்தாலும், ஸ்ரீஹரியை வணங்கியதன் பலனாக யானைப் பிறவியிலும் முந்தைய பிறவியின் நினைவுகள் அவனுக்கு இருந்தன. 

கே: சாபத்தைப் பெறுபவர்கள், பாவம் செய்தவர்கள்தானே?

ப: அப்படியில்லை. அவர்களே புண்ணியம் செய்தவர்கள். சாபம் பெற்றவர்களை ஸ்ரீஹரி வேறுவிதமாக அருளுகிறார். பற்பல கதைகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. சாபம் கொடுத்தவர்கள் தங்கள் தவவலிமையை இழக்கிறார்கள். ஆனால் சாபம் பெற்றவர்கள் தங்கள் நற்காரியங்களால் ஞானத்தைப் பெற்று அவன் அருளைப் பெறுகிறார்கள். இதுவே சாபத்தின் விதி. ஆனால் இது அயோக்கியர்களுக்கு பொருந்துவதில்லை.

கே: கஜேந்திர மோட்சத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

ப: 
யோ மாம் ஸ்துவந்த்யனேனாங்க ப்ரதிபுத்ய நிஷாத்யயோ |
தேஷாம் ப்ராணாத்யயோஹம் வை ததாமி விமலாம் கதிம் ||

விடியற்காலையில் எழுந்து யார் கஜேந்திர மோட்ச ஸ்தோத்திரத்தின் மூலம் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு சத்கதியைக் கொடுப்பேன் என்று கஜேந்திர வரதனான நாராயணன் தானே கூறுகிறார். அதனால் ஒவ்வொருவருக்கும் கஜேந்திர மோட்சமே கதி.

கே: அப்படியிருக்கும்போது ஏன் இது நம்மிடம் பழக்கத்தில் இல்லை?

ப: பழக்கத்தில் இருக்கிறது. இன்னும் அதிகபேரிடம் போய்ச் சேரவேண்டும். கும்பகோணத்தில் காவேரி ஸ்நானத்திற்குப் போகும்போது ஸ்ரீராகவேந்திரர், கஜேந்திர மோட்சத்தைச் சொல்லிக்கொண்டே போகிறார் என்று ராகவேந்திர விஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், தினமும் காலையில் கஜேந்திர மோட்சத்தை பாராயணம் செய்தே ஆகவேண்டும். 

கே: கஜேந்திர மோட்சத்தைப் பற்றி காலையில் நினைத்தால் போதும்தானே?

ப: இல்லை. இதே கஜேந்திரமோட்ச சந்தர்ப்பத்தில், சாட்சாத் தாபஸரூபியான ஸ்ரீஹரி, காலை வேளையில் யானையை நினைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஸ்ரீஹரியின் ஆயுதங்கள், அனைத்து தேவர்கள், அனைத்து ரிஷிகள், நதி தேவதைகள் - இந்த அனைவரையும் நினைக்க வேண்டும். இதை ‘லட்சுமீர்யஸ்ய பரிக்ரஹ’ என்னும் மங்களாஷ்டக ஸ்லோகங்களில் ராஜராஜேஸ்வர தீர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆகையால் அனைவரும் ‘லட்சுமீர்யஸ்ய’ என்னும் மங்களாஷ்டக ஸ்லோகங்களை, கஜேந்திர மோட்ச ஸ்தோத்திரங்களுடன் பாராயணம் செய்தலே வேண்டும்.

மேலும் ‘நாராயண நமோ நாகேந்த்ரஷயனாய’ என்று ஸ்ரீபுரந்தரதாசர், பதினொன்று சரணங்களில் பாடியுள்ளதையும் சொல்லவேண்டும். பாகவதத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்சம் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு நான்கு அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கும் கஜேந்திர மோட்சத்தின் சாரத்தை தாசர் இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார். 

ஸ்ரீமதாசார்யார் த்வாதச ஸ்தோத்திரத்தில் ‘அந்த்யகாலே விசேஷத:’ என்று இறுதிக்காலத்தில் ஸ்ரீஹரியை நினைக்கவே வேண்டும் என்று கூறுகிறார். இறுதிக்காலத்தில் ஸ்ரீஹரியின் நினைவு வரவேண்டுமென்றால் கஜேந்திர மோட்சத்தை தினந்தோறும் படிக்கவேண்டும் என்று ஸ்ரீதாசர் ‘சுஞான பதவித்து தேஹாவஸானதொளகே ஸ்ரீவாஸுதேவ ஆஞாபிஸி’ என்று பாடியிருக்கிறார். ஆகையால் தினந்தோறும் தாசரின் இந்தப் பாடலைப் படித்து நாம் அனைவரும் தன்யர் ஆவோமாக.

கே: கஜேந்திரவரத அவதாரத்தின் மூலம் நாம் அறியும் செய்தி என்ன?

ப: கஜேந்திரனின் கதை நம் கதையே ஆகும். கஜேந்திரனின் இடம் த்ரிகூட பர்வதம். சாத்விக, ராமஸ மற்றும் தாமஸ என்று மூன்று குணங்களும் நிரம்பிய நம் உடலும் த்ரிகூடமே ஆகும். த்ரிகூடத்தில் யானை எந்தவித பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் திரிந்ததைப் போல், நாமும் கூட இங்கிருக்கும் இன்பங்களில் நம்மை இழந்திருக்கிறோம். முதலை யானையைக் கடித்து இழுத்ததைப் போல், நம்மையும் வாழ்க்கை / சம்சாரம் என்னும் கடலில், நோய், நொடி, மரணம் ஆகிய பயங்கர விலங்குகள் உள்ளே இழுக்கின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க, ஸ்ரீஹரியே கதி என்று நம்ப வேண்டும். 

அனைத்தையும் மறந்து, பக்தியை கைகொண்டு, அனைத்தையும் நாராயணனுக்கு அர்ப்பணம் செய்து ‘நாராயண அகிலகுரோ பகவன் நமஸ்தே’ என்று வணங்கவேண்டும். அப்போது நம் கஷ்டங்கள் நீங்கும். வாழ்க்கையும் நலமாகும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Monday, January 29, 2018

18/40 தத்தாத்ரேய அவதாரம்

18/40 தத்தாத்ரேய அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: யோக மார்க்கத்தில் முன்னேறுவதற்கு எந்த யோக ஆச்சாரியரின் பாதையை பின்பற்றுவது?

பதில்: உங்களுக்காகவே ஸ்ரீஹரி ’தத்த’ என்னும் அவதாரத்தை எடுத்திருக்கிறார். இவரே யோக சாஸ்திரத்தைத் துவக்கியவர். அனைத்து யோகிகளுக்கும் வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்து ‘யோகிஜனப்ரிய’ என்னும் பெயர் பெற்றவர்.

கே: எனக்கு தியானம் செய்வது மிகவும் பிடிக்கும். ஒரு முறை ஒரு தத்துவவாதியிடம் பயிற்சி பெறப் போயிருந்தபோது, அவர் தத்தாத்ரேய ரூபத்தை அறிமுகப்படுத்தி, தியானம் செய்வதற்கு வழி காட்டினார். இது சரியா தப்பா?

ப: இது தவறில்லை. ஆனால், அவர் உங்களுக்கு முதல் வகுப்பில் என்னென்ன சொல்லிக் கொடுத்தார்?

கே: ‘அனைவரும் சமம் என்று உணரவேண்டும். த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத இவற்றைத் தாண்டி நிற்கவேண்டும்’. மேலும் தன்னை தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று சொல்லிக் கொண்டார். அவர் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது?

ப: ஹாஹா. வெறும் பத்து ஆண்டுகள் தியானம் செய்து சில சித்திகளைப் பெற்றதும், தான் தத்தாத்ரேயரே ஆகுவதென்றால், பழங்கால முனிவர்கள் ஏன் தம்மை மிகச் சிறிவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?

கே: மற்றவரை திட்டுவதெனால் உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. அனைத்து பிரச்னைகளையும் தாண்டி நாம் தியானம் மூலமாக அமைதியை பெறுபவர்கள். நமக்கு தியானம் சொல்லிக் கொடுத்த குரு, தத்தாத்ரேய ரூபம் எனில் அது நமக்கு மகிழ்ச்சிதானே?

ப: மகிழ்ச்சி. உங்கள் நம்பிக்கையைக் குலைப்பது எனது நோக்கமல்ல. ஆனால், ‘எனக்கு தெரிந்ததே உண்மை’, ‘எனக்கு தோன்றியதே தத்வம்’ என்று சொல்பவரிடம் போய் தொலைந்து விடாதீர்கள். 

கே: அப்படியென்றால் தியான யோகிகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களா? அவர்களது குரு பரம்பரை போலியா?

ப: உண்மையின் வழி வேறு. உண்மையை நாடவேண்டுமானால், அதன் பாதையையே தேடிப் பிடிக்கவேண்டும்.

கே: பல புகழ்பெற்ற குருஜிகள் மற்றும் மந்திர சித்தி பெற்றவர்கள் தம்மை தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று சொல்லிக் கொள்கின்றனர். ’ஆம்’ என்று சொல்வதற்கு நமக்கு மனம் ஒப்புவதில்லை. ‘இல்லை’ என்று சொல்வதற்கு சாத்தியம் இல்லை. இந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள்.

ப: அத்தகைய குருஜிகள் தம்மை கடவுள் என்று சொல்வதற்கு சாஸ்திரங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களா இல்லையா? இல்லை என்றால் அவர் போலி என்றாகிறது. ஆம் என்றால் அதே சாஸ்திரங்களில் சொல்லியபடி அவர் கடவுள் இல்லை என்றாகிறது.

கே: எனக்கு தியானம் செய்யவேண்டும் என்ற பைத்தியம் பிடித்திருந்தது. தற்போது ஒரு யோகியிடம் இருக்கிறேன். இவர் எனக்கு பத்து ஆண்டுகளில் குண்டலினி சக்தியை எழுப்புகிறேன் என்றிருக்கிறார். இவருக்கு பணம், புகழ் இவற்றின் மேல் கொஞ்சமும் ஆசை இல்லை. யாருமில்லாத இடத்தில் எனக்கு உபதேசித்த இவரை நான் தத்தாத்ரேயரின் ஸ்வரூபம் என்று வணங்குகிறேன். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: உங்கள் கேள்விக்கு விளக்கமான பதில் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் சித்தி பெற்றதால், அதுவே சரியான வழி என்று சொல்வதற்கில்லை. மேலும் ஸ்ரீஹரி கலியுகத்தில் கண்டிப்பாக அவதாரம் செய்வதில்லை. ஆகையாலேயே ஸ்ரீஹரிக்கு ‘த்ரியுக’ என்று பெயர்.

கே: அப்படியென்றால், தத்தாத்ரேயர் வழிவந்த யோகிகள் அனைவரும் தவறான வழியில் போகிறவர்களா?

ப: நான் அப்படிச் சொல்லவில்லை. தியான யோகத்தில் சித்தி அடைந்தவர்கள் அனைவரும் உண்மையான வழியில் நடக்கிறவர்கள் அல்ல. எவ்வளவோ பேர் ஹடயோகத்தில் சித்தி பெற்று, தாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 10 அல்லது 50 அடி மேலே போகிறார்கள். இவர்களை நீங்கள் என்னவென்று சொல்கிறீர்கள்? இதுவே என் வாதம்.

கே: ஆம். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. சமீப காலமாக தத்தாத்ரேயரை வணங்குபவர்கள் பல இடங்களில் தியான முகாம், யோகா முகாம் ஆகியவற்றை அமைத்து, மக்களை தவறான வழியில் அழைத்துப் போகிறார்கள். இவர்களை நாம் எதிர்க்க வேண்டும் அல்லவா?

ப: இல்லை. ஒருவர் தவறு செய்ததால், அவர் பின் இருக்கும் ஒட்டுமொத்த தர்மத்தையே குற்றம் சொல்வது தவறு. அவர் சொல்வதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, உண்மையான தர்மம் மற்றும் வழியைக் காட்டி, அதில் உறுதியாக இருக்கவேண்டும். 

கே: தத்தாத்ரேய என்றால் என்ன?

ப: பக்தர்களுக்காக தன்னையே கொடுத்தவர் ஆகையால் ‘தத்த’ என்று புகழ்பெற்றவர். அத்ரி ரிஷிகளின் வேண்டுதலின்படி அவரது மகனாக அவதரித்ததால் ‘ஆத்ரேய’ என்ற பெயர். இவ்விரண்டு பெயர்களையும் சேர்த்து உலகத்தில் மற்றும் சாஸ்திரங்களில் பக்தர்கள் ’தத்தாத்ரேய’ என்று அழைக்கின்றனர். 

கே: தத்தாத்ரேய அவதாரத்தின் பின்புலம்?

ப: ‘தேன நஷ்டேஷு வேதேஷு ப்ரக்ரியாஸு மகேஷு ச’ என்று ஹரிவம்சத்தில் சொல்லியவாறு, அந்த காலத்தில் வேதங்கள் அனைத்தும் நாசம் ஆகும் நிலைக்கு வந்தன. உண்மைக்கு வழியில்லாமல், பொய்யானது வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஸ்ரீஹரி, தத்தாத்ரேயராக அவதரித்தார்.

கே: அவதாரம் நடைபெற்ற காலம்?

ப: ஸ்வாயம்புவ மன்வந்தரத்தின் துவக்கக் காலம். சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன். பாகவதத்தில் சொல்லியபடி இது ஸ்ரீஹரியின் ஆறாவது அவதாரம்.

கே: அத்ரி-அனுசுயாவிடம் தத்தாத்ரேயர் ஏன் அவதரித்தார்? எப்படி அவதரித்தார்?

ப: படைத்தல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றுக்கும் காரணமான ஸ்ரீஹரியைக் குறித்து அத்ரி முனிவர் தவம் செய்தார். இவரது மனைவியான அனுசூயையும் விஷ்ணுவுடன், பிரம்ம மற்றும் ருத்ரதேவரையும் பூஜித்து வந்தார். இவர்கள் இருவரின் தவத்திற்கு மெச்சி, மூன்று தேவர்களும் பிரத்யட்சமாயினர்.

கே: தத்தாத்ரேயரின் கதையை விளக்குங்கள்.

ப: கர்தம ரிஷிக்கு தேவஹூதியிடம் மொத்தம் ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். அதில் அனுசுயையும் ஒருவர். அத்ரி முனிவர் இவரை மணம் செய்துகொண்டார். 

உத்தம வாரிசுக்காக அத்ரி முனிவர் அனுசுயாவுடன் ஸ்ரீஹரியைக் குறித்து தவம் மேற்கொண்டார். ஸ்ரீவிஷ்ணுவினை படைத்தல் - காத்தல் - அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமானவர் என்று தன் இதய கமலத்தில் வணங்கினார். இவரின் தவத்தின் பலனாக ஸ்ரீஹரி தோன்றினார். ஸ்ரீஹரியுடன், பிரம்மா மற்றும் ருத்ரரும் வந்தனர். த்ரிமூர்த்திகளையும் கண்ட தம்பதிகள் விழுந்து வணங்கினர். ரிஷப வாகன, ஹம்ஸ வாகன மற்றும் கருட வாகனர்களான த்ரிமூர்த்திகளும் சூலம், கமண்டலம், சக்கரம் முதலான சின்னங்களுடன் வந்து அத்ரி அனுசுயா தம்பதிகளுக்கு அருளினர். வாரிசு உண்டாகட்டும் என்ற வரத்தை அளித்து, தாங்களே வந்து அவதரித்தனர். 

அத்ரி அனுசுயா தம்பதிகளிடம் பிறந்த ஸ்ரீவிஷ்ணு ‘தத்த’ என்ற பெயருடன், சதுர்முக பிரம்மன் ‘சோம’ என்னும் ஆவேச ரூபத்துடன், ருத்ரர் ‘துர்வாச’ என்னும் ரூபத்துடன் அவதரித்தனர். பிரம்மனுக்கு பூலோகத்தில் ஸ்வரூப அவதாரம் இல்லாத காரணத்தால், ஆவேச அவதாரம் செய்தார். 

இந்த தத்தனே உலகத்தில் தத்தாத்ரேயன் என்று புகழ்பெற்றிருக்கிறார். ராம கிருஷ்ண அவதாரங்களைப் போலவே இதுவும் ஸ்ரீஹரியின் அவதாரமே ஆகும். இவரே யோகசாஸ்திரத்தை துவக்கி வைத்தவர். இன்றும்கூட பலரும் தியானம் செய்யும்போது இவரையே தமது குருவாக நினைத்து வணங்குகின்றனர். 

இதே தத்தாத்ரேயன் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு யோக சாஸ்திரங்களை உபதேசித்து, அவரை தத்வஞானியாக மாற்றினார். 

கே: த்ரிமூர்த்திகளின் சங்கமமே தத்தாத்ரேய. அகையாலேயே மூன்று முகங்கள். ஆறு தோள்கள். வலது பக்கத்தின் மூன்று தோள்களில் திரிசூலம், ஜபமாலை, தாமரை ஆகியவற்றை ஏந்தி, இடது மூன்று தோள்களில் சக்ர, சங்கு, கமண்டலத்தை ஏந்தியிருப்பவர். இதுவே தத்தாத்ரேயனின் உருவம் அல்லவா?

ப; இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எந்த சாஸ்திரங்களிலும் தத்தாத்ரேயரை இப்படி வர்ணிக்கவில்லை. தத்தாத்ரேயரின் ஸ்வரூபத்தை இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் பார்க்கலாம்.

கே: விஷ்ணுவை மட்டும் வணங்கியபோது மூன்று தேவர்களும் வந்தனர். இதனால் மூவரும் ஒன்றே என்று தெரிகிறதல்லவா?

ப: பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தைப் படித்தால் அப்படிதான் தோன்றும். ஆனால், பிரம்ம ருத்ரர்களின் உள்ளிருக்கும் விஷ்ணு ரூபம், மற்றும் தனியான விஷ்ணு ரூபம் இம்மூன்றையும் முனிவர் வணங்கியதாலேயே, இந்த மூன்று ரூபங்களிலும் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

கே: அனுசுயாவிடம் பிரம்ம, விஷ்ணு, மகேஸ்வரர்கள் வந்து, நீ நிர்வாணமாக வந்து எமக்கு உணவளிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது அனுசுயா கமண்டலத்தில் இருக்கும் நீரை மூவர்மேலும் தெளிக்கிறார். மூவரும் குழந்தையாக மாறியதும் உணவளிக்கிறார். இப்படியான ஒரு கதை உலகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதுதானே தத்தாத்ரேய அவதாரம்?

ப: இது முற்றிலும் கற்பனையான, கீழ்த்தரமான கதை.

கே: தத்தவழியில் வந்தவர்கள் பலர் மாந்திரீகங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

ப: இதற்கு சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. தத்தாத்ரேயனாக அவதாரம் செய்து, தத்வவாதத்தை எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்தபோது, லட்சக்கணக்கான மக்கள் இவரைப் பின்தொடரத் துவங்கினர். இவரின் சிஷ்யர்கள் ஆயினர். அப்போது ஸ்ரீஹரிக்கு யாருடைய தொடர்பும் வேண்டாம் என்று ஆயிற்று. சுராபானத்தை உருவாக்கினார். மனநிலை சரியில்லாதவர் போல் வீதிகளில் திரிந்தார். பெண்களையும் நாடினர். அதற்குள் மக்கள் அவரைவிட்டு தூர விலகத் துவங்கினர். சில அஞ்ஞானிகள் மட்டும், இதுவே தர்மம் என்று தவறாக நினைத்து, சுராபானத்தைப் பருகத் துவங்கினர். அங்கிருந்தே மாந்திரீகமும் துவங்கியது. ஆனால் மாந்திரீகத்தை ஸ்ரீஹரியே துவக்கினார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. 

கே: கார்த்தவீர்யார்ஜுன, பிரகலாத, யது, அலர்க முதலான சக்ரவர்த்திகள் தத்தாத்ரேயரின் சிஷ்யர்களாயினர் என்று கேள்விப்படுகிறோம். சுராபானம் முதலானவற்றை பயன்படுத்திய இவரின் சிஷ்யர்களாக இவர்கள் எப்படி ஆயினர்?

ப: தத்தாத்ரேயர் சாட்சாத் ஸ்ரீஹரியின் அவதாரம் என்ற அறிவு இவர்களுக்கு இருந்தது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் தத்தாத்ரேயரைக் குறித்து தவம் செய்து, கார்த்தவீர்யார்ஜுனன், அவரிடமிருந்து யோக சாஸ்திரத்தை உபதேசம் பெற்று பின், பெரிய யோகியானார்.

கே: ‘அலர்க’ என்னும் சொல்லிற்கு ‘பைத்தியக்கார நாய்’ என்ற பொருள்தானே? இந்த ராஜனுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது? இவன் ஏன் தத்தாத்ரேயரின் சிஷ்யர் ஆனான்?

ப: சம்சாரத்தில் சிக்கிய அனைவரும் பைத்தியக்கார நாயைப் போலவே அலைகின்றனர். இதைத் தெரிவிப்பதற்காகவே அலர்கனின் தாய் இந்தப் பெயரினை வைத்தாள். இவனும் தத்தாத்ரேயரிடம் உபதேசம் பெற்று பெரிய யோகியானான். 

கே: தத்தாத்ரேயரைப் பற்றியும், தத்தாத்ரேயரின் யோகத்தைப் பற்றியும் ஸ்ரீமதாசார்யார் சொன்னதாக ஏதேனும் தகவல் உள்ளதா?

ப: பாகவத தாத்பர்யத்தில் தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். கீதா தாத்பர்ய, பாகவத தாத்பர்ய ஆகியவற்றில் தத்தாத்ரேய யோகத்தைப் பற்றியும் அவரது வசனங்களைப் பற்றியும் விளக்கியிருக்கிறார். தாத்பர்ய நிர்ணயத்திலும் இதைப்பற்றிய தகவல்கள் உள்ளன. தந்த்ரசார சங்கரஹத்தில் தத்தாத்ரேய மந்திரத்தை உபதேசம் செய்திருக்கிறார். 

கே: தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி நமக்கு தெரியாத பல அபூர்வமான விஷயங்களை சொன்னீர்கள். இன்னும் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறது. என்ன செய்யவேண்டும்?

ப: பாகவதம், ஹரிவம்சம், மார்க்கண்டேய புராணம் இவைகளை படியுங்கள். தத்தாத்ரேய அவதாரத்தைப் பற்றி இருக்கும் குழப்பங்கள் வேறு எந்த அவதாரங்களிலும் இல்லை. உண்மைக்கு ஒரே முகம். இரு முகங்கள் கிடையாது. மூன்று முகங்கள் என்பதோ கிடையவே கிடையாது. இவற்றை அறியாதவர்கள் ஒரே கழுத்தில் பிரம்ம, விஷ்ணு, மகேஸ்வரர் என்று மூவரையும் சேர்த்துவிட்டார்கள். இத்துடன் நிற்காமல் இன்னும் ஏதோதோ தவறான விஷயங்களை சொல்லிவிட்டார்கள். ஆதாரமில்லாத விஷயங்களே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும்போது, ஆதாரம் உள்ள விஷயங்கள் விலைபோவது மிகக்கடினம். இதை புரிந்துகொள்வதற்கு ஸ்ரீஹரியின் தத்தாத்ரேய அவதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியோடு அந்தமாக இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். வழிகாட்டியாக வரும் 100 பேரில் 99 பேர் தவறான வழியையே காட்டுவார்கள். சரியான, ஆதாரமுள்ள வழியைக் காட்டுபவன் ஒருவனே ஆகியிருக்கிறான். இவனின் அறிமுகத்தைப் பெற்று, இப்பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள, அந்த தத்தாத்ரேயனே நமக்கு அருளட்டும்.

மோட்சத்திற்கு செல்வதற்கு தியான யோகமே வழி. அந்த தத்தாத்ரேயரே இந்த வழியில் நம்மை கைபிடித்து அழைத்துப் போகட்டும் என்று பக்தியுடன் அவரை ஒருமுறை வணங்குவோம். 

கே: தத்தாத்ரேய அவதாரம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

ப: நாம் அத்ரியாக, அனுசுயையின் கை பிடித்தால், ஸ்ரீஹரி நமது மகன் ஆவார். காம, க்ரோத, லோப இவைகளை ‘த்ரி’ எனலாம். இந்த மூன்றையும் விட்டவனே ’அத்ரி’. வெறும் அத்ரி ஆனால் போதாது, பொறாமையையும் விடவேண்டும். அப்போது அத்ரியான நாம், அனுசூயையின் கையைப் பிடித்தது போல் ஆகும். காம, க்ரோத, லோப மூன்றையும் விட்டு, பொறாமையில்லாமல் இருந்தால் மட்டும் ஸ்ரீஹரி காட்சி கொடுப்பதில்லை. அனைத்து ஆசையையும் விட்டு, ஸ்ரீஹரியைக் குறித்தே தவம் செய்யவேண்டும். அப்போது ஸ்ரீஹரி பக்தி என்னும் கயிறுக்குக் கட்டுப்பட்டு, தன்னையே கொடுத்துவிடுவார். இப்படியாக, அத்ரி அனுசுயாவிடம் பிறந்த தத்த அவதாரம் நமக்குச் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

கே: தத்தனை எப்படி தியானம் செய்யவேண்டும்?

ப: 
ப்ரோத்யத் திவாகர சமானதனும் சஹஸ்ரசூர்யோரு தீதிதிபிராப்த சமஸ்தலோகம் |
ஞானாபயாங்கிதகரம் கபிலம் ச தத்தம் த்யாயேதஜாதிசமிதிம் ப்ரதி போதயந்தம் ||

உதயசூரியனின் சிகப்பு வண்ணத்தை ஒத்த சரீரத்தைக் கொண்டவர், அளவில்லாத சூரியர்களைக் காட்டிலும் மிகுந்த ஒளியுள்ள கிரணங்களினால் எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர், ஞான மற்றும் அபய முத்திரைகளை தரித்திருப்பவர், நான்முகன், ருத்ரன் ஆகிய தேவர்கள் கூட்டத்திற்கு தத்வஞானத்தை போதிப்பவர், பக்தர்களுக்கு அருளுபவர். இப்படியான கபிலரூபி ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Sunday, January 28, 2018

17/40 கபில அவதாரம்

17/40 கபில அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கேள்வி: சாங்க்ய மதத்தை தோற்றுவித்தவர் கபில. சாங்க்ய மதம் என்றால் என்ன?

பதில்: எண்ணிக்கையின் மூலம் வளர்ந்த மதம் என்று பொருள். 24 தத்வங்களைப் பற்றி முழுமையான தகவல்களைக் கொடுத்து, 25வது தத்வமான ஹரிதத்வத்தைப் பற்றி கொண்டாடிய மதமே சாங்க்ய மதம்.

கே: நம்மைப் பொறுத்தவரை, இயற்கையே (ப்ரக்ருதி) இந்த உலகத்திற்கு காரணம். அதுவே அனைத்தை விடவும் சிறந்தது. இந்த இயற்கை-வாதத்தை வளர்த்தவர் கபிலரூபியான ஸ்ரீஹரிதானே?

ப: நீங்கள் கேட்பது நிரீஷ்வர சாங்க்ய மதம். இதற்கு காரணமானவர் கபிலரூபியான ஸ்ரீஹரி அல்ல.

கே: பௌத்த மதத்திற்கு புத்தன் மூலபுருஷன் ஆனதைபோல், நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கு கபில ரூபியான ஸ்ரீஹரி மூலபுருஷனா?

ப: இல்லை. நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கு மூலபுருஷர் ஈஷ்வரகிருஷ்ண. இவரை சிலர் கபில என்றும் அழைக்கின்றனர். இவர் வேறு, ஸ்ரீஹரியின் ஸ்வரூபமான கபிலனே வேறு.

கே: ஆஸுரீ என்னும் சிஷ்யருக்கு உபதேசித்த கபிலனே சாங்க்ய மதத்தின் மூலபுருஷர் என்று அனைவரும் சொல்கின்றனரே?

ப: நிரீஷ்வர சாங்க்ய மதத்தை தோற்றுவித்தவரும், பாகவதத்தின் சாங்க்ய யோகத்தை உபதேசித்தவரும் வெவ்வேறாக இருந்தாலும், ஆச்சரியம் என்னவெனில் இருவருக்கும் ஒரே பெயர் - கபில. இதைப்போலவே இருவரின் சிஷ்யருக்கும் ஆஸுரீ என்றே பெயர். இந்த ஒற்றுமைகளை கவனிக்காமல், ஸ்ரீஹரியின் ஸ்வரூபமான கபிலனே, நிரீஷ்வர சாங்க்ய மதத்தை தோற்றுவித்த கபிலன் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கின்றனர். 

கே: நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், பாகவதத்தில் கபிலன் உபதேசித்த சாங்க்ய யோகத்திற்கும் என்ன வேறுபாடு?

ப: இயற்கையே (ப்ரக்ருதி) இந்த உலகத்திற்கு காரணம். இயற்கையின் பரிணாம வளர்ச்சியே இந்த உலகம். இப்படி இயற்கையை உயர்த்திச் சொல்லி, ஸ்ரீஹரியை (புருஷ) தாழ்த்தும் மதம் - நிரீஷ்வர சாங்க்ய மதம். கபில ரூபத்தில் ஸ்ரீஹரி உபதேசித்த சாங்க்ய சாஸ்திரத்திற்கு - உண்மையான அறிவுக்கு ஆதரவு அளிக்கும் மதம் - என்று பொருள். 

கே: அப்படியென்றால் இன்றைய விஞ்ஞான சாஸ்திரம் மற்றும் நிரீஷ்வர சாங்க்ய மதம் இரண்டும் ஒன்றேயல்லவா? இந்த விஞ்ஞான சாஸ்திரம், நிரீஷ்வர சாங்க்ய மதம் இவ்விரண்டிற்கும், கபிலரூபியான ஸ்ரீஹரியே மூலபுருஷன் என்று ஏன் சொல்லக்கூடாது?

ப: கபிலன் உபதேசித்த சாங்க்ய சாஸ்திரம், நிரீஷ்வர சாங்க்ய மதம் மற்றும் இன்றைய விஞ்ஞான சாஸ்திரம் - இம்மூன்றும் வெவ்வேறு ஆகும். மேலாகப் பார்க்கையில் இவை முன்றும் ஒன்று போலத் தெரிந்தாலும், ஆழ்ந்து பார்த்தால் பற்பல வேறுபாடுகள் தெரியும். மேலும் நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், விஞ்ஞான சாஸ்திரத்திற்கும், கபிலரூபியான ஸ்ரீஹரியே மூலபுருஷன் என்பதற்கு போதிய தகுந்த ஆதாரங்கள் இல்லை. 

கே: நாம் சொல்லும் பரிணாம கோட்பாடு (theory of evolution) மற்றும் உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவை பிறந்திருக்கின்றன என்னும் கோட்பாடு இவைகளும் சாங்க்ய மதம்தானே?

ப: சாங்க்ய மதத்தில் பரிணாம கோட்பாட்டை ஒப்புக்கொள்வதில்லை. உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவை பிறந்திருக்கின்றன என்னும் விஷயத்தையும் ஒப்புவதில்லை.

கே: ஆனாலும், விஞ்ஞான சாஸ்திரத்தின் கோட்பாடுகள், சாங்க்ய மதம் மற்றும் சார்வாக மதத்தின் கோட்பாடுகளைப் போலவே உள்ளதல்லவா?

ப: ஆம். நிரீஷ்வர சாங்க்ய மதத்திற்கும், சார்வாக மதத்திற்கும், நவீன விஞ்ஞான கோட்பாடுகள் அப்படியே பொருந்தி வருகின்றன என்று சொல்லலாம். எதுவும், வேறு எதற்கும் துவக்கம் (மூலம்) என்று சொல்லமுடியாது. கபிலன் தேவஹூதிக்கு உபதேசித்த சாங்க்ய சாஸ்திரமானது இவை அனைத்தையும்விட வேறானது. 

கே: கபிலன் உபதேசித்த சாங்க்ய சாஸ்திரத்தில் உள்ள அபூர்வமான விஷயங்கள் என்ன?

ப: யம, நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார ஆகிய அஷ்டாங்க யோகா’வைப் பற்றி உபதேசித்திருப்பது மிகவும் அபூர்வமானது. தத்வங்களைப் பற்றி ‘இதமித்தம்’ என்னும் முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணுவின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, தியானத்தின் மூலம் சம்சார சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான சுலபமான வழிகள் இவை. 

கே: சாங்க்ய யோகத்தின் தத்வங்களில் கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

ப: 
‘சேத: கல்வஸ்ய பந்தாய முக்தயோ சாத்மனோ மதம் |
குணேஷ்டு சக்தம் பந்தாய தேஷ்வசக்தம் ஹி யுக்தயோ’ ||
3-26-15

சம்சார பந்தத்திற்கு காரணமாக இருக்கும் மனதே மோட்சத்திற்கும் காரணம். மனது சம்சாரத்தில் ஈடுபட்டால், அதன் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஸ்ரீஹரியிடம் ஈடுபட்டால், மோட்சத்திற்கு காரணம் ஆகிவிடுகிறது. மேலும்,

‘திதிக்‌ஷ்வ: காருணிகா: சுஹ்ருத: சர்வதேஹினாம் |
அஜாதஷத்ரவ: ஷாந்தா: சாதவ: சாதுபூஷணா:’ ||
3-26-21

மோட்சத்திற்கான பாதையில் செல்ல விருப்பமுள்ளவர்கள், மற்றவர்களின் அபராதங்களை பொறுத்துக் கொள்பவர்கள், கருணை உள்ளவர்கள், பிறருக்கு உதவும் உள்ளம் உள்ளவர்கள், யாரையும் எதிரியாக நினைக்காதவர்கள், ஹரிபக்தர்கள், நற்காரியங்களை மட்டுமே செய்பவர்கள் - இவர்கள் சஜ்ஜனர்கள் எனப்படுகின்றனர். இத்தகைய தார்மிக விஷயங்கள் கபிலகீதையில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

கே: கபில அவதாரத்தின் நோக்கம்?

ப: சஜ்ஜனர்களான பக்தர்களுக்கு உபதேசவம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம். ஞான காரியத்திற்காக நடந்த அவதாரம் இது. 

கே: விரக்தியுடன் கர்தம ரிஷிகள் தவம் செய்திருந்தபோது, திருமணம் செய்துகொள் என்று வரமளித்த பிரம்மதேவரின் செயல் தவறுதானே?

ப: கபில நாமக ஸ்ரீஹரியின் அவதாரத்திற்கு காரணமாக இருக்குமாறு, கர்தமருக்கு பிரம்மதேவன் அருளினார். ’கர்தமவீர்யமாபன்னோ ஜக்ஞே அக்னிரிவ தாருணி’ - கபிலரூபியான ஸ்ரீஹரி, கர்தம ரிஷியின் வீர்யத்தில் நுழைந்து, தேவஹூதியிடம் பிறந்தார் என்று பாகவதம் சொல்கிறது. 

கே: ஜட-தேகம் இல்லாத ஸ்ரீஹரிக்கு வீரியத்தில் நுழைவது சாத்தியமா?

ப: அழியக்கூடிய வீரியத்தில் தன் லீலையினால் நுழைந்து, அதை தாயின் உடலில் நுழைந்து, தன்னுடையதே ஆன ஞானானந்தமய ரூபத்தினால் அவதரிக்கிறான் என்று தெரிந்து கொள்ளவேண்டும். 

நாவதாரேஷு ஹரேர்தஹ: ஷுக்லாதி ஸம்பவ: |
ததாபி ஷுக்லஸம்ஸ்த: ஸன் மாத்ருதேஹோ ப்ரவிஷ்யதி ||
விலாப்ய ஷுக்லம் தத்ரைவ கேவலஞானரூபக: |
உதீதி பகவான் விஷ்ணு: காலே லோகம் விமோஹயன் ||

கே: புத்தாவதாரத்தைப் போலவே இந்த கபில அவதாரமும் மனதை வசீகரிக்கும் அவதாரமல்லவா?

ப: இல்லை. ஞானத்தை வளர்ப்பதற்காகவே நடந்த அவதாரம் இது. தாய் தேவஹுதிக்கு உபதேசம் செய்யும் சாக்கில், அனைத்து பக்தர்களையும் மோட்சத்திற்குக் கொண்டுபோகும் அற்புதமான அவதாரம் இது.

கே: இந்த வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து தப்பிக்க பக்தி செய்யவேண்டும். அந்த பக்தியில் பல விதங்கள் உள்ளன என்று கபிலர் உபதேசித்ததை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: புகழ் வேண்டும் என்பதற்காக கடமைகளைச் செய்தால் அது ராஜஸபக்தி. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பக்தி செய்தால் அது சாத்வீகபக்தி. ’யஜேத் யஷவ்யமிதி ய: ப்ருதக் பாவ: ஸ ஸாத்விக:’ என்பதைப்போல் ஒரு கடமையைப் போல் செய்யப்படும் பக்தியே சாத்வீக பக்தி என்று கபிலர் உபதேசிக்கிறார்.

கே: கபிலரின் கதையை சுருக்கமாகச் சொல்லவும்.

ப: கர்தம ப்ரஜாபதி என்பவர், சரஸ்வதி நதிதீரத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். இவரின் வரத்திற்கு மெச்சிய ஸ்ரீஹரி, இவரை கிருஹஸ்தராக வாழ்வதற்கு அருளினார். அந்த வரத்தின் பலனாக, ஸ்வாயம்புவமனு இவரைத் தேடி வந்து, தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். சக்ரவர்த்தியின் மகளான தேவஹூதி மிகவும் அழகானவள். ஆனாலும் முனிவரான கர்மதரை தனது கணவராக வரித்தாள். கர்தம மற்றும் தேவஹூதி இருவரும் இனிய தம்பதிகளாக வாழ்ந்தனர். தேவஹூதி, கர்தமருக்கு பற்பல ஆண்டுகள் தன் சேவையை மகிழ்ச்சியுடன் செய்துவந்தாள். ஒரு இளவரசியாக இருந்தாலும், முனிவரின் மனைவியாக அவரது சேவையை செய்துவந்தாள். கர்தமரும் அவளது சேவையில் மகிழ்ச்சியடைந்தார். இவர்கள் நூறு ஆண்டுகள் காலம் வாழ்க்கையை நடத்தியதில், தேவஹூதிக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். 

வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட நினைத்த தேவஹூதி அதற்காக ஒரு ஆண் குழந்தையை வேண்டினாள். அதற்கு கர்தமர், ஸ்ரீஹரியே கபிலனாக உன்னிடம் அவதரிப்பார் என்று கூறினார். தேவஹூதியும் மிகவும் பக்தியுடன் ஸ்ரீஹரியை வணங்கி வந்தபோது, அவளின் பக்திக்கு இணங்கி ஸ்ரீஹரி, தேவஹூதி-கர்தமர் தம்பதிகளிடத்தில் அவதரித்தார். 

கபிலனின் அவதாரத்திற்குப் பிறகு, கர்தமர் தன் ஒன்பது பெண்களையும் - மரீசி, அத்ரி, அங்கிரஸ, புலஸ்த்ய, புலஹ, க்ரது, வஸிஷ்ட, ப்ருகு, தக்‌ஷன் ஆகியோருக்கு மணம் முடித்தார். பின்னர், கபிலனிடத்தில் வந்து, தாம் சன்யாச ஆசிரமத்தை ஏற்கப்போவதாக அறிவித்தார். பின் தவத்திற்காக காட்டிற்குச் சென்றபிறகு, தேவஹூதி தன் மகனான கபிலனிடமிருந்து சாங்க்ய யோகத்தின் உபதேசத்தைப் பெற்று வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டாள்.

கே: கபிலரூபியான ஸ்ரீஹரி எங்கெங்கு வியாபித்திருக்கிறார்? அவரை எப்படி வணங்குவது?

1. வலது கையில்
2. யக்ஞ சாலையில்
3. கண்களின் கருமணியில்
4. இதயத்தில்
5. தொப்புளில்
6. கங்கை - கடல் சங்கமத்தில்
7. பயணத்தில்
8. துளசிதளத்தில்
9. குதிரையின் பிடரியில்
10. படுக்கையறையில்
11. நைவேத்தியம் செய்யும் வேளையில்
12. வேலைகள் / கடமைகள் செய்து முடிக்கும் நேரத்தில்
13. அழகான பொருட்களில்
14. கல்வி கற்றுக்கொடுப்பவர்களில்
15. பழங்களில்
16. பாதகம் இல்லாத இடங்களில்
17. வளர்ந்த தர்ப்பைகளில்
18. நெருப்பில்
19. ஓடும் நீரில்
20. பாயும் நதிகளில்
21. ஸ்லோகங்களில்
22. குரங்கில்
23. ஆசார சீலர்களாக விளங்குபவர்களில்
24. நாழிகையின் துவக்கத்தில்
25. மேற்கு திசையில்
26. ஒளிரும் மின்னலில்
27. தங்கத்தில்

இந்த எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் கபிலனை, அந்தந்த நேரத்திற்குத் தகுந்தவாறு நினைக்கவேண்டும். இதனால் நமது பயங்கள் நீங்கி, சுபயோகம் வரும் என்று விஜயதாசர் தனது கபில சுளாதியில் தெரிவிக்கிறார். இத்தகைய கபிலனின் அருளைப் பெறுவதற்காக ஞானயோகத்தில் மூழ்கி அவனை த்யானிப்போமாக. 

கே: ‘பாயாத் குணேஷ: கபில: கர்மபந்தாத்’ - குணங்கள் மற்றும் ஐஸ்வர்யங்களால் நிறைந்த கபிலன் கர்ம பந்தனங்களால் நம்மை ரட்சிக்கட்டும் என்பதின் பொருள் என்ன?

ப: தந்த்ரசார சங்க்ரஹத்தில் ஸ்ரீமதாசார்யர், ’ப்ரோத்யத் திவாகர சமானதனும்’ என்னும் த்யான ஸ்லோகத்தின் மூலம் கபில மற்றும் தத்தாத்ரேய ஆகிய இரு ரூபங்களையும் வணங்குகிறார். 

நாராயண வர்மத்திலும் கபில மற்றும் தத்தாத்ரேயர் இருவரும் சேர்ந்தே வணங்கப்படுகின்றனர். இதன் மறைபொருளை பார்க்கவேண்டும். கார்த்தவீர்யார்ஜுனன் முதலான சக்ரவர்த்திகள் தத்தரின் யோகோபதேசத்தினால் நற்கதி அடைந்திருக்கிறார்கள். தாயான தேவஹூதி, மகனின் உபதேசித்த யோக சாஸ்திரத்தினால் நற்கதி அடைந்தாள். ஞான காரியத்திற்காக அவதரித்த இந்த இரண்டு ரூபங்களும் யோக சாஸ்திரத்திற்கு முக்கிய காரணர்களாக இருப்பது, கவனிக்கத்தக்க அம்சம் ஆகும். 

ஆகையால் நம் வாழ்க்கையிலும் யோகத்தையே முக்கிய குறிக்கோளாக்கொண்டு, யோக மார்க்கத்தில் சென்று நற்கதி அடையவேண்டும். சத்தியத்தின் பாதையை காட்டுபவர் ஒருவரே ஆவார். இவனின் அறிமுகத்தைப் பெற்று, நம் பிறவியின் பலனைப் பெற, அந்த தத்தாத்ரேயனே நமக்கு அருளட்டும். 

கே: கபில அவதாரத்தின் செய்தி என்ன?

ப: காலை நேரத்தில் கபிலனை நினைக்கவேண்டும். அப்போது பக்தி வைராக்கியங்கள் ஓரிடத்தில் சேர்கின்றன. பக்தி மற்றும் வைராக்கியம் இரண்டும் ஓர் இடத்தில் சேரும்போது, அங்கு நான் வருவேன் என்னும் செய்தியை கபில தன் அவதாரத்தின் மூலம் தெரிவிக்கிறார். கர்தமன் பக்தியின் அடையாளம். தேவஹூதி வைராக்கியத்தின் அடையாளம். கர்தம - தேவஹூதி திருமணத்தின் மூலம் பக்தி - வைராக்கியத்தின் சங்கமம் ஆனது. மன்வந்தராதிபதியின் மகளான தேவஹூதி மடியாக, பின்னல் போட்டு, எலும்பும் தோலுமாக இருந்த கர்தமரிஷியை மணக்க சம்மதித்தாள். மகளின் விருப்பத்திற்கேற்ப கன்யாதானம் செய்யத் தயாரானான் ஸ்வாயம்புவமனு. இன்றைய பெண்களுக்கு மற்றும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு, தேவஹூதி மற்றும் ஸ்வாயம்புவமனுவே சிறந்த உதாரணங்கள் ஆவர். 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி கபிலனை எப்படி வணங்கவேண்டும்?

ப: 
ப்ரோத்யத் திவாகர சமானதனும் 
சஹஸ்ரசூர்யோரு தீதிதிபிராப்த சமஸ்தலோகம் |
ஞானாபயாங்கிதகரம் கபிலம் ச தத்தம்
த்யாயேதஜாதிசமிதிம் ப்ரதி போதயந்தம் ||

உதயசூரியனின் சிகப்பு வண்ணத்தை ஒத்த சரீரத்தைக் கொண்டவர், அளவில்லாத சூரியர்களைக் காட்டிலும் மிகுந்த ஒளியுள்ள கிரணங்களினால் எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர், ஞான மற்றும் அபய முத்திரைகளை தரித்திருப்பவர், நான்முகன், ருத்ரன் ஆகிய தேவர்கள் கூட்டத்திற்கு தத்வஞானத்தை போதிப்பவர், பக்தர்களுக்கு அருளுபவர். இப்படியான கபிலரூபி ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***